Tuesday, April 13, 2010

அமையுமா அல்லூர் வாழ்க்கை?

மனித மனங்களிலே மண்டிக்கிடக்கின்றன ஏராளமான ஆசைகள். என் ஆசைகளில் முக்கியமான ஒன்று பாரதியின் ‘காணி நிலம் வேண்டும்’ என்ற பாடலில் அவன் தெரிவித்திருந்த அத்தனை சமாசாரங்களையும் அனுபவிக்க வேண்டும் என்பது!

அதற்கும், மேற்கண்ட தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? பொறுங்கள்! பாரதியின் பாடல் மட்டுமல்ல, கவிதையிலே பாரதியும், எழுத்திலே தி.ஜா., (உயிர்த்தேன், மோகமுள், அம்மா வந்தாள்), தேவன் (மிஸ்டர் வேதாந்தம்), கி.ராஜநாராயணன் போன்ற சிலரின் பல படைப்புகளிலே ஒன்றினால் உண்டாகுமல்லவா? அந்த அமைதியான கிராம வாழ்க்கையினை அனுபவிக்கும் ஏக்கத்துடன் இருந்தபோது பாடலின் ஒரு பகுதி நிறைவேறும் வாய்ப்புக் கிட்டியிருக்கிறது!

எவ்வளவோ இடங்களுக்குச் செல்கிறோம். ஆனால் மனம் லயிப்பது என்னவோ சில இடங்களில் தான், சில இதயங்களுடன் தான்! அப்படி எனைக் கவர்ந்த இடங்களில் முதன்மையான ஒன்று திருச்சியின் அருகே, காவிரிக்கரையில் அமைந்திருக்கும் அல்லூர் கிராமம். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை சென்றிருந்தபோது அந்த ஊரின் மேல் ஏற்பட்ட காதல் என்னுள்ளேயே கனன்று கொண்டிருந்தது என்றாலும் அது நிறைவேறும் வேளை இப்போதுதான் வந்தது!

இன்று வரை பார்த்துக்கொண்டிருந்த உத்தியோகத்திலும், அங்கே எனக்களிக்கப்பட்ட மரியாதையிலும் எந்தவிதக் குறைபாடும் இல்லாத நிலையில், என்னுடைய சுகாதாரமும் அதனால் ஏற்படும் சோர்வும் என்னைக் கட்டாய ஓய்வை நோக்கித் தள்ளிவிட்டன. அருமை நண்பர் ரவிகுமாரும் பெருந்தன்மையோடு என்னை விடுவிக்க ஒப்புக்கொண்டார். 2010 ஏப்ரல் 1ந் தேதி முதல் நான் விலகிக் கொள்வதாக முடிவானது. (இந்த இடத்தில், ரவி மற்றும் அவர் குடும்பத்தினரின் மூலம் எனக்கு இதுவரை கிடைத்த சலுகைகளையும் நன்மைகளையும் நான் குறிப்பிட மறந்தால், நன்றி கொன்றவனாவேன்.)

இடம் மாற வேண்டிய ஏற்பாடுகள் செய்யவேண்டுமல்லவா? ஏப்ரல் 5ந் தேதி புறப்பட்டேன், அல்லூர் நோக்கி. அங்கே தற்போது குடியிருக்கும் சாந்தி-குஞ்சிதம் தம்பதியினரின் உதவியுடன் எனக்கான வீடு தேடும் பணி தொடங்கியது. அல்லூரைப் பொறுத்த வரையில், அந்த அக்ரஹாரத்தில் இருந்த சாலை மட்டுமே கான்க்ரீட் ஆக மாறியிருந்தது. தெருவிலிருந்த வீடுகளில் எந்தவித குறிப்பிடத்தக்க மாறுதல்களும் தெரியவில்லை. அதே அமைதியான, 40 ஆண்டுகளுக்கு முந்தைய, ஏதும் பெரிதான மாறுதல்கள் இல்லாத அல்லூர் தான்! அதே பழைய சிவன், பெருமாள், பிடாரி கோவில்கள்தான்! அதே காவிரியும், அதே ‘மேக்குடி’ ரயில் நிலையமும் தான்!

அல்லூர் என்கிற (ஒரு அக்ரஹாரமும், மற்றும் சில வீடுகளும் கொண்ட) அழகான சிறு கிராமம், முன்பே குறிப்பிட்டதுபோல காவிரிக்கரைக்கும், ’மேக்குடி’ என்கிற ரயில் நிலையத்திற்கும் நடுவே அமைந்திருக்கிறது. திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து அடிக்கடி பேருந்துகள் வந்து போய்க்கொண்டிருக்கின்றன. வீடுகள் எல்லாமும் அநேகமாக 30 அடி அகலமும் 100 அடிக்குக் குறையாத நீளமும் கொண்டவை. திண்ணை, ரேழி, கூடம், இரண்டாம் கட்டு என்கிற சமையலறை, பின்னர் (அளவில்) கூடத்துக்கு நிகரான வானம் பார்த்த முற்றம், மூன்றாம் கட்டு தவிர மரம், செடி கொடிகளுடன் கூடிய பின் கட்டு என்று போய்க்கொண்டே இருக்கிறது. தினமும் சில முறை வீட்டில் மேலும் கீழும் நடந்தால் போதும், வேறு நடைப்பயிற்சியே தேவையில்லை! அநேகமாக எல்லா வீடுகளிலும் ஒரு மாடியும் ஊஞ்சலும் உண்டு. வாசலிலிருந்து பார்த்தால் புழக்கடை வரை தெரிகிறது. கூடத்தில் வாசலைப்பார்த்து உட்கார்ந்தால் காற்று கொட்டுகிறது. வீடுகளின் மேற்கூறை நல்ல உயரத்தில் இருப்பது இதற்குத் துணை செய்கிறது.........

எனது நல்ல நேரமோ அல்லது வேறே ஏதாவதோ, அதே அக்ரஹாரத்தில் ஒரு வீடு காலியாகப் போகிறது என்கிற தகவல் அறிந்ததும் அந்த வீட்டின் சொந்தக்காரரைப் பார்த்தேன். என்னுடைய சரித்திரத்தை விலாவாரியாகத் தெரிந்துகொண்டவர், தற்போது குடியிருப்பவர் இந்த மாத முடிவிற்குள் காலி செய்ய இருப்பதாகவும், அதன் பின்னர், நான் குடி வருவதில் தனக்கு மகிழ்ச்சிதான் என்றும் கூறியிருக்கிறார். இனி, ஆண்டவன் விட்ட வழி! படங்களைப் பாருங்களேன்....

Saturday, February 20, 2010

திருச்சி, தஞ்சை, திருவையாறு-ஒரு படக்கண்ணோட்டம்!

சமீபத்தில் திருவையாற்றில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றிய எனது குறிப்பைப் படித்திருப்பீர்கள். அதே சுற்றுலாவில் நான் எடுத்த படங்கள் சில இங்கே உங்கள் பார்வைக்கு. தஞ்சையில் கருவறை தவிர மற்ற எந்த இடத்திலும் படம் எடுத்ததைத் தடை செய்ய யாரும் முன்வரவில்லை என்பது ஆறுதலளிக்கும் அனுபவம். இத்தனைக்கும் காவலர்களின் நடமாட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. இனி, படங்களும், நீங்களும்.....




நன்றி!

Friday, February 19, 2010

அண்ணலின் சமாதியில் ஆவேசம்!

 
Posted by Picasa


இந்தப்படத்துக்குப் பின்னால் ஒரு சிறிய நிகழ்ச்சியும் பெரிய ஆதங்கமும் இருக்கிறது. கர்நாடக இசை பற்றிக் கொஞ்சம் பரிச்சயம் உள்ளவர்களுக்கு, இது ஸ்ரீ தியாகராஜருடைய சமாதி என்பதும் அவருடைய உருவச்சிலை என்பதும் நிச்சயம் தெரிந்திருக்கும். சமீபத்தில் அங்கே செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.முதல் முறையாகச் செல்வதனால் மிகுந்த ஆவலோடு, சற்று நேரம் அமைதியாக அமர்ந்து அஞ்சலி செலுத்தலாம் என்று அங்கு சென்றடைந்தேன். நான் போன சமயம் ஒரு குடும்பத்தினர் அமர்ந்திருக்க, பூஜை நடந்துகொண்டிருந்தது. அது முடிந்தவுடன், அங்கே இருந்த பூஜை செய்பவர்களில் ஒருவரிடம் புகைப்படம் எடுக்கலாமா என்று அனுமதி கேட்டேன். தாராளமாக என்று அவர் கூறியதும் இந்தப்படத்தை எடுத்தேன். உடனே அங்கிருந்த இன்னொரு (சற்று முதிய) அர்ச்சகர்,’படம் எடுத்தது தவறு, இனிமேல் எடுக்க வேண்டாம்’ என்றார். நானோ, அனுமதி கேட்டுத்தான் எடுத்தேன் என்று கூறியவுடன் வந்ததே பாருங்கள் வார்த்தைகள்! ‘யாரைக் கேட்டீர்கள்? இங்கே என்னைக் கேட்காமல் எதுவும் செய்யக்கூடாது’ என்று கத்த ஆரம்பித்தார். வருடாவருடம் தொலைக்காட்சியிலும் மற்ற அச்சு மீடியாக்களிலும் இதே படங்கள் வருவது எப்படி? என்று கேட்டதற்கு ‘அது வேறு’ என்று முடித்துக்கொண்டார். நானும் அங்கே சென்றதில் ஏற்கனவே இருந்த அமைதியையும் தொலைத்துவிட்டு உடனே வெளியேறினேன்.இப்படிச் செய்வது,’சாந்தம் இல்லையென்றால் செளக்கியம் இல்லை’ (சாந்தமுலேகா ஸெளக்யமு லேது) என்று பாடிய அந்த தியாகராஜருக்கே பொறுக்குமா என்பது தெரியவில்லை!