Monday, June 25, 2012

நன்றி, ஆனந்த (திருச்சி) விகடன்!

இந்த வாரம் (27.06.2012) வெளிவந்திருக்கும் ஆனந்தவிகடன் இதழின் இலவச இணைப்பான ‘திருச்சி விகடனில்’ வலையோசை என்ற தலைப்பில் இந்த ’விட்டு விடுதலையாகி நிற்பாய்!’ எனும் என்னுடைய வலைப்பூவிலிருந்து சில பகுதிகளை அழகான லே-அவுட்டில் வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

குறையென்றும் ஒன்று இருக்கத்தானே செய்யும்?! இற்றைய பதிவுகளில் நாம் ரசித்துக் கொண்டிருக்கும் காலத்தால் அழியாத பழந்தமிழ்த் திரைப்பாடல்களைப் பற்றி அவர்கள் கண்டுகொள்ள வில்லை - நிச்சயமாக அதற்கு ஏதாவது சரியான காரணம் இருக்கும். எனவே, மீண்டும் என் நன்றிகள், திருச்சி விகடனுக்கு!

Tuesday, June 12, 2012

சரச ராணி, கல்யாணி!

     எம்ஜிஆரும் பானுமதியும், பத்மினியும் இணந்து நடித்த ’மதுரைவீரன்’ எனும் தமிழக நாடோடிக் கதை ஒரு மகத்தான வெற்றிப் படமாக உருவாகி ஓடியதல்லவா? மதுரைவீரன் படத் தயாரிப்பாளரான லெட்சுமணன் என்கிற ‘லேனா’ செட்டியார், உடனேயே இன்னொரு நாடோடிக் கதையான ‘தேசிங்கு ராஜா’வை, அதே வெற்றிக் கூட்டணியோடு தயாரிப்பதாக முடிவு செய்து, முதன் முதலில் ஜி.ராமநாதன் இசையில் இரண்டு டூயட் பாடல்களை மட்டும் பதிவுசெய்து வெளியிட்டார். அந்தக் காலத்திய 78 RPM - அரக்கு ரெகார்டாக வெளிவந்த அந்த இரு பாடல்களில் ஒன்றை சீர்காழி-ஜிக்கியும், இன்று நாம் ரசிக்கவிருக்கும் மற்றொன்றை சி.எஸ்.ஜெயராமனும் பானுமதியும் பாடியிருந்தார்கள்.

     ‘லேனா’ செட்டியார் ஒரு பழம்பெரும் தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட பைனான்ஷியர். இந்தத் துறையில் பெருமதிப்போடு வாழ்ந்தவர்.  எம்ஜிஆரின் சொந்த விருப்பு, வெறுப்புகளால் ’ராஜா தேசிங்கு’ படம் தயாரிப்பினை நீண்ட நாட்கள் இழுத்ததனால், லேனா நொந்து நூலாகி திரும்பவும் எழுந்திருக்க முடியாதபடி திரைத்துறையை விட்டே ஒதுங்கிப் போனார். (இந்த மாதிரியாக எம்ஜிஆரால் ஒதுக்கப் பட்டவர்கள் லிஸ்டில் சந்திரபாபு, அசோகன், கடைசியாக ஏ.பி நாகராஜன் போன்ற நமக்குத் தெரிந்த/தெரியாதவர்கள் பலருண்டு!)

      நமது இன்றைய பாட்டான ‘சரசராணி கல்யாணி’ யை உடுமலை நாராயண கவி எழுத, ‘சுரடி’ எனும் ராகத்தில் அமைத்திருக்கிறார், ராம்நாதன். கர்நாடக சங்கீதத்தில் இந்த ராகத்தில் பல பாடல்கள் இருப்பினும், நடனத்திற்கான விரக தாபத்தை வெளிப்படுத்தும் பாடல்களே அநேகம். பாட்டு முழுவதும் ராமநாதனின் ஹார்மோனியம் பாடகர்களைத் தொடர்ந்துவருவதையும், இன்று அருகிவரும் ’மோர்சிங்’ வாத்தியம் (’ட்ஜொய்ங், ட்ஜொய்ங்’ என்று தாளத்தோடு ஒலிக்கிறதே, அதையும்) கவனியுங்கள். தொடக்கத்திலிருந்து ஒரே சீரான, நிதானமான மெட்டும், அதை அருமையாகப் பாடியிருக்கும் ஜெயராமன், பானுமதி குரல்களும்........அமைதியான சூழ்நிலையில் ரசித்துக்கேட்கவேண்டிய பாட்டு, இதோ உங்களுக்காக: