Friday, April 29, 2011

குறுக்கு வழி!

நம்ம சொலவடை (குமுதம் பாணியில்: சா.ஆ.ச.ஆ) மீண்டும் நினைவுக்கு வந்தது. சென்றமாத என்னுடைய தொலைபேசி பில் ரூ.1200/-. ரிடையரான நமக்குக் கட்டுப்படி ஆகவில்லை. ‘வேண்டியும் இருக்கு, வேதனையும் பண்றது’ என்று எதைப்பற்றியோ சொல்வார்களே, அதுபோல தொலைபேசி இல்லாமலும் முடியாது. வலைத்தொடர்பு அவசியமில்லையா? எனவே, ஆராய்ச்சி செய்து (!) ஒரு குறுக்கு வழியைக் கண்டுபிடிச்சுட்டோம்ல! ராத்திரி (இளங்காலை?) 2 மணிமுதல் 8 மணி வரை வலையில் இலவசத் தேடல் உண்டு என்றறிந்து, விடிகாலையில் எழுந்த மாதிரியும் ஆச்சு, வலையில் மேய்ந்ததாகவும் ஆச்சு என்று, தினமும் காலை 5.30க்கே எழுந்து மேய்ச்சலை ஜோராக நடத்திக்கொண்டிருக்கிறேன்! போனஸாக, அமெரிக்காவிலிருக்கும் என் மருமகளும் என்னுடன் தினமும் சாட்டிக்கொண்டிருக்கிறாள்!

Thursday, April 28, 2011

காலம் ஒரு நாள் மாறும்.....

சமீபத்தில் வாலி அவர்கள் எழுதியிருந்த ஒரு விஷயம் கண்ணில் பட்டது. திரு.டி.எம்.எஸ் அவருடைய வீட்டிற்கு வந்திருந்த போது வாலியின் அன்னை, தன் விருப்பப் பாடலான ‘ஏன் பிறந்தாய் மகனே’ என்ற பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்தாராம். என்னுடைய டாப் 3 டி.எம்.எஸ் பாடல்களில் முதலாவது இடத்தைப் பிடித்திருக்கும் பாடலது. அதன் இசையிலும் பாடியதிலும் ஒரு உண்மையான உணர்ச்சி கொப்பளித்திருக்கும். பல ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் உண்மையான காரணம் தெரிந்தது. தன் சொந்த மகனைக் காலனுக்குப் பறி கொடுத்த வேதனையில் டி.எம்.எஸ் இருந்த போதில், சோகத்தை மறக்கடிக்க வேண்டி, எம்.எஸ். விசுவநாதன் அவரை இழுத்துக் கொண்டு போய்ப் பாட வைத்த பாடலாம் அது! சொந்த வாழ்க்கையின் சோகங்கள் எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறது, பாருங்கள். எதனாலோ, பாடகி சித்ராவின் சமீபத்திய இழப்பு என்னை அப்படித்தான் உணர வைத்தது. ஆதரவளிக்க நாம் வேண்டும் ஆண்டவனே அந்த சோகத்துக்குக் காரணமானால் யாரால், எப்படித் தன் ஒரே மகளை இழந்து நிற்கும் அந்தத் தாய்க்கு ஆறுதல் சொல்லமுடியும்?
‘காலம் ஒரு நாள் மாறும், நம் கவலைகள் யாவும் தீரும்’ என்று நம்புவோம்.