Sunday, November 27, 2011

தேவியர் இருவர்!





லைக்கோவில்என்ற திரைப்படத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். 1964ல், வெளிவந்த இப்படத்தை இசையமைப்பாளர் விசுவநாதனும் கலை இயக்குனரான கங்காவும் இணைந்து தயாரித்தனர் இயக்குனர் ஸ்ரீதரின் கைவண்ணத்தில் முத்துராமன், ராஜஸ்ரீ, சந்திரகாந்தா (இவர், தொலைக்காட்சிகளில் பெரிதும் நையாண்டி செய்யப்படும் நடிகர் சண்முகசுந்தரத்தின் சகோதரி) நடித்திருந்தனர். மெல்லிசை மன்னர்கள் இசையமைப்பில், பாடல்கள் எல்லாமே அற்புதமாக அமைந்திருந்தாலும் இன்றளவும் ரசிக்கப்படும் பாடலாக, பாலமுரளிகிருஷ்ணா சுசீலா பாடிய தங்கரதம் வந்தது மட்டுமே இருக்கிறது.

ஒரு வீணை இசைக் கலைஞனின் கதையான இப் படத்தில் பிரபல வீணை இசைக் கலைஞர் சிட்டிபாபு அருமையாக வீணை வாசித்திருந்தார்.

இன்று நாம் ரசிக்கவிருக்கும் ‘தேவியர் இருவர்என்ற பாட்டுடன், பி.பி. ஸ்ரீநிவாஸ் உடன் சுசீலா பாடியிருந்த ‘நான் உன்னைச் சேர்ந்த செல்வம்மற்றும் முத்துராமன் குடித்துவிட்டுப் பாடுவது போல வரும் ‘முள்ளில் ரோஜா’ (இதில் வரும் விஸில் பிட் கூட அருமையாக இருக்கும்) என்ற பாட்டுக்களும் நன்றாக அமைந்திருந்தன.

தேவியர் இருவர்பாட்டுக்காக ஸ்ரீதர் அமைத்திருந்த காட்சியும் பின்னாளில் பாலசந்தர் ‘இருகோடுகள்படத்தில் வரும் ‘புன்னகை மன்னன் பாட்டுக்காக அமைத்திருந்த காட்சிக்கும் வேறுபாடுகள் கம்மி, சிந்தனைகள் ஒத்தவை. ஏற்கனவே திருமணம் ஆகியிருக்கும் நாயகனின் மனைவியிடம் இடம் கேட்பது போல் இங்கேயும் இருதாரங்கள் சொந்தம் கொண்டாடுவது போல அங்கேயும் அமைந்திருக்கும். இங்கே முருகன் என்றால் அங்கே கண்ணன்! இரண்டுமே கண்ணதாசன் கைவண்ணம்!

சிட்டிபாபு, ஒரு குழந்தை நட்சத்திரம் என்பது தெரியுமா, உங்களுக்கு? நாகேஸ்வர ராவ் பானுமதி நடித்த லைலா மஜ்னு என்ற படத்தில் (ஸி.ஆர். சுப்பராமன் இசையில் அருமையான பாடல்களைக் கொண்டிருந்த படம் இது!) இளம் மஜ்னுவாக நடித்திருந்தார், பாபு. இன்றைய ‘வாள மீனுக்கும்பாட்டின் இசையமைப்பாளர் சுந்தர் சி. பாபு, சிட்டிபாபுவின் மகன் என்பது கூடுதல் தகவல்!

தேவியர் இருவர் பாட்டு, ஸ்ரீ எனப்படும் ராகத்தைத் தழுவி அமைக்கப் பட்ட மெட்டு. நான் படத்திலிருந்து பதிவு செய்திருப்பதால், வீணையின் அருமையான வாசிப்பையும் சேர்க்க முடிந்தது. சுசீலாவின் இசைப் பயணத்தில் ஒரு மைல் கல் இந்தப் பாட்டு. அவரின் தேன்குரலோடு வீணையும் தபலாவும் போட்டி போடும் பாட்டைக் கேட்டு ரசியுங்கள்:

Deviyar Iruvar.mp3 by Krishnamurthy80

மீண்டும் சந்திப்போம், நண்பர்களே!

Tuesday, November 22, 2011

மண்ணுக்கு மரம் பாரமா?!

தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதுவதில் பல மரபுக் கவிஞர்களும் அக்காலத்தில் ஈடுபட்டிருந்தார்கள். பாவேந்தர் பாரதிதாசன் பரம்பரையில் வந்த சுரதா அவர்களில் ஒருவர். (இவரை உவமைக் கவிஞர் என்றும் குறிப்பிடுவார்கள்). இத்தகைய வல்லவர்களில் கடைசியாக வந்தவர்தான் நமது கவியரசர் கண்ணதாசன்! (நான் டி.ராஜேந்தரை இந்த லிஸ்டில் சேர்க்கவில்லை என்பதற்காக என் மேல் கேஸ் எதுவும் போடமாட்டீர்கள்தானே!)

அதேபோல, திரைப்பட இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் ஸ்டுடியோ சொந்தக்காரராகவும் இருந்தவர் தமிழறிஞர் ஏ.கே.வேலன். தனித்தமிழ் ஆர்வலரான இவர், படங்களை இயக்கும் போது மற்ற இயக்குனர்களைப் போல் ‘start’ ‘cut’ என்று சொல்லமாட்டாராம். அதற்குப் பதிலாக, ‘முடுக்கு’ ‘நிறுத்துஎன்று தமிழில் சொல்வாராம்!

குறைந்த செலவில் சில நல்ல கருப்பு-வெள்ளைப் படங்களைக் கொடுத்தவர், வேலன். அவர் தயாரித்து இயக்கியவற்றில் மிகவும் நன்றாக ஓடிய படம் (1958ல் வெளியான) ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’. எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.என்.ராஜம் (இவர்கள் இருவரின் தமிழ் உச்சரிப்பும் சிவாஜியுடையதைப் போலவே செவிக்குத் தேனாக இனிக்கும்! அதே போல் ஓ.ஏ.கே.தேவர் என்ற நடிகரும் தமிழை அருமையாகப் பேசுவார் ம்! அது ஒரு காலம்!) மற்றும் ராஜசுலோசனாவும் நடித்திருந்தார். அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்ட கதை.

இந்தப் படத்திற்கு இசையமைத்தவர், மாமா என்று திரைப்படத் துறையினரால் அன்புடன் அழைக்கப்பட்ட கே.வி.மகாதேவன். இவர் இதில் இசையமைத்த பாட்டுக்கள், கவிஞர் சுரதாவால் எழுதப்பட்ட பின்னர் மெட்டமைக்கப் பட்டவை என்பது வியப்புக்குறியது. தை பிறந்தால்படத்தில் அனைத்துப் பாடல்களுமே அருமையாக இருந்தன. (இன்றும் பல தொலைக்காட்சிகளில் பொங்கல் திருநாளன்று ‘தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்என்ற டி.எம்.எஸ்-பி.லீலா பாட்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறதைப் பார்த்திருக்கலாம்!)

இந்தப் படத்தின் பாட்டுக்களில் மிகவும் பிரபலமானது, சீர்காழியின் மாஸ்டர்பீஸ்களில் ஒன்றான ‘அமுதும் தேனும் எதற்கு?’. இத்தோடு திருச்சி லோகநாதன் பாடியிருந்த ‘ஆசையே அலைபோலே, நாமெலாம் அதன் மேலேஎன்ற (படகோட்டி பாடும்) பாட்டு, மற்றும் இன்று நாம் ரசிக்கவிருக்கும் தாலாட்டான ‘மண்ணுக்கு மரம் பாரமாஇவை யாவும் இன்றும் நினைவு கூறி மகிழத்தக்கவை.

தன் பாடல்களில் தபலாவின் உபயோகத்திற்குப் பேர்போன மகாதேவன், தன்னுடைய இசையில் தாலாட்டுப் பாடல்களுக்கென்றே தனியே (கடம் எனப்படும் மண்பானையை உபயோகித்து) ஒரு தாளத்தை உருவாக்கியிருந்தார். இதை வைத்து இவர் போட்ட தாலாட்டு மெட்டுக்கள் எல்லாமே அனேகமாக வெற்றியடைந்தன. (படிக்காதமேதையில் ஒரே ஒரு ஊரிலே, வண்ணக்கிளியில் ‘சின்னப் பாப்பா எங்கள் செல்லப் பாப்பாஇவை உடனடியாக நினைவுக்கு வருகின்றன!)

இன்றைய நமது பாடலைப் பாடியிருப்பவர், நமக்கு ஏற்கனவே அறிமுகமான குழந்தைஎம்.எஸ்.ராஜேஸ்வரி! இவர் பாடிய எந்தப் பாட்டில் தான் இனிமை இல்லை?

இந்தப் பாட்டில் சாதாரணமான வாத்தியங்களை உபயோகித்து, தமது பிரத்தியேகத் தாளத்துடன் (தபலாவைக்கூடக் கொஞ்சம் அடக்கி வாசித்து) பாடகியின் குரலுக்கு முன்னிலை கொடுத்திருக்கிறார், மகாதேவன்! பாடல் வரிகளும் அதற்கு முக்கியமான ஒரு காரணம் என்று நினைக்கிறேன்! கேட்டு ரசியுங்கள்:

Mannukku Maram by Krishnamurthy80

அடுத்த பதிவில் சந்திப்போம், நண்பர்களே!

Sunday, November 20, 2011

எங்கும் நிறைந்தாயே!






இந்தப் பதிவுகளில், இதுவரை, எவ்வளவோ வித்தியாசமான குரல்களைக் கேட்டோம், ரசித்தோம். இன்று நாம் ரசிக்கவிருப்பது ஒரு இசையரசியின் குரல். இப்போது எம்எஸ் அம்மா என்றழைக்கப்படும் எம்.எஸ். சுப்புலக்ஷ்மியைப் பற்றித் தெரியாத ரசிகர்கள் இருக்க வாய்ப்பேயில்லை! இவர் பாடியிருந்த பாட்டுக்களில் எதை வேண்டுமானாலும் எடுத்துத் தனித்தனியே ரசிக்கலாம் என்றாலும், இன்று நாம் தேர்ந்தெடுத்திருப்பது, அவர் மீரா திரைப்படத்தில் பாடியிருக்கும் ‘எங்கும் நிறைந்தாயேஎனும் பாட்டு.

முதலில் இந்தத் திரைப்படத்தைப் பற்றி சில தகவல்கள்:

1946ல் (இசைச் சித்திரம் என்று டைடிலில் அறிமுகமாகும்) ‘மீரா திரைப்படம் முதலில் தமிழிலும் பின்னர் (டப் செய்யப் பட்டு) இந்தியிலும் வெளியான பிறகு, ஏற்கனவே பிரபலமாக இருந்த எம்.எஸ் அகில இந்திய சொத்தானார். இதன் இந்திப் பதிப்பில், கவிக்குயில் என்று மகாத்மா காந்தியால் அழைக்கப்பட்ட திருமதி சரோஜினி நாயுடு திரையில் தோன்றி முன்னுரை வழங்கியிருந்தார். இன்றும் ஒலிநாடாவிலும் குறுந்தகட்டிலும் விற்பனையாகும் இந்தப் படப் பாடல்கள் அனைத்துமே காலத்தால் அழிக்கமுடியாத காவியங்கள். பொதிகைத் தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது இந்தப் படம்! இதில், எம்.ஜி.ஆர் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமோ?

மீரா எம்.எஸ்ஸின் குடும்பப் படம். அவர் கணவர் சதாசிவம் (கல்கி வார இதழின் அதிபர்) தயாரிப்பாளர்களில் ஒருவர். இவர்களின் நெருங்கிய குடும்ப நண்பரும் கல்கி வார இதழின் ஆசிரியருமான கல்கி கிருஷ்ணமூர்த்தி இதில் சதாசிவத்துடன் சேர்ந்து கதை வசனம் எழுத, பாடல்களைப் பாபநாசம் சிவன் எழுதினார்.

மீராவின் பாடல்கள் அனைத்துமே கண்ணனை அடைய பக்தியால் உருகுவதான உணர்ச்சியால் நிரம்பியிருக்கும். அதற்கான அற்புதமான மெட்டுக்களை எஸ்.வி. வெங்கடராமன் போட, அவற்றைத் தன்னை விட யாராலும் இதை விடச் சிறப்பாகப் பாடியிருக்க முடியாது என்று நிரூபணமே செய்திருக்கிறார், எம்.எஸ்.! இந்தப் படத்தை, வடநாட்டில் மீரா உயிருடன் உலாவிய இடங்களிலேயே படமாக்கினார்கள். பல காட்சிகளில் எம்.எஸ். அந்தத் தெருக்களில் ஒடி வந்த போது, மக்களும் இவரை உண்மையான மீராவோ என்று நம்பி, கூடவே ஓடி வந்தனராம்!

இதைச் சொல்லிவிட்டு, இந்தப் பாடல்களைப் படமாக்கியிருக்கும் விதத்தையும் குறிப்பிடாவிட்டால் முழுமையாகாது. ஏனெனில், இந்தத் தமிழ்ப் படத்தை இயக்கியவர் எல்லிஸ்.ஆர்.டங்கன் எனும் அமெரிக்கர்! இவர் அமெரிக்காவில் திரைப்படம் இயக்கும் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு வந்து, தமிழ்நாட்டில் பல வெற்றிப்படங்களை இயக்கியவர். இந்தப் படத்தின் சில காட்சிகளை (வட இந்திய) மதுரா கோவிலில் படமாக்கியபோது, அமெரிக்கரான டங்கன் உள்ளே வரக்கூடாது என்பதால் அவருக்கே ஒரு சர்தார்ஜி மாதிரி தாடி, தலைப்பாகை வைத்து அழைத்துச் சென்றார்களாம்! அவரும் தனக்குத் தெரிந்த சில இந்தி வார்த்தைகளை மட்டும் சொல்லியே சமாளித்தாராம்!

இந்தப் படத்தின் இசையைப் பற்றி எஸ்.வி.வெங்கடராமனுடன் (படம்) பேசிக் கொண்டிருந்தபோது, இந்தப் படத்தின் பிரதி ஒன்று ஹாலிவுட்டில் ‘காலத்தால் அழியாத உலகக் காவியத் திரைப்படங்கள்பெட்டகத்தில் பாதுகாக்கப் பட்டு வருவதாகச் சொன்னார்.

அவரிடம் இன்று நாம் ரசிக்கவிருக்கும் பாடலைப் பற்றிக் கேட்டபோது, இந்தப் பாடல் இசையமைத்துப் பதிவு முடிந்ததும் மீரா படத்தின் (உதவி) கலை இயக்குனர் சேகரிடம் எஸ்.வி.வி, “இந்த மெட்டைக் கேட்டதும் உங்கள் மனத்திரையில் என்ன வண்ணங்கள் தோன்றுகின்றன?என்று கேட்டாராம். அதற்கு சேகர், மஞ்சளும் நீலமும் என்று பதிலளித்தாராம்! விஷயம் என்னவென்றால், இந்தப் பாட்டு, மீரா பாலைவனத்தின் வழியே ஒட்டகத்தில் பயணிக்கும்போது பாடுவதான காட்சியில் வருகிறது!

‘Haunting melody’என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் பாடல்களில் ஒன்றான இப்பாடலைக் கேட்கும்போது, உங்களுக்கு இன்னொரு சந்தேகமும் வரும். இந்தப் பாட்டில் இசைத்திருக்கும் தாளத்தை வேறு ஒரு பாட்டில் கேட்டிருக்கிறோமே என்று. இந்த (தாள) இசையால் ஈர்க்கப்பட்ட ஜி.ராமநாதன் மந்திரி குமாரிதிரைப்படத்திற்காக உருவாக்கிய பிரபல ‘வாராய், நீ வாராய்பாட்டில் இதே வகைத் தாளத்தை உபயோகித்திருந்தார்!

இந்தப் பாடலில் இரண்டு குரல்களும், வீணை, தபலா மற்றும் பியானோவும் உபயோகப் படுத்தப்பட்டிருக்கிறது. முதலில் ஹம்மிங்காக ஒலிக்கும் ஆண் குரல் எஸ்.வி.வியுடையது! இரண்டு நிமிடங்களே வரும் பாட்டில் இத்தனை விஷயங்கள்! கேட்டு ரசியுங்கள்!

Engum niraindhaaye.mp3 by Krishnamurthy80

அடுத்த பதிவில் சந்திக்கலாமா, நண்பர்களே!

Friday, November 18, 2011

உனக்காகவே நான்….!

உனக்காகவே நான் உயிர் வாழ்வேனேஎன்று மனதை உருக்கும் ஒரு பாடல், ஜெமினி கணேசன், சாவித்ரி, ரங்காராவ் நடித்த ‘மாயாபஜார் படத்தில் இடம் பெற்றது. கண்டசாலா இசையமைத்து, அவரே பி.லீலாவுடன் பாடியிருப்பார். (மாயாபஜார் என்றதுமே அப்படத்தில் இடம் பெற்ற ‘ஆகா இன்ப நிலாவினிலே’, ‘கல்யாண சமையல் சாதம்பாட்டுகளும் நினைவுக்கு வந்திருக்குமே!).

நாம் ரசிக்கப் போகும் ‘உனக்காகவே பாட்டு ‘பாகேஸ்ரீஎனும் ராகத்தைத் தழுவியது. பாடலை தஞ்சை ராமையதாஸ் எழுதியிருக்கிறார்.

ஒரு முறை மெல்லிசைமன்னர் ராமமூர்த்தியிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு குறிப்பிட்ட பாட்டை என்ன ராகம் என்று நான் கேட்ட போது அவர் சொன்னார்: “ராகமா? ராமமூர்த்தி ராகம், இல்லையென்றால் கிருஷ்ணமூர்த்தி ராகம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்! சினிமா பாட்டுக்கெல்லாம் ராகம் தேடாதீங்க ஸார்என்றார். அதனால்தான் நான் இன்ன ராகத்தைத் ‘தழுவியதுஎன்று எழுதித் தப்பித்துக் கொள்ளுகிறேன்! மிகப் பழைய படங்களின் பாட்டுப் புத்தகத்தைப் பார்த்தால் கூட, ‘மிச்ர மாண்ட்’, மிச்ர இந்தோளம் என்று அந்தந்தப் பாடல் வரிகளுக்கு மேல் ராகங்களுக்கு முன் ‘மிச்ரஎன்று சேர்த்துப் போட்டிருப்பார்கள். குறிப்பிட்ட ஸ்வரங்களைக் கொண்ட ராகத்தில் அன்னிய ஸ்வரங்கள் சேர்ந்தால் ‘மிச்ரஅதாவது கலப்பு, ஒரிஜினல் ராகம் இல்லை என்று ஆகிவிடும்!

இப்போது ‘பாகேஸ்ரீக்கு வருவோம்! இதே ராகத்தைத் தழுவி, குலேபகாவலியில் மயக்கும் மாலைப் பொழுதே நீ போ, போ, மீண்டசொர்க்கத்தில் கலையே என் வாழ்க்கையின், போன்ற பல சிறந்த பாட்டுக்கள் உண்டு.

இன்று நமது பதிவுக்குப் புதிதாக வந்திருக்கும் பாடகர், இசையமைப்பாளர் கண்டசாலாவுக்கு அறிமுகம் தேவையில்லை! ‘தேவதாஸ்படத்திற்காக அவர் பாடியிருந்த உலகே மாயம், உறவுமில்லை பகையுமில்லை, ஒன்றுமேயில்லைபோன்ற அத்தனை பாட்டுக்களும் சாகாவரம் பெற்றவை. இன்னும் சொல்லப் போனால், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ஆரம்பகாலப் பாட்டுக்கள் பல கண்டசாலா பாடியவை போலவே இருக்கும்! தெலுங்குத் திரையுலகில் கண்டசாலாவைத் தான் எஸ்.பி.பி இடம் பெயர்த்தார்!

கண்டசாலாவின் குரலிலே (நமது ஸி.எஸ்.ஜெயராமன் குரலைப்போல்) ஒரு அதிர்வும் சோகமும் கலந்திருக்கும். அதன் மயக்கத்திலேதான் அவருடைய (தெலுங்கு கலந்த) தமிழையும் பொறுத்துக் கொண்டோம்! இன்று நாம் ரசிக்கப் போகும் ‘உனக்காகவே பாட்டில் பி.லீலா, அவருடைய சோகத்திற்கு ஈடு கொடுத்து, நடிகை சாவித்ரிக்காக எவ்வளவு அருமையாகப் பாடியிருக்கிறார், என்பதை நீங்களே கேட்டுப் பாருங்கள். பாட்டின் இனிமையை, (பியானோ கார்ட்ஸ், கிடார், வீணை கலந்த) கோர்விசை எப்படி மேம்படுத்துகிறது என்பதையும் கவனியுங்கள்:

இந்தப்பாட்டை கீழ்க் கண்ட (லிங்க்) விலாசத்தைச் சொடுக்கி நீங்கள் ரசிக்கலாம்!

http://www.raaga.com/player4/?id=178090&mode=100&rand=0.47642345377244055

அடுத்த பதிவில் சந்திக்கலாமா, நண்பர்களே!

Wednesday, November 16, 2011

பொழுது புலர்ந்ததே!



வசனத் தமிழால் மாபெரும் வெற்றியடைந்த மனோகராதிரைப்படத்தைப் பற்றி அறியாத ரசிகர் இருக்க வாய்ப்பில்லை! கலைஞருக்கும், சிவாஜிக்கும் மட்டும் ஒரு மைல் கல் அல்ல இந்தப் படம். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட கண்ணாம்பாளின் தமிழ் உச்சரிப்புக்கும் கூடப் பரந்த பாராட்டுகளை அள்ளிக் குவித்தது, அது. அவர் மட்டுமல்ல, அந்தக்காலத்தில் தமிழ்த் திரையுலகில் இருந்த பானுமதி, சாவித்திரி, பத்மினி, தேவிகா போன்ற பிறப்பால் தமிழரல்லாத அத்தனை கதாநாயகிகளும் தமிழை அத்தனை அழகாகப் பேசினார்கள். கண்ணாம்பா, மனோகரா வுக்குப் பல ஆண்டுகள் முன்னரே கண்ணகி படத்தில் இளங்கோவனின் தீந்தமிழ் வசனங்களைப் பேசியிருந்தார். அதற்காகவே அந்தப் படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது!

மனோகராதிரைப்படத்தை இயக்கிய எல்.வி.பிரசாத் ஒரு தெலுங்கர் என்பதும் ஒரு சுவாரஸ்யமான தகவல்!

இந்தப் படத்திற்கு, எஸ்.வி.வெங்கடராமன் இசையமைத்திருந்தார். இவர், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி மீராவாக வாழ்ந்திருந்த திரைப்படத்திற்கு அற்புதமாக இசை அமைத்து அகில இந்தியப் புகழ் பெற்றவர். (எம்.எஸ். பாடும் காற்றினிலே வரும் கீதம் நினைவிருக்கிறதா?!) இவர் இசையமைப்பில் ஜிக்கி பாடியிருந்த மூன்று பாடல்களை இந்தப் பதிவுகளில் ரசித்ததும் உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த எஸ்.வி.வியிடம் மெல்லிசை மன்னர்கள் இருவரும் வேலை செய்திருக்கிறார்கள் என்பதும் கூடுதலான தகவல். இவர் மறைந்தபோது சென்னையில் ஒரு பெரும் இரங்கல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து மரியாதை செலுத்தினார், எம்.எஸ்.விசுவநாதன்!

வெங்கடராமன் இசையமைப்பில் ‘மனோகராபடத்திற்காக டி.ஆர். ராஜகுமாரி பாடியிருக்கும் ‘பொழுது புலர்ந்ததேஎன்ற பாடலை இன்று கேட்டு ரசிக்கப் போகிறோம். இந்தப் பாடல், சந்திரகௌன்ஸ்எனும் வட இந்திய ராகத்தைத் தழுவியது. (பக்த மீராவில் எம்.எஸ். பாடியிருக்கும் ‘வேய்ங்குழலின் நாதம்என்ற பாட்டும் இதே ராகந்தான்). பாடியிருக்கும் ராஜகுமாரிக்கு அருமையான தாபம் (வேட்கை) கலந்த குரல்!

பாட்டின் கோர்விசையில் வழக்கமான வாத்தியங்களுடன் ஜலதரங்கமும் சேர்க்கப் பட்டிருக்கிறது. இது, பீங்கான் பாத்திரங்களில் நீரை அளவாக ஊற்றிக் குச்சியினால் தட்டினால் (மணி போன்ற) சத்தம் கொடுக்கும்.

ஒரு நல்ல மெலடியை ரசிக்கலாம், வாருங்கள்!

Pozhudhu pularndhathe.mp3 by Krishnamurthy80

அடுத்த பதிவில் சந்திக்கலாம், நண்பர்களே!

Wednesday, November 9, 2011

கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு!




இன்று, இன்னொரு மென்மையான, செவிகளுக்கு மிகச் சுகமான குரல் ஒன்றைக் கேட்கப்போகிறோம்.

சென்ற தலைமுறையில் கர்நாடக சங்கீத மேடைகளில் முதன் முதலில் ஜோடியாகப் பாடிப் பிரபலமடைந்த பெண் கலைஞர்கள், ராதாவும், ஜெயலக்ஷ்மியும். இவர்களில் ஜெயலக்ஷ்மி மட்டும் பல பாடல்களைத் திரையில் பின்னணியாகப் பாடியிருக்கிறார். இவரின் குரல், நாம் ஏற்கனவே கேட்டிருக்கும் டி.எஸ்.பகவதியின் குரலை ஒத்திருக்கும்.

இன்று இவர் பாடியுள்ள இரண்டு பாட்டுக்களை (ஒன்றரை என்றும் சொல்லலாம்! ஏனென்றால் இதில் ஒரு பாட்டு ஒன்றரை நிமிடமே வருகிறது!) ரசிக்கவிருக்கிறோம். இவர் தனியாகப் பாடியிருக்கும் மனமே முருகனின் மயில் வாகனம்என்ற பாட்டுக்கு (மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்திற்காக) எம்.எஸ்.விசுவநாதன் இசையமைத்திருக்கிறார். இந்தப் பாட்டு, ஹிந்தோளம் எனும் ராகத்தில் அமைந்திருக்கிறது. இந்த சுத்தமான கர்நாடக சங்கீதப் பாடலில் வீணை, ஜெயலக்ஷ்மியின் குரலுக்குத் துணை போகிறது.

இதைக் கேட்கும் போதே உங்களுக்கு இன்னொரு மிகப்பிரபலமான பாட்டான ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ (பாக்யலட்சுமி) நினைவுக்கு வரும்! இந்தப் பாடலும், சுசீலா (மணாளனே மங்கையின் பாக்கியம் படத்தில்) பாடியிருக்கும் ‘அழைக்காதே, நினைக்காதேஎன்ற பாடலும் இதே ஹிந்தோள ராகத்தைத தழுவியவைதான். இந்த ‘அழைக்காதே பாடலுக்கு இசை அமைத்தவர் ஆதிநாராயணராவ். இவர் அஞ்சலிதேவியின் கணவர். இவரைப் பற்றிய ஒரு அதிசயமான தகவல்: இவர் காது கேட்கும் திறனை இழந்தவர்! ஆனாலும் ஒரு அற்புதமான இசையமைப்பாளர்!

ஜெயலக்ஷ்மியின் மென்மையான குரலோடு, கம்பீரமான டி.எம். சௌந்திரராஜனின் குரல் சேர்ந்தால்? நமது செவிகளுக்கு விருந்தாக ஒரு நல்ல அருமையான பாடல் கிடைக்கும்! அந்தப் பாடல்தான் ‘கண்ணுக்குள்ளே உன்னைப் பாருஎனும் டூயட். மரகதம்திரைப்படத்தில் இடம் பெற்றது. (இதே படத்தில்தான் சந்திரபாபு-ஜமுனாராணி பாடியிருந்த பிரபல ‘குங்குமப் பூவேபாடலும் வந்தது) பழம்பெரும் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையாநாயுடு இசையில், படத்தில் சிவாஜியும் பத்மினியும் பாடுவதாக வரும். (சி.ஆர்.சுப்பராமனிடம் சேருவதற்கு முன்னர், எம்.எஸ்.விஸ்வநாதன் நாயுடுவிடம்தான் உதவியாளராக இருந்தார்). கண்ணுக்குள்ளேபாட்டு பாரம்பரிய இசையென்றாலும், பியானோவையே கார்ட்ஸாக உபயோகித்திருக்கிறார்கள். தாளம் கூட உங்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான வால்ட்ஸ் (Waltz) தான்.

இந்த இரட்டை விருந்தை அனுபவிக்க வாருங்கள்:

MANAME1.mp3 by Krishnamurthy80

- Kannukkulle!!s -- MARAGADHAM.mp3 by Krishnamurthy80

மீண்டும் சந்திப்போம், நண்பர்களே!

Sunday, November 6, 2011

மீண்டும் ஜிக்கி!



இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள், சில பாடல்களை ஒலிபரப்பும் போது, ‘இந்தப் பாடலை இன்னார் பதுமையாகப் பாடியிருக்கிறார் என்று குறிப்பிடுவார்கள்! நாமெல்லாம் அதை உணர்ந்து பாடியிருப்பதாகவோ அல்லது ‘பாவத்தோடு’ பாடியிருப்பதாகவோ சொல்வோம்.

இதற்கு முன்னர், இந்தப் பதிவுகள் ஒன்றில் ஜிக்கி பதுமையாகப் பாடியிருந்த மூன்று பாடல்களைக் கேட்டோம், ரசித்தோம், வியந்தோம். அதே ஜிக்கி, 1957ல் வெளிவந்த நீலமலைத் திருடன் திரைப்படத்திற்காக, திரை இசைத் திலகத்தின் இசையமைப்பில் பாடியிருக்கும் வேறு வகையிலான பாட்டை இன்று கேட்டு ரசிக்கப் போகிறீர்கள்.

நீலமலைத் திருடன் தேவரின் தயாரிப்பு. இந்தப் படத்தில் நாயகன் ரஞ்சன் குதிரை ஓட்டிக் கொண்டே பாடியிருக்கும் ‘சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடாஎன்ற டி.எம்.எஸ் பாட்டு மிகப் பிரபலம். இந்த ரஞ்சன் என்பவர் பி.ஏ. படித்துவிட்டு, ஜெமினி நிறுவனத்தினரின் மங்கம்மா சபதம், சந்திரலேகா போன்ற படங்களில் வில்லனாக நடித்துப் புகழ் பெற்றவர்.

இவரோடு, இந்தப் படத்தில் அஞ்சலிதேவி நாயகியாகவும், ஈ.வி.சரோஜா நாயகியின் தோழியாகவும் நடித்தார்கள். இவர்கள் இருவரும் இந்தக் காட்சியில் இறுக்கமான டி-ஷர்ட் அணிந்து கொண்டு, இன்று நாம் ரசிக்கவிருக்கும்,

‘கொஞ்சு மொழிப் பெண்களுக்கு

அஞ்சா நெஞ்சம் வேண்டுமடி

என்ற பாடலைப் பாடுவார்கள்! அடடா! மன்னிக்க வேண்டும், நாம் ரசிக்க வேண்டியது இசையை அல்லவா!

மேலே படத்தில் இருக்கும் ரஞ்சன் மற்றும் நடிகையரைத் தெரிகிறதா? எல்லாரும் அப்போது தெலுங்குத் திரையில் கொடிகட்டிப் பறந்த நாயகிகள். இதில் இருப்பவர்கள் அஞ்சலிதேவி, சாவித்ரி, சாரதா, கிரிஜா (இவர் ‘மனோகரா’ படத்தில் நடிகர் திலகத்தின் ஜோடி!) ஆகியோர்!

திரை இசைத் திலகத்தின் இசை என்றாலே அதில் தபலாவின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்பதை நீங்கள் (வேறொரு பதிவில்) ‘யாரடி வந்தார்பாடலில் கவனித்தீர்கள். இந்தப் பாட்டிலும் தபலாதான் நாயகன். தபலாவுக்கு இணையாக கூடவே ‘டிக்,டிக்என்ற ஒலியோடு ஒரு வாத்தியமும் ஒலிக்கிறதே, அது என்ன தெரியுமா? ரயிலில் பிச்சைக்காரர்கள் விரலிடுக்கில் இரு சிறு பலகைகளை வைத்துக்கொண்டு இசைப்பார்களே, அதே தான்! (ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் சிவாஜி இதை இசைத்துக் கொண்டுதான் ‘அம்மம்மா, தம்பி என்று நம்பிஎன்ற பாட்டைப் பாடுவார்).

இவற்றோடு, ஜிக்கியின் உச்சரிப்பையும் தவரவிடாதீர்கள். இவரின் (துள்ளாத மனமும் துள்ளும்’ (கல்யாணப் பரிசு), ஊரெங்கும் தேடினேன் (தேன்நிலவு) போன்ற பதுமையாகப் பாடிய சில பாடல்களைத் தவிர்த்து) மற்ற பாடல்களில் தமிழை அழுத்தமாக உச்சரித்திருப்பார். பிற்காலத்தில் எல்.ஆர்.ஈஸ்வரியின் முக்கல், முனகல்களுக்கு ஜிக்கியும் ஒரு முன்னோடி!

பாட்டின் இசையில் மாண்டலின், குழல் வயலின்கள், சிதார் தவிர அகார்டியன் என்கிற (ஹார்மோனியம் போல தொனி வரும்) வாத்தியமும் இடம் பெற்றிருக்கிறது. இதைப் பல படங்களில் பார்த்திருப்பீர்கள். கழுத்தில் மாட்டிக் கொண்டு, ஒரு கையால் மடிப்புக்களை அழுத்திக் காற்றை உள்வாங்கி மற்ற கையால் கட்டைகளை அமுக்கி வாசிப்பார்கள். (‘பாவமன்னிப்புபடத்தின் பிரபல ‘அத்தான்பாட்டில் சரணத்திற்கு முன் இந்த அகார்டியனில் ஒரு மிகச் சிறந்த பீஸ் இசைக்கப்படுகிறது). கூடவே டபிள் பேஸ் அதிர்வுகளும் தனியாகக் கேட்பதையும் கவனியுங்கள்.

தாளத்தில் அமிழலாம், வாருங்கள்!

Konjumozhi pengalukku-Neelamalai thirudan.mp3 by Krishnamurthy80

மீண்டும் சந்திப்போமா, நண்பர்களே!

Saturday, November 5, 2011

மனிதர்கள்!

அன்று திருச்சி நகரை நோக்கிச் செல்லும் நகரப் பேருந்து. ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போது, தலையை மட்டுமே திரும்ப முடிந்ததால், வேறு வழியில்லாமல் சுற்றி நின்ற மனிதர்களைப் படிக்க ஆரம்பித்தேன். அயல்நாடுகளில் மட்டுமல்ல, இங்கும் கூட ‘people watching’ அதாவது மக்களை நோட்டமிடுதல் ஒரு சுவாரஸ்யமான விஷயம்! என்னுடைய இன்றைய அனுபவத்தைக் கேளுங்கள்!
எட்டரையிலிருந்து (இது பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர், ஐயா!) என்னுடைய நிறுத்தத்துக்குக் காலை எட்டரைக்கு (இது காலம்!) வரவேண்டிய டௌன் பஸ், ஒரு வழியாக ஒன்பதே காலுக்கு வந்தது. சொல்லவே வேண்டாம். வழக்கமாக (எரிச்சலோடு) சொல்வது போல, ‘பேய்க் கூட்டம்’! எப்படியோ ஏறிவிட்டேன் என்பதைவிட, நடுவில் மாட்டிக் கொண்டதால் ஏற்றிவிட்டார்கள் என்பதுதான் உண்மை! என் பங்குக்கு நானும் முட்டி, மோதி, இரண்டு கால்களையும் வைக்கும் அளவுக்கு இடம் துழாவி, எப்படியோ உந்தின் நடு சென்டருக்குச் சென்று விட்டேன்.
பின் வாயில் அருகில் நின்று (?) கொண்டிருந்த நடத்துனர், மக்களை உள்ளே தள்ளிவிட, ஆனமட்டும் கூவிக் கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்தவர், (இத்தனை நெரிசலிலும்!) சட்டைப் பைக்குள் கை விட்டு, பான் பராக் பொட்டலம் எடுத்து, கிழித்து, பாககை வாயில் போட்டுக் கொண்டே, ‘எங்க போறது, முன்னால இருக்கறவுக போனாத்தானெ என்று முனக ஆரம்பித்தார்! வண்டியில் வழக்கம் போலவே சில மொபைல்கள் பல பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருந்தன. இந்த இரைச்சல் போதாது என்று வண்டிக்குள்ளேயும் குத்துப் பாடல் கதறிக் கொண்டிருந்தது! திடீரென்று பாடல் மாறி பரமசிவன் கழுத்திலிருந்துஎன்று ஒலிக்க ஆரம்பித்ததும், பல குரல்கள் டி.எம்.எஸ் கூட கோரஸ் பாட ஆரம்பித்தன! இவர்களில், நின்று கொண்டிருந்த பலர், வண்டியின் கூரையில் விரலால் தாளம் தட்டித் தங்கள் ரசனையைப் பறைசாற்றிக் கொண்டிருந்தார்கள்.
என் பின்னே நின்றிருந்தவர் தன்னுடைய தொப்பையால் என் முதுகில் முட்டிக் கொண்டிருந்தார். வண்டி செல்லும் வேகத்தில் நான் அரை அடி முன்னோ, பின்னோ நகர்ந்தாலும் அவர் தொப்பை, ஏதோ என்னுடலில் ஒரு அங்கம் போலச் செயல் பட்டுக் கூடவே வந்தது! (இந்த மாதிரி மனிதர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். இவர்கள், கண் பார்வையைச் சுழல விட்டுக் கொண்டு, தொப்பை மூலமே வரிசையில் நகருவார்கள். வெறும் இருவர் மட்டுமே வரிசையில் இருந்தாலும் இப்படித்தான் செய்வார்கள்!).
இன்னொருவரோ, அணுகுண்டே விழுந்தாலும் சரி, அம்மாவுக்கும் ஐயாவுக்குமான லேடஸ்ட் அறிக்கைப் போரைப் பற்றிய செய்திகளைப் படித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டவர் போல, ஒரு வார இதழை இரண்டாக மடித்து, அந்தச் செய்தி பிரசுரமாகி இருக்கும் பக்கத்தைக் கண்ணுக்கு மிக அருகில் வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருந்தார். விட்டால் பத்திரிகைக்கு உள்ளேயே போய்விடுவார் போல! அவர் மூக்குக் கண்ணாடியோ, அவர் விரல்களின் நடுவில் தொங்கிக் கொண்டிருந்தது!
அசௌகரியமாக நின்றுகொண்டிருந்த சில கிராமத்துப் பெண்டிர் தங்கள் சண்டையைத் தொடர்ந்து கொண்டு பேருந்துகளைச் சரியாக விடாத அரசாங்கத்தையும் (நடத்துனரையும்!) வறுத்துக் கொண்டிருந்தார்கள்! இள வயதினர், நடத்துனரின் அறிவுரை காதில் விழாதது போல, ஒடும் வண்டியில் தொங்கிக் கொண்டும், வண்டி நிற்கும் போது (ஏறத் தாழ ஐந்தாறு பேர்) எல்லாரும் இறங்கிக் கொண்டு, புறப்படும் போது எல்லாரும் மீண்டும் தொற்றிக் கொண்டும் இருந்தார்கள். இதில் என்ன சுகமோ?!
சுற்றி நடப்பது எதையும் கண்டுகொள்ளாமல் ஒருவர் ஏதோ ஸ்லோகத்தை முணுமுணுத்துக் கொண்டு, உலகத்தைப் பார்வையாலேயே வெறுத்துக் கொண்டிருந்தார்!
என்னதான் நடக்கும், நடக்கட்டுமேஎன்று தம் அன்னையின் மடியிலோ, தோளிலோ, நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்கள், சில கொடுத்து வைத்த பச்சிளம் பாலகர்கள்! சில அன்னையரோ, தம் சிறார்களை இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் மத்தியிலோ அல்லது அவர்கள் மடியிலோ இருத்திவிட்டுத் தற்காலிக நிம்மதி அடைந்து கொண்டிருந்தார்கள்!
நிறுத்தங்களில், சில பயணியர் தாங்கள் ஏற்றியிருந்த மூட்டைகள், காய்கறிக் கூடைகள், பெரிய பைகள் இவற்றையும் இறக்குவதற்கும், அந்த நிறுத்தங்களில் ஏற முயன்ற பயணிகளோடும், நடத்துனரோடும் போடும் இரைச்சலும் சேர்ந்து கொண்டு..... பேருந்து ஒரு வழியாக சத்திரம் பஸ் நிலையத்தை எட்டியது. ‘அப்பாடாஎன்று இறங்க முயற்சித்தால், அங்கே காத்திருக்கும் கூட்டம் எங்களை இறங்க விடாமலும், அவர்கள் ஏறமுடியாமலும்....ஏன் கேட்கிறீர்கள்? அதற்குள் பேருந்தின் ஜன்னல் வழியாக கர்சீப், புத்தகம், துண்டு, செய்தித் தாள் இன்ன பிற வஸ்துக்கள் இருக்கைகளை ஆக்ரமித்துவிட்டன! ஸீட் ரிஸர்வேஷனாம்! கடைசியில் எப்படி உந்தில் ஏறினேனோ, அவ்வாறே மக்கள் மத்தியில் மிதந்து எப்படியோ விழாமல் தரையில் நின்றேன்! ஒரு இருபது நிமிடப் பயணத்தில் எவ்வளவு அனுபவம் பாருங்கள்!

Thursday, November 3, 2011

அழகே. அமுதே!


சென்ற பதிவில் கேட்ட ஒரு சுத்தமான கர்நாடக சங்கீதப் பாட்டுக்குப் பின்னர் இன்று இன்னொரு முழுமையான மெலடியை அறிமுகம் செய்யவிருக்கிறேன்.

பொதுவாக, ஒரு பாடலுக்கு இசையமைத்து முடித்ததும் ஒலிப்பதிவிற்குப் போவதற்கு முன், எந்த வாத்தியம் எந்த இடத்தில் எப்படி வரவேண்டும் என்பதை இசைக் குறிப்பாக எழுதிக் கொடுத்துவிடுவது உதவி இசையமைப்பாளர்களின் பணி. இந்தக் குறிப்பை (வாத்தியங்களின்) arrangement என்பார்கள். பின்னர்தான் ஒலிப்பதிவின் போது ஒருவர் நின்றுகொண்டு (தாளம் காண்பிப்பதுபோல) கைகளை வீசி, இந்தக் குறிப்பின் படி பாடல் இருக்கிறதா என்று கவனிப்பார்........

1959ல் ராஜா மலையசிம்மன்என்று ஒரு திரைப்படம் வெளிவந்தது. இது, தெலுங்கிலும் தமிழிலும் ஒரே சமயம் வெளியிடப்பட்டது. வெற்றியடையாத இந்தத் திரைப் படத்திலிருந்து, என்னைப் போன்ற மெல்லிசைமன்னர்களின் உண்மை விசுவாசிகளுக்கு (பயப்படவேண்டாம்! காலையில் தமிழ்த் தினசரியில் விளம்பரங்கள் படித்ததின் விளைவு!) மட்டும் நினைவிருப்பது, இந்தப் படத்திற்கு மெல்லிசை மன்னர்கள் இசை என்பதும், இன்று நீங்கள் ரசிக்கப் போகும் பாடலும் தான்!

கவிஞர் மருதகாசி எழுதியுள்ள இந்தப் பாடலை, பி.பி.ஸ்ரீநிவாஸ் சுசீலா இருவரும் பாடியிருக்கிறார்கள். இது ஒரு முழுமையான மெலடி என்று ஏன் சொன்னேன்? வாருங்கள் அலசலாம்!

பாடலின் ஆரம்ப இசையை குழல் ஆரம்பித்து வைக்கிறது. (ஒன்று கவனித்திருக்கிறீர்களா? அந்தக் காலத்தில் மட்டுமல்ல, இப்போதும் கூடப் பலசமயங்களில், குழல் இசைக்கும்போது கூடவே க்ளாரிநெட் அல்லது சாக்ஸபோன் துணைவரும். செவிக்குச் சுகமாக இருக்க வேண்டி இந்த ஏற்பாடு)

கார்ட்ஸ் (chords) என்றால் என்ன என்பதை இந்த ஆரம்பக் குழல் இசையின் இடையில் வரும் (ஜங், ஜங் எனும்) கிடார் மற்றும் டபிள் பேஸ் தாள ஒலியிலிருந்து புரிந்துகொள்ளலாம். நடுவில் பல வயலின்களும் சேர்ந்து இசைத்து, மாண்டலின் மூலமாகப் பாட்டின் பல்லவியைத் தொட்டு விடுகிறார்கள். இந்த மாண்டலினுக்கும் பாட்டின் பல்லவிக்கும் டோலக் எனும் தாளவாத்தியம் எவ்வளவு அழகாகக் கோர்க்கப்பட்டிருக்கிறது, பாருங்கள். அதே சமயம் பாட்டின் சரணத்தில் தபலாவும் சேர்ந்து கொள்கிறது. பாடகர்களும் பல இடங்களில் ‘ஸெகண்ட்ஸ்முறையில் (ஒருவர் மெயின் ஸ்ருதியிலும் மற்றவர் வேறொரு ஸ்ருதியிலும்) பாடியிருக்கிறார்கள். சுசீலாவோ, பி.பி.எஸ்ஸின் குரலை ஒத்துத் தன்மையாகப் பாடியிருக்கிறார். பாட்டின் கோர்விசையோ, எழுத்தை மீறியது!

மொத்ததில், மூன்று நிமிடங்களுக்கும் மேல் போவதே தெரியாமல் அமர (அசர?!) வைக்கும் பாட்டு! கேளுங்கள்:

Azhage Amudhe - Raja Malaya simhan.mp3 by Krishnamurthy80

மீண்டும் மற்றொரு பாட்டுடன் சந்திக்கலாம், நண்பர்களே!