Saturday, August 4, 2012

ஒரு Perfect மெலடி!

     இந்தப் பாடலை முதல் முறை கேட்கும்போது, ஜமுனாராணியின் குரலும், துணையாக வரும் தபலாவும் மட்டும் உங்கள் கவனத்தைக் கவர்ந்து, உயிரை ஆக்ரமித்துக் கொண்டுவிடும். பின்னர், அதனின்று ஒருவழியாக விடுபட்டுக் கவனித்தோமானால் மட்டுமே, வயலின், மாண்டலின், மகுடி, டபிள்பேஸ் போன்ற இன்னபிற வாத்தியங்களும் கவனத்துக்கு வரும்!

     எத்தனை வாத்தியங்கள் இருந்தாலும் அவற்றை சுவாரஸ்யமாகக் கோர்க்கும் வித்தையில் (மெல்லிசை) மன்னர்களுக்கு நிகரேது?

     1957ல் வெளிவந்த ‘மகாதேவி’ திரைப்படத்தில் பட்டுக்கோட்டையின் எழுத்தில், ஜமுனாராணியின் ஒரு சோகமான Perfect மெலடியை, இன்றைய இசையமைப்பாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடத்தை, ரசிக்கலாம் வாருங்கள்!

Sunday, July 29, 2012

ஒரு ’புதிய’ பாடல்!

      எதையோ தேடப்போய் எதுவோ கிடைத்தது என்பார்களே, அதைப்போல் வேறொரு பாடலைத் தேடும்போது, இந்த நல்ல பாடல் கிடைத்தது. அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ளாமல் எப்படி?!

     1970ம் வருடம், இயக்குனர் ஸ்ரீதரின் நிறுவனத்திலிருந்து ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டு சக்கைபோடு போட்டது! ஸ்ரீதரின் சிஷ்யரான என்.ஸி.சக்ரவர்த்தியின் இயக்கத்தில் வெளிவந்த ‘உத்தரவின்றி உள்ளே வா’ என்ற அந்த முழுநீள நகைச்சுவைப் படத்தில் நாகேஷ், ரவிசந்திரன், காஞ்சனா, ரமாபிரபா முதலிய அன்றைய முன்னணி நகைச்சுவை நடிகர்கள் பலர் நடித்திருந்தனர். கண்ணதாசன் - எம்.எஸ்.விஸ்வநாதன் இணைப்பில் அருமையான பாடல்கள் பல இடம் பெற்றிருந்தன.

     நாம் இன்று ரசிக்கவிருக்கும் ‘காதல், காதல் என்று பேச கண்ணன் வந்தானோ’ என்ற பாடலை (எஸ்.பி.பியின் ஹம்மிங்குடன்) சுசீலா அருமையாகப் பாடியிருக்கிறார். பாடலில் ஒரு விசேஷம், தாளத்துக்கு பாடலின் பெரும் பகுதிக்கு கிடாரின் கார்ட்களும், குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் தபலா மற்றும் பாங்கோ டிரம்ஸ் தாளமாகவும்  உபயோகப்படுத்தியிருப்பதுதான். கிடாரின் துணை, சுசீலாவின் குரலை எவ்வளவு இனிமையாக்கியிருக்கிறது, கேளுங்கள்! இடை இசையில் வயலின்களும், குழலும் ஒரே ஒரு இடத்தில் சிதாரும் பாடல் முழுவதும் டபிள் பேஸின் ‘தொம், தொம்’ சத்தமும் ஒரு நல்ல மெலடியை முழுமையாக்கி இருக்கின்றன. இப்போது, சுசீலா, உங்களுக்காக:

Saturday, July 21, 2012

அந்தக்கால ஜீனியஸ்கள்!

        முன்னர் இந்தப் பதிவுகள் ஒன்றில் கே.வி.மகாதேவனை ஜீனியஸ் என்று குறிப்பிட்டிருந்தேன். அது எவ்வளவு உண்மையானது என்பதைச் சமீபத்தில், கலைஞர் தொலைக்காட்சியில் வந்துகொண்டிருக்கும் ‘இன்னிசை மழை’ எனும் நிகழ்ச்சியில் அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. திரு.அப்துல் ஹமீதுடன்  உரையாடும்போது சில விஷயங்களைச் சொன்னார், திரு பஞ்சு அருணாசலம்:

        தமிழ்த் திரையிசையில் மெல்லிசை மன்னர்கள் சக்ரவர்த்திகளாக இருந்தபோது, மகாதேவன் மன்னராகக் கோலோச்சினார் என்றாலும் அப்போது தெலுங்குத் திரையில் மகாதேவன் மட்டுமே சக்ரவர்த்தியாக இருந்தாரென்று சொன்னவர், இன்னொரு முக்கியமான வித்தியாசத்தையும் குறிப்பிட்டார். மன்னர்களால் பெரும்பாலும் மெட்டுக்களே முதலில் உருவாக்கப்பட்டுப் பின்னரே பாடல்கள் எழுதப்பட்டன என்றும், ஆனால் மகாதேவனோ, முழுக்க முழுக்க (எழுதப்பட்ட) பாடல்களுக்கே இசையமைத்தார் என்றும் தெரிவித்தார். அதாவது, கவிஞர்களை, படத்தின் கதையை இயக்குனர்களிடம் கேட்கும்போது மட்டும்தான் அவர் சந்திப்பாராம்!

       சரி, இன்றைய பாடலுக்கு வருவோம்!

       ’தை பிறந்தால் வழி பிறக்கும்’ திரைப்படத்திலிருந்து ஏற்கனவே ஒரு பாடல் கேட்டிருக்கிறோம். இன்று நாம் ரசிக்கப்போகும் பாடலை, கம்பீரமான குரலில் சீர்காழியும், அதற்கு நேரெதிரான மென்மையான குரலில் ஜமுனாராணியும் பாடியிருக்கிறார்கள். கிராமத்து அண்ணன் - தங்கை பாசத்தை அழகாகச் சொல்லி வெற்றி பெற்ற படங்களில் ஒன்று, ’தை பிறந்தால் வழி பிறக்கும்’.  பாடலின் ’மூடு’க்கேற்ப பாடகர்கள் இருவரும் தங்கள் குரலில் எத்தனை கிண்டலையும் கேலியையும் காண்பிக்கிறார்கள், கவனியுங்கள்! வழக்கமான தபலா, டோலக்கின் உருட்டல்கள் மகாதேவனை இனம் காட்டுகின்றன. பாடல் உண்மையில் துல்லியமாக இருந்தபோதிலும், என்னுடைய ஒலிப்பதிவு சுகமாக இல்லை. இருப்பினும் பாடல் இவற்றையெல்லாம் மீறி ரசிக்கத் தூண்டுகிறது - வாருங்கள்!


Wednesday, July 18, 2012

ஒரு இடைவெளிக்குப் பிறகு!

    சில பல தவிர்க்கமுடியாத காரணங்களால்  இந்தப் பதிவுகளின் ரசிகர்களைக் காக்கவைத்தமைக்காக மன்னிக்கவேண்டுகிறேன்!

    இன்று, நமக்காக மீண்டும் பாடவருகிறார், பானுமதி. ஏவிஎம்மின் ’அன்னை’ திரைப்படத்திற்காக சுதர்சனம் அவர்கள் இசையமைப்பில் பாடியிருக்கிறார் அவர். இந்தப் பாடலைக் கேட்கும்போது, (சரணத்தில் ஒரே ஒரு இடத்தைத் தவிர) தபலாவையும் பானுமதியின் குரலையும் மட்டுமே ரசிப்பீர்கள். அவ்வளவு இனிமையான மெட்டு. படத்தில் பின்னணியாக ஒலிக்கும் குரலில் மயக்கவைக்கும் இனிமை.  ஆரம்பத்தில் வரும் வரிகளான, “பெறும் சிரமமின்றி, பிள்ளை பெற்ற’ என்ற இடத்தில் ஒரு தேர்ந்த பாடகி, நடிகை என்பதை ஒரு சிறிய நக்கலைக் குரலில் காண்பித்து, நிரூபிக்கிறார், பானுமதி!

   அந்தக் காலத்திய நாடகப்பாடல்களின் மெட்டு, அமைப்பைக் கொண்டு, தொகையறாவில் (ஆரம்பத்தில் தாளம் இல்லாமல் ஒலிக்கும் பாட்டு - இதுவே முழுப்பாடலாக இருந்தால் விருத்தம் எனப்படும்!)  தொடங்கிக் கடைசியில் உச்ச ஸ்தாயியில் முடியும் பாட்டு இது. கவிஞர் கண்ணதாசனும் விளையாடி இருக்கிறார், கவனியுங்கள்:
        “தூக்கி வளர்த்தவள் தாய் என்றால் அதை
         ஆக்கிக் கொடுத்தவள் பேரென்ன?
         வாங்கிய தாய்க்கே மகனென்றால் அதைத்
         தாங்கிய தாயின் உறவென்ன?”

   இனிமேலும் குறுக்கே நிற்க விரும்பவில்லை - ரசியுங்கள், நண்பர்களே!



  

Monday, June 25, 2012

நன்றி, ஆனந்த (திருச்சி) விகடன்!

இந்த வாரம் (27.06.2012) வெளிவந்திருக்கும் ஆனந்தவிகடன் இதழின் இலவச இணைப்பான ‘திருச்சி விகடனில்’ வலையோசை என்ற தலைப்பில் இந்த ’விட்டு விடுதலையாகி நிற்பாய்!’ எனும் என்னுடைய வலைப்பூவிலிருந்து சில பகுதிகளை அழகான லே-அவுட்டில் வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

குறையென்றும் ஒன்று இருக்கத்தானே செய்யும்?! இற்றைய பதிவுகளில் நாம் ரசித்துக் கொண்டிருக்கும் காலத்தால் அழியாத பழந்தமிழ்த் திரைப்பாடல்களைப் பற்றி அவர்கள் கண்டுகொள்ள வில்லை - நிச்சயமாக அதற்கு ஏதாவது சரியான காரணம் இருக்கும். எனவே, மீண்டும் என் நன்றிகள், திருச்சி விகடனுக்கு!

Tuesday, June 12, 2012

சரச ராணி, கல்யாணி!

     எம்ஜிஆரும் பானுமதியும், பத்மினியும் இணந்து நடித்த ’மதுரைவீரன்’ எனும் தமிழக நாடோடிக் கதை ஒரு மகத்தான வெற்றிப் படமாக உருவாகி ஓடியதல்லவா? மதுரைவீரன் படத் தயாரிப்பாளரான லெட்சுமணன் என்கிற ‘லேனா’ செட்டியார், உடனேயே இன்னொரு நாடோடிக் கதையான ‘தேசிங்கு ராஜா’வை, அதே வெற்றிக் கூட்டணியோடு தயாரிப்பதாக முடிவு செய்து, முதன் முதலில் ஜி.ராமநாதன் இசையில் இரண்டு டூயட் பாடல்களை மட்டும் பதிவுசெய்து வெளியிட்டார். அந்தக் காலத்திய 78 RPM - அரக்கு ரெகார்டாக வெளிவந்த அந்த இரு பாடல்களில் ஒன்றை சீர்காழி-ஜிக்கியும், இன்று நாம் ரசிக்கவிருக்கும் மற்றொன்றை சி.எஸ்.ஜெயராமனும் பானுமதியும் பாடியிருந்தார்கள்.

     ‘லேனா’ செட்டியார் ஒரு பழம்பெரும் தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட பைனான்ஷியர். இந்தத் துறையில் பெருமதிப்போடு வாழ்ந்தவர்.  எம்ஜிஆரின் சொந்த விருப்பு, வெறுப்புகளால் ’ராஜா தேசிங்கு’ படம் தயாரிப்பினை நீண்ட நாட்கள் இழுத்ததனால், லேனா நொந்து நூலாகி திரும்பவும் எழுந்திருக்க முடியாதபடி திரைத்துறையை விட்டே ஒதுங்கிப் போனார். (இந்த மாதிரியாக எம்ஜிஆரால் ஒதுக்கப் பட்டவர்கள் லிஸ்டில் சந்திரபாபு, அசோகன், கடைசியாக ஏ.பி நாகராஜன் போன்ற நமக்குத் தெரிந்த/தெரியாதவர்கள் பலருண்டு!)

      நமது இன்றைய பாட்டான ‘சரசராணி கல்யாணி’ யை உடுமலை நாராயண கவி எழுத, ‘சுரடி’ எனும் ராகத்தில் அமைத்திருக்கிறார், ராம்நாதன். கர்நாடக சங்கீதத்தில் இந்த ராகத்தில் பல பாடல்கள் இருப்பினும், நடனத்திற்கான விரக தாபத்தை வெளிப்படுத்தும் பாடல்களே அநேகம். பாட்டு முழுவதும் ராமநாதனின் ஹார்மோனியம் பாடகர்களைத் தொடர்ந்துவருவதையும், இன்று அருகிவரும் ’மோர்சிங்’ வாத்தியம் (’ட்ஜொய்ங், ட்ஜொய்ங்’ என்று தாளத்தோடு ஒலிக்கிறதே, அதையும்) கவனியுங்கள். தொடக்கத்திலிருந்து ஒரே சீரான, நிதானமான மெட்டும், அதை அருமையாகப் பாடியிருக்கும் ஜெயராமன், பானுமதி குரல்களும்........அமைதியான சூழ்நிலையில் ரசித்துக்கேட்கவேண்டிய பாட்டு, இதோ உங்களுக்காக:



Monday, May 28, 2012

மகாதேவன் எனும் ஜீனியஸ்!

     கர்நாடக சங்கீதத்திலே திரை இசையைப் போலவே எளிதாக மனதைக் கவரும் ராகங்கள் பல உண்டு. சிந்து பைரவி என்ற ராகத்தை எடுத்துக் கொண்டால் நினைவுக்கு வரும் திரைப்பாடல்கள்:  ’என்னை யாரென்று’ (பாலும் பழமும்); ’செண்பகமே’ (எங்க ஊர்ப் பாட்டுக்காரன்) போன்ற ஏராளமான பாடல்கள்! ஆபேரி என்று இன்னொரு ராகம்: ’நகுமோ’ (படையப்பா); ‘ஏரிக்கரையின் மேலே’ (முதலாளி) இன்னபிற பாடல்கள்! நாம் இன்று ரசிக்கப் போகும் பாடலோ, அத்தகைய சாருகேசி என்ற அற்புதமான ராகத்தில் அமைந்துள்ள மெட்டு.

     அநேகமாக எல்லா கர்நாடக சங்கீத ராகங்களிலும் கடவுளரைப் பற்றிய பலவித உணர்ச்சிகளே மிஞ்சியிருக்கும். நாட்டியத்தில் இடம்பெறும், சிருங்காரம் போன்ற உணர்ச்சிகளைப் பெரும்பாலும் இந்த சாருகேசி ராகத்தில் பாட்டு, மெட்டாக அமைத்திருப்பார்கள்.  இந்த அடிப்படை உணர்ச்சிகளை எடுத்துக் காட்டும் லக்ஷணங்களை உள்ளடக்கியது சாருகேசி ராகம். (சீர்காழி கோவிந்தராஜன் திரையில் பாடிய முதல் பாடலான ‘சிரிப்புத் தான் வருகுதையா’ (கல்கி எழுதிய பொய் மான் கரடு நாவலின் திரைவடிவமான ‘பொன்வயல்’ திரைப்படத்தில் வந்தது.) இதே ராகந்தான். இந்தப் பாடலை சீர்காழி ஒரு கச்சேரியில் பாடுவதுபோலத் திரையில் வரும்!) இன்னும் ‘தூது, செல்வதாரடி’ (சிங்காரவேலன்), வசந்தமுல்லை போலே வந்து (சாரங்கதரா), ’தூங்காத கண்ணென்று ஒன்று’ (குங்குமம்) என்ற மிகச் சிறந்த பாடல்கள் எல்லாம் சும்மா ஒரு சாம்பிள் தான்!

     இன்றைய நமது பாடலின் மெட்டு, கே.வி.மகாதேவனால் உருவாக்கப் பட்ட  அருமையான, இனிமையான, சுகமான ஒன்று. 1962ல் வெளிவந்த ‘நீங்காத நினைவு’ படத்திற்காக சுசீலா பாடி மயக்குகிறார். காதலைச் சொல்லுகின்ற ஒரு ராகத்தை, காதலின் சோகத்தைக் குறிக்க மெட்டாக்கிய மகாதேவனின் ஜீனியஸுக்கு இந்தப் பாடல் இன்னுமொரு சான்று.  வயலின்களும், குழல், கிடார், ஸிதார், ட்ரெம்பெட் (Muted - ஒரு அடைப்பானை ட்ரெம்பெட்டின் முகப்பில் பொருத்தி, அதன் ஒலியைப் பெருமளவு குறைத்து விடுவது) இவைகளுடன், பாட்டின் பல்லவிக்கு டேப் எனும் தாளவாத்தியத்தையும், சரணங்களுக்கு தபலாவின் கொஞ்சலையும் உபயோகித்து அசத்துகிறார், கே.வி.எம்.! இதோ, சுசீலாவும் நீங்களும்: