Wednesday, February 29, 2012

மரத்திலே ஒரு மாணிக்கம்!

சிற்பம் என்பதை கல்லிலே மட்டும் நாம் காண்பதில்லை. மணலில் உருவாக்கப்பட்ட சிற்பங்களைப் பார்த்தோம். இன்று, மரத்திலே அதாவது மொட்டையாக நிற்கும் மரங்களை அற்புதமான சிற்பங்களாக மாற்றியிருப்பது - சாதாரண சிற்பியில்லை! மறைந்து வாழும் ஒரு கெரில்லா வீரன்! யாருமே பார்க்காதபோதும், யார், எப்படி, எப்போது செய்தார்கள் என்பதும் தெரியாமல் திடீரென உருவானவை இந்த மரச் சிற்பங்கள். இதை உருவாக்கியவரை பாராட்டுவதற்குத் தயாராக இருந்தும் கூட, தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை அந்தக் கலைஞன்!

வடக்கு யார்க்‌ஷையர் எனும் இங்கிலாந்து நாட்டின் ஒரு பகுதியில் சுயம்புவாக (அதாவது தான் தோன்றியாக) உருவாக்கப் பட்டிருக்கும் இந்த அதிசயத்தைப் பார்த்து வியக்க வாருங்கள்!
(நன்றி:பொக்கிஷம்)



விளையாட்டில் விசித்திரம்!

நண்பர்களே,

இன்று நாம் இதுவரை இந்தப் பதிவுகளில் செல்லாத ஒரு துறையில் நிகழ்த்தப் பட்டிருக்கும் சாதனைகளைப் பார்க்கப் போகிறோம்.

அநேகமாக நாமெல்லோரும் அறிந்த கேரம் போர்ட் (Carrom Board) விளையாட்டைப் போன்ற ஒன்று தான் கையில் ஒரு குச்சியை (Cue) வைத்துக் கொண்டு ஆடும் ஸ்னூக்கர் அல்லது பில்லியர்ட்ஸ் எனும் விளையாட்டு.இதை நீங்கள் பல தமிழ்த் திரைப்படங்களில் பார்த்திருக்கலாம்.

இந்த விளையாட்டில், ட்ரிக் ஷாட்டுகள் அடித்து, அதனை ஒரு காட்சியாக்கிக் காசு பண்ணும் விற்பன்னர் கூட்டமே வெளிநாடுகளில் இருக்கிறது. அத்தகையவர்களில் ஒருவரின் ஷோவை இன்று கண்டு களிக்க வருகிறீர்களா?


Monday, February 27, 2012

உலகம் சுற்றும் தமிழன்!

பெரிதும் மனமுவந்து, இதைப் படிக்கும் அனைவரையும் ‘உலகம் சுற்றும் தமிழ’னாக மாற்ற விழைகிறேன்!

உலகத்தின் உச்சியிலிருந்து எல்லாத்திசையிலும் நோக்கினால், நீங்களும் உ.சு.தமிழன் ஆகிவிடமாட்டீர்களா, என்ன! வாருங்கள், நண்பர்களே, எவரெஸ்ட் சிகரத்திலிருந்து எடுக்கப் பட்டிருக்கும் ஒரு 360 டிகிரி பனோரமா படத்தை பார்க்கலாம்.

இதை, முழுத்திரையில் பார்ப்பது அற்புதமான அனுபவம். அத்துடன், இதில் மலைகள் மட்டுமே காண்பதில்லையாம். எங்கோ ஒரு மனித உருவமும் இருப்பதாக எழுதியிருக்கிறார்கள். எங்காவது சிகப்பு வண்ணத்தில் அது தெரிகிறதா என்பதையும் பாருங்களேன்!

எவரெஸ்ட் உச்சியை எட்மண்ட் ஹிலரியும் நமது டென்ஸிங்கும் அடைந்து 50 வருடங்கள் நிறைவு பெற்றதை அடுத்து, 271வது ஆளாக உச்சியை அடைந்த ஆஸ்திரேலிய புகைப்பட நிபுணர் ரோட்ரிக் மெகன்ஸி எடுத்த படம் இது.

கீழ்க்கண்ட லிங்க்கை உங்கள் அட்ரஸ் பாரில் copy-past செய்து, மறக்காமல் முழுத்திரையில் காணுங்கள்.

http://www.panoramas.dk/fullscreen2/full22.html#Read-Climbers-story

Monday, February 20, 2012

மீண்டும் கொஞ்சம் இசை!

நண்பர்களே!
கடந்த பல வாரங்களாகக் காணொளிகளிலே மனதைப் பறிகொடுத்தோம். இன்று மீண்டும் நமது தமிழ்த் திரை இசையை ரசிக்கலாமே!

இன்று நீங்கள் கேட்கவிருக்கும் பாட்டு, ஒரு இனிமையான பெண்குரலும் ஒரு உண்மையான ஆண்குரலும் சேர்ந்து அளித்திருப்பது! (என் போன்றவர்களுக்கு,உண்மையான ஆண் குரல் என்பது, பி.யு.சின்னப்பா, டி.எம்.எஸ்., சீர்காழி, திருச்சி லோகநாதன் இவர்களோடு முடிந்து போனது. இப்போது ஒலிக்கும் ஆண்குரல்கள் எல்லாமே எம்.கே.தியாகராஜபாகவதரின் குரல் போலப் பெண் தன்மை கொண்டவைதான்!) பாட்டுக்கு வருவோம்!

இன்றைய பாட்டை சீர்காழியும், ஜிக்கியும் பாடியிருக்கிறார்கள். இது, ’கோமதியின் காதலன்’ என்ற திரைப்படத்தில், டி.ஆர்.ராமச்சந்திரனும், சாவித்திரியும் பாடுவது போலவரும் டூயட். இசைவித்தகரான ஜி.ராமநாதனின் இசையில், கு.மா.பாலசுப்பிரமணியம் என்ற (அக்காலத்திய) பிரபல கவிஞர் எழுதியது. படத்தின் கதையை ‘தேவன்’ எழுதியிருந்ததாக நினைவு. படம், டி.ஆர்.ஆர் அவர்களின் சொந்தத் தயாரிப்பு.

குரல்களின் இனிமையும் (clarity) எனப்படும் துல்லியமும் கவனிக்கத் தக்கவை. உறுத்தாத பின்னணி இசையும், வால்ட்ஸ் எனும் மேல்நாட்டு நடனத் தாளமும் ஒரு கூடுதல் போனஸ். எத்தனை முறைதான் கேளுங்களேன், அலுக்கவே அலுக்காத பாடல்....ரசியுங்கள்:

Sunday, February 19, 2012

மீண்டும் மாக்ரோ! - பகுதி-2

இந்தப் பதிவிற்கான கடைசிப் பகுதியிது. இதில் இன்னும் சில மிருகங்களின் கண்களின் மிக அண்மைப் புகைப்படங்களை உங்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். முதலாவதாக இருப்பது முதலையின் கண். இரண்டாவதும் மூன்றாவதும் மீன்களின் கண்கள்.அடுத்தது, ஓநாயின் கண். ஐந்தாவது, வீடுகளில் வளர்க்கப்படும் டிஸ்கஸ் எனும் அமேசான் நதி மீனுடையது.





Saturday, February 18, 2012

நிழல் ஆட்டம்!

நண்பர்களே,
இந்த விடியோ உங்களை வியப்பில் ஆழ்த்தவில்லை என்றால் உங்கள் ரசனை மீதுதான் சந்தேகம் வரவேண்டும்!

நிழல் ஆட்டம் பார்த்திருப்போம். சாதாரணமாக ஒருவர் வெளிச்சமிடப்பட்ட திரைக்குப் பின்னால் இருந்து, மனிதன், பறவை, முயல், மான் என்று விரல்களாலேயே நிழலாக உருவாக்கிக் காட்டுவார். ஆனால் இந்த (கொல்கத்தாவில் தயாராகியிருக்கும்) ’கொல்கத்தாவை ரசிக்க வாருங்கள்’ என அழைக்கும் இந்த விடியோவில், மனிதனின் மூளைக்குள்தான் எத்தனை யோசனை, எத்தனை திறமை என்று வியப்பை வெளிப்படுத்தவும் மறந்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்! கொல்கத்தாவின் பிரபல இடங்களான காளி கோவில், ஹௌரா பாலம், அதன் கீழே நீரில் மிதக்கும் படகு, தலைமைச்செயலகம் (பின்னணியில் நமது தேசீயகீதத்துடன்)என்று அந்த நகரத்தோடு ஒன்றிய எல்லாவற்றையும் மட்டுமல்ல, மக்கள் கூட்டத்தையும் கூட விடவில்லை! அருமையான பின்னணி இசையோடு வரும் இந்த அசாதாரண விடியோ, இதோ, உங்களுக்காக!

கடலுக்குள் ஒரு உலகம்!

நமது பூமித்தாயின் அழகான பன் முகங்களை இயற்கைக் காட்சிகளாகவும், பூமியின் மேற்பரப்பில் அமைந்த பல்வேறு அதிசயக் காட்சிகளாகவும் பார்த்து ரசித்திருக்கிறோம். பூமிப்பந்தின் பெரும் பகுதியை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் கடல்களின் கீழே ஒரு தனி உலகமே இயங்கிக் கொண்டிருப்பதுபற்றியும் கேள்வியுற்றிருக்கிறோம். அந்த உலகத்திலிருந்து, பிஜி,டோங்கா நாடுகளின் கடல்களுக்குக் கீழே இருக்கும் அழகான பகுதியையும் அதன் பிரஜைகளான எண்ணற்ற ஜீவராசிகளையும் காண உங்களை அழைக்கிறேன். வியப்பின் எல்லைக்கே உங்களை அழைத்துச் செல்லும் காட்சிகள் இவை! முழுத்திரையில் கண்டு அனுபவியுங்கள்!


Friday, February 17, 2012

கருவறைப் பயணம்!

இன்று நாம் காணப்போகும் விடியோ, இந்த உலகில் பிறந்திருக்கும், பிறக்கப் போகும் எல்லாருக்கும் வாய்த்த அனுபவம். இதைக் காணும்போது கடவுளின் பெருமை விளங்கும். இந்த அனிமேஷன் படத்தை அழகாக எடுத்த மானுடனின் திறமையையும் பாராட்டத் தோன்றும். ஏறத்தாழ மூன்று லட்சம் பேருக்குமேல் பார்த்திருக்கும் இந்த விடியோவை நீங்களும் பார்த்து, அறிந்து கொள்ள வாருங்கள், நண்பர்களே!

Thursday, February 16, 2012

மீண்டும் மாக்ரோ! - பகுதி-1

சில பதிவுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட ‘மாக்ரோ’ எனப்படும் மிக அண்மைப் புகைப்படங்களை மறந்திருக்க மாட்டீர்கள் எனக் கருதுகிறேன். இப்போது ‘பொக்கிஷம்’ எனும் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் சில மிருகங்களின் கண்களின் மிக அண்மைப் படங்களைப் பார்த்து ரசிக்கலாம் வாருங்கள்!
முதலாவது மலைப்பாம்பு; இரண்டாவது நீல க்ரே மீன்; மூன்றாவது குதிரை; நான்காவது நீல முயல், ஐந்தாவது முதலை.





கடலின் சீற்றம்!

இந்தத் தலைப்பு பொருத்தமானதா என்பதில் எனக்கு ஐயமுண்டு! ஆனால் இதைவிடவும் சிறப்பான ஒரு தலைப்பு தோன்றாததினால் இதையே வைக்க வேண்டியதானது!

இன்று நீங்கள் காணப்போகும் விடியோ, ஒரு வாழ்க்கையின் அனுபவம். கடலின் மூர்க்கத்தனத்தை, அலைகளின் சீற்றத்தைக் காணும்போது சுனாமிகளின் பிடியில் சிக்கியவர்கள் அனுபவம் எத்தனை கொடியது என்பதை நினைவு கூறாமல் இருக்கமுடியாது. தண்ணீரின் வேகத்தில் மீன்பிடிக் கப்பல்கள் காற்றில் வீசப்படும்போது, நம் குடல்களும் தானாகவே மேலெழும்புகின்றன! ஒரே திருப்தி, கடவுளின் சீற்றத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் மனிதன் தயாரித்த கப்பல்கள் என்பதே!

நான்கு நிமிடங்கள் ஓடும் இந்த விடியோவினை அனுபவிக்க நீங்கள் கீழ்க்கண்ட லிங்க்கை காபி செய்து உங்கள் அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்து பார்க்கவேண்டும். தவறவிடாதீர்கள் - பார்த்தே தீரவேண்டிய ஒரு மிக நல்ல முயற்சி! முழுத்திரையில் (Full screen) காண்பது சிறப்பு.


http://www.youtube.com/watch?v=T4FIS1FnOQg

Saturday, February 11, 2012

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

ஊடகங்களில் எவ்வளவோ விளம்பரங்களைப் பார்க்கிறோம். அவற்றில் சில மட்டுமே மனதில் ஒட்டிக் கொள்ளுகின்றன. ’எப்போதும் சேர்ந்தே பயணியுங்கள்’ எனும் செய்தியை விளக்க ஒரு பஸ் கம்பெனியின் அனிமேஷன் விளம்பரங்கள் மிகப் பிரபலமானவை. அவற்றில் ஒன்றை இங்கே பாருங்களேன்.

Friday, February 10, 2012

மனிதனின் படைப்பும் கடவுளின் படைப்பும்!

நண்பர்களே!

இன்று உங்களுக்கு மனிதனின் கண்டுபிடிப்பான புகைப்படக் கருவி (Camera) வின் மூலம் செய்யப் படும் ஒரு புதிய தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்யவிருக்கிறேன்.

புகைப்படம் எடுப்பதற்கும், சினிமா எடுப்பதற்கும் தனித் தனி காமெராக்கள் இருப்பதை அறியாதார் இலர். நீங்கள் இன்று பார்க்கப் போகும் விடியோக் காட்சி, புகைப்படத்திறகான காமிராவினால், Time lapse எனும் முறையில் சுடப்பட்ட நகரும் படம். இது எப்படி சாத்தியமாகும்? புகைப்படக் காமெராவை உபயோகித்து, 3 அல்லது 4 செகண்டுகளுக்கு ஒரு படம் என்று எடுத்து, அதனைக் கணினியின் உதவியால் நகரும் படமாக்கியிருக்கிறார்கள்.

இன்று இம்மாதிரியான இரண்டு மிகு அடர்த்தி (HD)விடியோக்களைப் பார்த்து வியக்கப் போகிறீர்கள்! முதலாவது விடியோ,அனைத்துலக விண்வெளி ஸ்டேஷன் என்னும் செயற்கைக்கோளிலிருந்து புகைப்படக் காமெராவால் சுடப்பட்டது. இதில் ஏறத்தாழ 18 வகையான கடவுளின் படைப்பை மனிதனின் படைப்பின் மூலம் கண்டு வியக்கலாம், வாருங்கள்!



இன்னொரு விடியோ, கனடா நாட்டிலுள்ள அழகிய நகரமான வான்கூவரில் எடுக்கப்பட்டது. இதில் மேகக் கூட்டங்களின் நடுவே நகரத்தின், நதியின் அழகு அற்புதமாகப் படமாக்கப் பட்டிருக்கிறது.

Thursday, February 9, 2012

உதய பூமி!!

எவ்வளவோ நாட்களில் நிலவு உதயமாவதைப் பார்த்திருப்போம். ஆனால், நிலவிலிருந்து பூமிப்பந்து உதயமாவதைப் பார்த்திருக்கிறீர்களா? இன்று பார்க்கலாம்!

ஜப்பானிய விண்கலமான காகுயா (Kaguya) நிலவைச் சுற்றிவரும்போது எடுத்த மிகுஅடர் விடியோ இது. கடந்த ஏப்ரல் 5, 2008 அன்று (நமது அமாவாசை தினத்தில்) இந்த விண்கலம் நிலவின் வெளிச்சமான பகுதியிலிருந்து இருட்டான பகுதிக்கு வரும்போது எடுக்கப்பட்டிருக்கிறது! கீழே கொடுக்கப் பட்டிருக்கும் ’லிங்க்’ கைச் சொடுக்கி,ஒரு நிமிடத்திற்குச் சற்று அதிகம் ஓடும் இந்த விடியோவைப் பார்த்து அனுபவிக்க வாருங்கள்!

A spectacular view of Earth from Japanese lunar orbiter Kaguya [VIDEO]