Wednesday, October 19, 2011

வளரும் பிறையே, நீ போதும்!












ஒரு குளுமையான தாலாட்டைச் சென்ற பதிவில் ரசித்தீர்கள் அல்லவா? இன்று, 1960களில் வெளியான ‘பதிபக்திபடத்திலிருந்து மற்றொரு பிரபலமான சோகத் தாலாட்டை ரசிக்கவிருக்கிறோம். இதே படத்திலிருந்து சுசீலா பாடிய ‘இரை போடும் மனிதருக்கேஎன்ற துள்ளல் பாடலை வேறொரு பதிவில் ரசித்ததை மறந்திருக்க மாட்டீர்கள்.

பதிபக்திபடத்தின் அனைத்துப் பாடல்களையும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதியிருந்தார். பீம்சிங்கின் இயக்கத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்திருந்தார்கள். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் ஜி.என்.வேலுமணி. இவர் சரவணா பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் பல வெற்றிப் படங்களை நமக்குக் கொடுத்தவர்.

இவரைப் பற்றி மேஜர் சுந்தரராஜன் ஒரு முறை குறிப்பிட்டார். மேஜர் சென்னையில் காரில் சென்று கொண்டிருக்கும் போது சாலையில் வேலுமணி வறுமையான தோற்றத்துடன் நடந்து வந்து கொண்டிருந்ததைப் பார்த்தாராம். உடனே காரை நிறுத்தி, ‘என்னண்ணே, எப்படிப் பட்டவர் நீங்கள், நடந்து செல்கிறீர்களே, வாருங்கள், எனது காரிலேயே செல்லலாம்என்று அழைத்தாராம். அதற்கு வேலுமணி அளித்த பதில்: ‘வேண்டாம், தம்பி! இப்போது எனக்கு நடந்து செல்லவேண்டும் என்பதுதான் விதி!காலம் என்பது எப்பேர்ப்பட்டவனையும் சுழற்றி அடிக்கும் என்கிற வாழ்க்கைத் தத்துவத்தை எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறார் பாருங்கள்!

இன்றைய பாடலின் கதையிலும் அத்தகைய சூழ்நிலைதான்! மகன் காதலித்துத் திருமணம் புரிந்த பெண்ணை, அவள் கணவன் வெளியூரில் இருக்கும் போது, குழந்தையுடன் ஊரை விட்டே துரத்துகிறார்,அவன் பணக்காரத் தந்தை. அவள் ஒரு குடிசையில் தன் குழந்தையைத் தாலாட்டிப் பாடுகிறாள்:

‘பாப்பா உன் அப்பாவைப் பார்க்காத ஏக்கமோ,

பாய்ந்தே மடிதனில் சாய்ந்தால் தான் தூக்கமோ,

தப்பாமல் வந்துன்னை அள்ளியே அணைப்பார்,

தாமரைக் கன்னத்தில் முத்தங்கள் விதைப்பார்,

குப்பை தன்னில் வாழும் குந்துமணிச் சரமே,

குங்குமச் சிமிழே, ஆராரோ!

அப்பா, முத்தங்களை ‘விதைப்பாராம்’! அடடா, என்ன ஒரு அழகான கற்பனை! தற்போது அருகில் இல்லாத அப்பாவைப் பற்றிக் கூறிய பின்னர், பட்டுக்கோட்டையார் தன் வழக்கம் போல, குழந்தைக்கு (நமக்கும்!), தன்னம்பிக்கை யையும் ஊட்டத் தவறவில்லை!

‘ஏழை நம் நிலையை எண்ணி நொந்தாயோ,

எதிர்கால வாழ்வில் கவனம் கொண்டாயோ,

நாளை உலகம் நல்லோர்கள் கையில்,

நாமும் அதிலே உயர்வோம் உண்மையில்

என்று கூறும் அவர், எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு தாய்க்கு வேண்டியது தம் மக்களைத் தவிர வேறில்லை என்பதையும் விடவில்லை!

‘மாடி, மனை வேண்டாம், கோடிச் செல்வம் வேண்டாம்,

வளரும் பிறையே, நீ போதும்.....

என்று முடிக்கிறார்! சில சாதாரண வரிகள், ஒரு சாதாரணத் தாலாட்டு, இவை ஒரிரு வித்தகர்கள் கையில் கிடைத்ததும் அது எப்படி எட்டமுடியா உயரத்துக்குச் சென்றுவிடுகிறது என்பதற்கு இந்தப் பாடலே சான்று!

இப்படி ஒரு அழகான பாடலை எழுதிக் கொடுத்துவிட்டார் கவிஞர். இதற்கு இசையமைத்திருக்கிறார்கள் பாருங்கள் மன்னர்கள்! இவர்களை ஏன் மன்னர்கள் என்று அழைத்தார்கள், அதற்கும் மேலே எங்கேயோ உலாவுபவர்கள் அல்லவா இவர்கள் என்று ஆச்சரியப்பட வைக்கும் மெட்டையும், கோர்விசையையும், (பாட்டின் பாவத்தை உள்வாங்கி, கதையின் போக்குக் கேற்ப சோகத்தையும்) வாத்தியங்களின் வாசிப்பில் கலந்து கொடுத்தால்.......உங்கள் திறமைகளுக்கு என்னுடையதும் சளைத்ததில்லைஎன்று மிக மிக உணர்ந்து, அருமையாகப் பாடியிருக்கிறார், சுசீலா!

இந்தப் பாடலும், சிட்டுக்குருவி, முத்தம் கொடுத்துஎன்கிற ‘புதியபறவைப் பாடலும் சுசீலாவின் சாகாவரம் பெற்ற பல பாடல்களில் இரு பாடல்கள் என்பதில் சந்தேகமில்லை!

இந்த இடத்தில் இன்னொரு சமாசாரத்தையும் உங்களுக்குச் சொல்லியே தீரவேண்டும்! ஒரு முறை, நானும் நண்பர் அமுதவனும், இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரனிடம் மெல்லிசைமன்னர்களைப் பற்றிக் குறிப்பிட்ட போது அவர் சொன்னார்:ஸார், அவங்களோட எல்லாம் எங்களை கம்பேர் பண்ணாதீங்க! அவங்க போட்டிருக்கிற ஒவ்வொரு ‘பாக் ரவுண்ட் ம்யூஸிக், ரீ ரெகார்டிங் ம்யூசிக்கை வச்சு நாங்கள்ளாம் பல பாடல்களே போட்டுடுவோம்என்று. இப்படி ஒரு பெயர் வாங்க எத்தனை இசை ஞானம், எத்தனை உழைப்பு வேண்டியிருந்திருக்கும்!

சுசீலாவின் குரலும், வயலின்களின் ஆட்சியும் இந்தப் பாட்டில் பரிபூரணம்! சிதாரும் கிடார் கார்ட்ஸும், தபலாவும், டபிள் பேஸும், (பாட்டின் கட்டக் கடைசியில் மிகச்சிறு இணைப்பு பிட் டாக ஒலிக்கும்) (muted) ட்ரெம்பட்டும்......இப் பாடல், மன்னர்களின் மற்றும் பல பாடல்களைப் போலவே ஒரு முழுமையான மெலடியாக மலர்ந்திருக்கிறது!

(ட்ரம்பெட் என்பது கட்டையான தொனி உடைய ஒரு மேற்கத்திய காற்று வாத்தியம். புதையல் படத்தில் சந்திரபாபு ‘உனக்காகஎன்ற பாட்டில் பின்னிசையில் இதை வாசிப்பார். இந்த வாத்தியத்தின் முன்னால் ஒரு அடைப்பானைப் பொருத்தி, அதன் சப்தத்தைக் கணிசமாகக் குறைப்பார்கள். அப்போது எங்கோ தூரத்திலிருந்து கேட்பது போலிருக்கும். இதை muted trumpet என்பார்கள். இதே பதி பக்தி படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘கொக்கர கொக்கரக்கோ சேவலே என்ற பாட்டிலும், ஜெமினியின் லோகோவின் signature tune னிலும் இந்த ம்யூடட் ட்ரம்பெட் வாத்தியத்தின் தொனியைக் கேட்கலாம்).

இப்போது இந்த இனிமையான தாலாட்டைக் கேட்கலாமா?

Chinnanjiru kan malar by Krishnamurthy80

தொடர்ந்து சில தாலாட்டுகளைக் கேட்டு ரசித்தோம். அடுத்த பதிவில் வேறு வகையான ஒரு பாடலில் சந்திப்போம், நண்பர்களே!

Monday, October 17, 2011

பராசக்தியில் தாலாட்டு!

நாம் கேட்கவிருக்கும் தாலாட்டிற்கு, இன்று ஒரு முக்கியமான தினம். இன்றைக்குச் சரியாக 59 வருடங்களுக்கு முன்னர், 17-10-1952ல் வெளிவந்த மிகப் புகழ் வாய்ந்த பராசக்தி திரைப்படத்தில் இப் பாடல் இடம் பெற்றது. பின்னர் நடிகர் திலகமான சிவாஜி கணேசன் அறிமுகமான இந்தப் படத்திற்கு இசை ஆர்.சுதர்சனம். இவர் நீண்ட காலம் ஏவிஎம் ஸ்டுடியோஸின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்தவர். சில காலம் அவர்கள் திரைப் படங்கள் எடுப்பதை நிறுத்தியிருந்த போது அங்கிருந்து வெளியேறிப் பின்னர் ‘பூம்புகார், ‘அன்புக்கரங்கள்போன்ற பல வெற்றிப் படங்களுக்கும் இசையமைத்தார்.

ஏவிஎம் நிறுவனத்தினரின் திரைப்படங்களிலும், சின்னத்திரையில் அவர்களின் தொடர்களிலும் முதலில் அவர்களின் முத்திரை தோன்றும் போது கிளாரிநெட்டில் ஒரு அறிமுக இசை வருமல்லவா, அதற்கு மோகனம் என்கிற கர்நாடக சங்கீத ராகத்தில் இசையமைத்தவரும் சுதர்சனம் தான். (இதே போல ஜெமினி நிறுவனத்தின் இரட்டைச் சிறுவர் லோகோவிற்கும் மோகன ராகத்தில் தான் (ட்ரம்பெட் வாத்தியத்தில்) மெட்டு அமைக்கப் பட்டிருக்கும்).

இந்த முகப்பு மெட்டு பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல்: சின்னத்திரையும், வானொலி நிலையங்களும் 24 மணி நேரத் தொல்லைகளாக மாறுவதற்கு முன்னால், ஒவ்வொரு நிலையத்துக்கும் தனித் தனியே அறிமுக இசை உண்டு. அந்த மெட்டைக் கேட்ட உடனேயே நீங்கள், அது இன்ன ரேடியோ ஸ்டேஷன் அல்லது இன்ன டிவி சானல் என்று சொல்லிவிட முடியும். அத்தகைய மெட்டை, ஆங்கிலத்தில் Signature tune என்று குறிப்பிடுவார்கள். ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகள் தொடங்கு முன்னர் அந்த மெட்டு ஒலிக்கும். ஆரம்ப காலத்தில் சன் தொலைக்காட்சியில் நீங்கள் பார்த்திருக்கலாம்.

சின்னத்திரையில் தூர்தர்ஷனுக்காகப் போடப்பட்ட பிரத்தியேக மெட்டுக்கு வட இந்திய ஸிதார் மேதை பண்டிட் ரவிசங்கர் இசையமைத்தார். இது ஷெனாய் வாத்தியத்தில் இசைக்கப் பட்டிருக்கும். அதற்கு மிகவும் முந்தைய ஸ்தாபனமான அகில இந்திய வானொலிக்காக போடப் பட்ட மெட்டுக்கு, (இது வயலின் வாத்தியத்தில் இசைக்கப் பட்டிருக்கும்) ரவிசங்கரின் தந்தைதான் இசையமைப்பாளர்! இரண்டுமே சிவரஞ்சனி என்ற ராகத்தில் (பாலும் பழமும்படத்தில் வரும் ‘நான் பேச நினைப்பதெல்லாம்பாடலின் ராகம்) அமைந்தவை.

ஏவிஎம் படங்களில் பாரதியாரின் (தீராத விளையாட்டுப் பிள்ளை போன்ற) பல பாடல்களுக்கு இசையமைத்து அவற்றைக் கர்நாடகக் கச்சேரி மேடைகளுக்கும் கொண்டு சென்ற திறமையாளர் சுதர்சனம். அத்தோடு 1940களிலேயே டி.கே.பட்டம்மாள் என்கிற பிரபல கர்நாடக சங்கீதப் பாடகியை திரை இசைக்கு அறிமுகப் படுத்தியவரும் இவர்தான். இந்த டி.கே.பியின் பேத்தியான நித்யஸ்ரீ மகாதேவன் தான் (ஜீன்ஸ்படத்தில் ‘கண்ணோடு காண்பதெல்லாம்(பீம்ப்ளாஸ் ராகம்). படையப்பா படத்தில் மின்சாரக் கண்ணா’ (வசந்தா ராகம்) முதலிய பாடல்களைப் பாடியவர்.

இசையமைப்பாளர் சுதர்சனத்தின் தம்பி தான் ஆர்.கோவர்தனம். இவர், மெல்லிசை மன்னர்களிடமும், இளையராஜாவிடமும் ‘இசை நடத்துனர் (Orchestra Conductor) ஆக இருந்தவர். தனியே, கைராசி,பட்டணத்தில் பூதம் போன்ற பல வெற்றிப் படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.

பராசக்தி படத்தின் பாடலுக்கு வருவோம். படத்தில் ஸ்ரீரஞ்சனி என்கிற நடிகை சிவாஜி சகோதரர்களின் தங்கையாக வருவார். இயற்கையாகவே மிகச் சோகமான தோற்றம் கொண்ட இவர், பராசக்தி படத்தில் விதவையாக, தன்னுடைய குழந்தையைத் தாலாட்ட இந்தப் பாடலைப் பாடுவார். பாடுவது தங்கை என்ற உண்மையை அப்போதுதான் தெரிந்து கொள்ளும் சிவாஜி வீட்டின் வெளியே நின்று கேட்பது போலக் காட்சி.

இந்தக் காட்சிக்கான பாடலை எழுதியிருப்பவர் கலைஞர். வெளியில் பார்த்துக் கொண்டிருப்பவன் தான் குழந்தையின் சின்ன மாமன் என்று தெரியாமலேயே, அவன் என்னென்ன சீதனம் கொண்டு வருவார் என்று எதிர் நோக்கும் பாடலை அற்புதமாக எழுதியிருக்கிறார். பாடியிருப்பவரோ நமக்கு ஏற்கனவே அறிமுகமான (தென்றல் வந்து வீசாதோ’) டி.எஸ்.பகவதி. இவர் குரலின் முழு இனிமையை இந்தப் பாட்டில் சுகமாக அனுபவிக்கலாம்! மிகவும் ஸிம்பிளான கோர்விசை. (மெட்டின் மீது எவ்வளவு நம்பிக்கை, பாருங்கள்!) சில வயலின்கள், அவற்றிற்கேற்ப கிடாரின் கார்ட்ஸ், மற்றும் வீணை, தபலா இவைகளை மட்டுமே வைத்துக் கொண்டு நம்மை எங்கோ அழைத்துச் செல்லும் அமைதியான பாடலிது. இந்தப் பாடலின் தாளமும் waltz வகைதான் என்பதோடு, 60 வருடங்களுக்கு முந்தைய துல்லியமான ஒலிப்பதிவையும் கவனியுங்கள்!

இந்தப் பாடல் என் நெஞ்சில் நிலைத்திருப்பதற்கு ஒரு முக்கிய காரணமுண்டு. என் அன்னைக்கு மிகவும் பிடித்த பாடல் இது. என்னை அடிக்கடி பாடச்சொல்லிக் கேட்டதுண்டு. (சிரிக்காதீர்கள், அப்போதெல்லாம் நான் நன்றாகவே பாடுவேன், ஸ்வாமி!) பாடலைக் கேட்போமா?

Konjum mozhi sollum by Krishnamurthy80

அடுத்து வரும் தாலாட்டில் சந்திக்கலாமா நண்பர்களே!

Sunday, October 16, 2011

அன்பில் மலர்ந்த தாலாட்டு!


இன்று நீங்கள் ரசிக்கப் போகும் தாலாட்டு, அப்போது தான் புதிதாகத் தமிழ்த்திரையில் காலூன்றிய சுசீலாவின் இளமையான, சுகமான குரலில் வருகிறது. 1950களில் வெளிவந்த ‘கணவனே கண்கண்ட தெய்வம்திரைப்படத்தில், இவர் பாடியிருந்த உன்னைக் கண் தேடுதே’, ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோஎன்ற பாடல்களுடன், இன்றைய தாலாட்டான ‘அன்பில் மலர்ந்த நல் ரோஜாஎன்ற அற்புதமான பாடலும் சேர்ந்து, சுசீலாவை எங்கோ உயரத்தில் கொண்டுபோய் உட்கார வைத்தன. அன்று ஆரம்பித்த அவருடைய புகழ், அவரின் தனித் திறமையினாலும் கொஞ்சும் குரலினாலும் இன்றும் கொஞ்சம் கூடக் குறையாமல் அப்படியே இருக்கிறது.
க.க.தெய்வம் திரைப் படத்திற்கு ஏ.ராமாராவ் இசையமைத்திருந்தார். தெலுங்கு, தமிழ்ப் படங்களுக்கு நிறைய நல்ல இசையைக் கொடுத்திருக்கிறார், இவர். இந்த க.க.தெய்வம் படத்தில் முதலில் பானுமதி தான் வில்லியாக நடிப்பதாக இருந்தது. படத்தில் மிகப் பிரபலமான ‘உன்னைக் கண் தேடுதேஎன்ற பாடலை முதலில் அவ்ரைப் பாட வைத்துப் பதிவும் செய்து விட்டிருந்தார்களாம். பின்னர், ஏதோ காரணங்களுக்காக பானுமதி வெளியேற, லலிதா (பத்மினியின் மூத்த சகோதரி) தான் வில்லி என்று முடிவானது. எனவே, இந்தப் பாடலைப் பாட சுசீலாவுக்கு வாய்ப்புக் கிடைத்தது.
இந்தப் பாடல், நாக லோக இளவரசி குடித்துவிட்டு நாயகனான ஜெமினிகணேசனைப் பார்த்துப் பாடுவது போலப் படத்தில் வருகிறது. பாடலின் நடு நடுவே விக்கல் ஓசை வரும். அந்த ஓசை, தன்னுடையது என்று பானுமதி பின்னாளில் பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார்.
நம்முடைய தாலாட்டுக்கு வருவோம்! படத்தின் கதாநாயகியான இளவரசி அஞ்சலிதேவி, சாபம் ஒன்றினால் குரூரமாக மாறியிருக்கும் ஜெமினி கணேசனின் மனைவியாக ஆகிறார். காட்டில் குடிபுகும் அவர்களின் குழந்தையைத் தாலாட்ட அஞ்சலிதேவி இந்தப் பாடலைப் பாடுகிறார்.
பாடலின் ஆரம்ப இசையில் எலக்ட்ரிக் கிடார் என்கிற வாத்தியத்தை (நான் முன்பு குறிப்பிட்டிருந்த) டபிள் பேஸுடன் சேர்த்து உபயோகித்திருக்கிறார்கள். முன்பெல்லாம் இந்த வகை கிடாரை, படுக்கைவசத்தில் வைத்து, ஒரு கையால் மீட்டி, இன்னொரு கையில் கட்டையினால் அதே தந்தியைத் தழுவுவார்கள். அதனால் ஒரு தொடர்ந்த சோகமான சப்தம் கிடைக்கும். படங்களில் சோக ரசத்தை எடுத்துக் காண்பிக்க இந்த வாத்தியத்தை உபயோகிப்பார்கள். (இப்போது இதையே (எலக்ட்ரிக் கிடாரில்) கையில் வைத்துக் கொண்டு மீட்டும் படி வந்துவிட்டது). இன்னும் மற்ற வாத்தியங்களின் கோர்வையும் இருந்தாலும், இந்தப் பாடலின் தாளமும் Walz வகை என்பதையும் சுசீலாவின் குரலில் ஹம்மிங் ஆரம்பித்தவுடன் எப்படி அவை பின்னே போய்விடுகின்றன என்பதையும் கவனியுங்கள்:
இன்னொரு அருமையான தாலாட்டில் சந்திப்போம், நண்பர்களே!

Friday, October 14, 2011

தாலாட்டும் தியாகராஜபாகவதரும்!

மனிதர்கள் தங்களுடைய எந்த வயதிலும் தயங்காமல், சலிக்காமல் அன்பு செலுத்துவது, தங்கள் அன்னையிடம்! அதைப் போலவே, எந்த வயதிலும் ரசிக்ககூடியது தாலாட்டை! இரண்டும் நினைக்கவே இனிப்பவை.

நமது திரைப் படங்களில் (இப்போது புறந்தள்ளப் பட்டு வழக்கொழிந்து வரும்) தாலாட்டுப் பாடலை,(மழை கூட ஒரு நாளில் தேனாகலாம்போல) வெறும் தாலாட்டாக மட்டும் உபயோகித்திருப்பது மிகவும் அரிது. பெரும்பான்மையான தாலாட்டுகள், நீங்கள் ஏற்கனவே ரசித்த ‘தென்றல் வந்து வீசாதோபோல, அல்லது வரப்போகும் இன்றைய பாடல் போல சோகம் கலந்ததாகவே காணப்படுகின்றன. இது தற்செயலா அல்லது வேண்டுமென்றே கடைப்பிடிக்கப் படுகிறதா யானறியேன்!

அதே போல, பெரும்பாலான திரைத் தாலாட்டுகளும், (இந்தப் பாடல் உட்பட) ‘வால்ட்ஸ்’ (Waltz) என்ற ஆங்கிலேய நடனத்தின் தாளத்தையே ஒட்டி இருக்கின்றன. (இந்தத் தாளம் (டுண், டக்டக்) என்று தொடரும் ஒன்றில் மூன்று தாளம்).

நண்பர்களே, இன்றும், வரும் சில பதிவுகளிலும் சில சுகமான தாலாட்டுப் பாடல்களை நீங்கள் கேட்கவிருக்கிறீர்கள். 1940 70க்கு இடைப் பட்ட முப்பது ஆண்டுகளில், தாலாட்டின் கோர்விசையமைப்பில் எத்தனை மாறுதல்கள் இருந்தாலும், பாடல்கள் அனைத்தும் உயர்ந்த ரசனைக்கென்றே உருவாக்கப் பட்டவை என்பது (இவற்றைக் கேட்கும்போது) உங்களுக்கு விளங்கும்.

இந்தப் பதிவுகளில் (கூடிய மட்டிலும்) வேறு வேறு வித்தியாசமான குரல்களில் பாடல்களை ரசித்து வருகிறோம், அல்லவா? இன்றைய பாடகரின் குரலோ, சாதாரணமான குரல்களிலிடமிருந்து மிகவும் வேறுபட்டது. இவருடைய குரலைப் போல, இவருக்கு முன்னாலும் சரி, பின்னாலும் சரி யாருக்கும் அமையவில்லை. அவ்வளவு தனித்தன்மை கொண்ட அற்புதமான, இதமான, சுகமான குரல்,இது!

இவருக்கு மட்டுமில்லை, நமது சமகாலத்தில் கோலோச்சிய டி.எம். செளந்திரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் போன்ற கம்பீரமான ஆண் குரல்களைக் கொண்டவர்களுக்கு ஈடாகவும் இன்று வரை வேறு குரல்கள் கிடைக்க வில்லையே! கிடைக்கவில்லையா, அல்லது இன்றைய இசையமைப்பாளர்கள் வர விடுவதில்லையா என்பது விவாதத்துக்குறியது! (மற்றொன்று, டி.எம்.எஸ், என்றவுடன் நினைவுக்கு வருவது, அவர் பாடியவற்றிலேயே உன்னதமான தாலாட்டான ‘ஏன் பிறந்தாய் மகனேஎன்ற ‘பாகப் பிரிவினைபாடல்!சரிதானே?)

சரி, இதோ, இன்றைய பாடலைப் பாட வருகிறார், தமிழ்த் திரையின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர். இவருடைய குரலில் ஒலிக்கும் மணி ஓசையைப் போன்ற ஒரு மயக்கும் ரீங்காரம் அடடா, அதைக் கேட்டுத்தான் ரசிக்க வேண்டுமே தவிர, வார்த்தைகளால் வர்ணிக்க நிச்சயம் முடியாது.

இன்றைய அவருடைய பாடல், (1940களில் வெளி வந்த) ‘அசோக்குமார்என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது. இசையமைத்தவர் பாகவதரின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.ராமநாதன்.

படத்தில், இளவரசனான நாயகன் ஏழையாகி, அவனுக்குக் கண் பார்வையும் போய்விடுகிறது. அப்போது தன்னுடைய குழந்தையைத் தூளியில் போட்டு, இந்தப் பாடலைப் பாடுகிறார். பாடலில் பியானோ முக்கிய இடம் வகிக்கிறது. தாளமோ பாடல் முழுவதையும் ஒரே கதியில் தொடருகிறது. இருப்பினும், எல்லாவற்றையும் பின் தள்ளிவிட்டு, பாகவதரின் மற்ற பாடல்களைப் போல, இதிலும் அவரின் குரலுக்கும், மெட்டுக்கும் தான் முதலிடம். பாடலைக் கேளுங்கள்:

Unnaiye anbudan by Krishnamurthy80

மீண்டும் சந்திக்கும் முன்னர்: சென்ற பதிவில் இணைத்திருந்த (யாரடி வந்தார்’) பாடலின் நல்ல ஒலிப்பதிவு இப்போது கிடைத்தது. மாற்றியிருக்கிறேன். அனுபவியுங்கள் நண்பர்களே, அடுத்த பதிவில் சந்திக்கும் வரை!

Sunday, October 9, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (பதிநான்கு)

சென்ற பதிவில், மூன்று அருமையான, அமைதியான பாடல்களைக் கேட்டீர்கள். இன்று கொஞ்சம் ஆர்ப்பாட்டமான பாடல் ஒன்று கேட்கலாமே!

டூயட்டுகள் என்றால் இரு ஆண்கள் அல்லது இரு பெண்கள் பாடுவது என்று உங்களுக்குத் தெரியும். ஆனால், நீங்கள் இன்று இங்கே கேட்கவிருக்கும் பாடலில் ஒரு தபலா, நமது எல்.ஆர்.ஈஸ்வரியுடன் டூயட் பாடப் போகிறது!

கவிஞர் கண்ணதாசனிடம் ஒரு நல்ல பழக்கம். தனது சொந்தப் படங்களின் இசைக்கு, மெல்லிசை மன்னர்களையும், திரை இசைத் திலகத்தையும் மாற்றி மாற்றி உபயோகப் படுத்திக் கொள்வார். அவரின் (எஸ்.எஸ்.ராஜேந்திரன், தேவிகா நடித்த) ‘வானம்பாடிபடத்துக்குப் பின்னவரின் இசை. இந்தப் படத்தில், ‘கங்கைக் கரைத் தோட்டம்’ (சுசீலா), கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்’ (டி.எம்.எஸ்) என்ற பாடல்கள் மிகவும் புகழ் பெற்றன. அதே படத்தில் தான், ஒரு கணிகை மனையில் (ஜோதிலக்ஷ்மி) நமது இன்றைய பாடலைப் பாடி ஆடுவதாக வருகிறது.

தாளத்திற்கும், தாளத்தினாலும் பெயர் பெற்றவர், திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் என்று முன்னரே குறிப்பிட்டிருக்கிறேனே, அதை உறுதிப் படுத்த இந்தப் பாடலைவிடப் பொருத்தமானது வேறில்லை!

இந்தப் பாடலில் இனம் பிரிக்க முடியாத அளவு ஈஸ்வரியின் குரலும், தபலாவும் ஒன்றிக் கிடக்கின்றன! ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் இரண்டின் கூட்டும் அவ்வளவு இனிமை! இதைத் தவிர (கணிகை மனைக்கே உரிய ஹார்மோனியமும், ஸாரங்கி எனும் வடநாட்டு (வயலின் போன்ற) வாத்தியமும், மணிகளின் ஒலியும், குழலின் துணையும் இசைக்கு இசை சேர்க்கின்றன! இந்தப் பாடலையும் திரையரங்கில் கேட்பது மிக இனிமையான அனுபவம்! இப்போதும் எண்ணி எண்ணி இன்புறுகிறேன்!

இதற்கு மேலும் உங்களுக்கும், இந்த டூயட்டுக்கும் இடையில் நான் நிற்பதை விட, நீங்களே இதோ பாடலைக் கேட்டு அனுபவியுங்களேன்!

Yaaradi vandhar LRE.mp3 by Krishnamurthy80

மற்றொரு பாடலுடன் மீண்டும் சந்திப்போம், நண்பர்களே!

Wednesday, October 5, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (பதிமூன்று)


சென்ற பதிவில் உங்களுக்கு அறிமுகப் படுத்தப் பட்ட பாடகி ஜிக்கியைப் பற்றி இங்கே கொஞ்சம் பேசுவோமா? அவர் பாடிய மூன்று இனிமையான பாடல்களை இன்று கேட்கப் போகிறீர்களே!

இவருடைய இயற் பெயர், பி.ஜி.கிருஷ்ணவேணி என்றிருந்தாலும், ஜிக்கி என்று சொன்னால்தான் எல்லாருக்கும் தெரியும்! ஜிக்கி, தன்னுடைய மிக இளம் வயதிலேயே திரை இசைத்துறையில் கால் பதித்துவிட்டார்.

இதைக் கேளுங்கள்: ஞான சௌந்தரிஎன்ற ஒரு செவிவழிக் கதையை இரண்டு பிரபல நிறுவனத்தவர்கள் படங்களாக (ஏறத்தாழ சமகாலத்தில்) எடுத்து வெளியிட்டனர். அவற்றில், புகழ் மிக்க ஜெமினி நிறுவனத்தின் தயாரிப்பு படுதோல்வியடைந்தது! ஸிடாடெல் ஸ்டுடியோஸ் ஜோஸப் தளியத் (ஜூனியர்) (இவர் தான் பின்னாளில் ஜெய்சங்கரை அறிமுகம் செய்தவர்). தயாரித்து, இயக்கி, டி.ஆர்.மகாலிங்கம், எம்.வி.ராஜம்மா நடித்து, எஸ்.வி. வெங்கடராமன் இசையமைத்திருந்த படமோ பிய்த்துக் கொண்டு ஓடியது! இதற்கு ஒரு காரணம், கிறித்துவ மத கோட்பாடுகளைத் தெளிவாகப் படத்தில் காட்டியிருந்தது. இன்னொரு மிக முக்கியமான காரணம்: படத்தின் இசை! இந்தப் படத்தில், பாடகி பி.ஏ.பெரியநாயகி பாடியிருந்த ஜீவிய பாக்கியமே’, வெட்டுண்ட கைகள் என்று எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட்! இப்போது வேண்டுமானால் கூட, சென்ற தலைமுறையைச் சேர்ந்த கிறித்துவ நண்பர்களைக் கேட்டுப் பாருங்கள்! ‘ஞானசெளந்தரிஎன்ற உடனே அவர்கள்,

அருள் தாரும், தேவமாதாவே,

ஆதியே இன்ப ஜோதியேஎன்று

பாடவே ஆரம்பித்தால் ஆச்சரியப்பட வேண்டாம்! அவ்வளவு தூரம் ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்தப் பாடல், ஞான செளந்தரிபடத்தில், சிறுமி ஞானம், மங்கையாகுவதைப் பாட்டில் காட்டிடும் காட்சியில் வருகிறது. அதில், மங்கைக்காக பி.ஏ.பியும், சிறுமிக்கான போர்ஷனை இளம் ஜிக்கியும் பாடியிருக்கிறார்கள்! திரை இசைத் துறையில் ஜிக்கியின் முதல் பாடல் இது! எஸ்.வி. வெங்கடராமன் என்கிற மோதிரக் கையால் இப்படிக் குட்டுப் பட்ட ஜிக்கி, பின்னாளில் எவ்வளவு புகழ் பெற்றார் என்பது உங்களுக்கே தெரியும்.

(அப்போது புகழின் உச்சியில் இருந்த குமாரி கமலா எனும் பிரபல பரத மற்றும் திரை நாட்டிய தாரகையை ஒரு பாடல் பாட வைக்க வேண்டுமென்று ‘ப்ரஷர்வந்தபோது, அவரின் குரல் மைக்குக்கு ஏற்றதில்லை என்று நிராகரித்த தைரியக்காரர், இந்த எஸ்.வி.வி!) அவருடைய இசையமைப்பில் அற்புதமான சில பாடல்களைப் (இன்று நாம் கேட்கவிருக்கும் மூன்று பாடல்கள் உட்பட) பாடியுள்ளார், ஜிக்கி.

ஜிக்கி க்கும் (டி.கே.பகவதியைப் போல) அருமையான, மென்மையான குரல். ஆனால் இவர் அந்தக் காலத்திலேயே (பிற்கால எல்.ஆர்.ஈஸ்வரியைப் போல) தனது திறமையினால் குரலில் ஜாலங்கள் செய்து பல கதாநாயகிகளுக்கும் குரல் கொடுத்தார். நிறைய ‘க்ளப் டான்ஸ்,காமெடிப் பாடல்கள் பாடினார். சுசீலாவுக்கு இணையாகப் புகழும் சேர்த்தார். திரை வாழ்வில் பாடகர் ஏ.எம். ராஜாவோடு பல இனிமையான டூயட்களைப் பாடியவர், பின்னர் அவரையே மணந்து, நிஜமான இல்வாழ்வில் நிம்மதியின்றி மறைந்தார் என்பது ஒரு மகா சோகம்!

இன்று நாம் கேட்கவிருக்கும் ஜிக்கியின் முதல் பாடல், ‘கண்கள்என்ற திரைப்படத்தில் வந்தது. (இது, நடிகர் ஸஹஸ்ரநாமத்தின் ‘ஸேவாஸ்டேஜ்நாடகக் குழுவினரால் நாடகமாக வெற்றி பெற்ற கதை. இதே குழுவினரோடு, இந்த நாடகத்தில் சிவாஜியும் நடித்தார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். தவிரவும், தேவிகா என்கிற பிரமீளாவும் இந்தக் குழுவில்தான் நடிப்புப் பயிற்சி பெற்றார் என்கிற உப தகவலையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது முக்கியம்!)

கண்கள்படத்தின் பாடல்களை பலர் எழுதியிருப்பதால், இந்தக் கருத்தாழம் மிக்க பாடலை எழுதியவர் பெயர் தெரியவில்லை. சுத்தமான கர்நாடக சங்கீத ராகமான ‘கல்யாணியில் அமைந்திருக்கிறது, இப்பாடல், (இதே ராகத்தில் அமைந்த மற்ற பாடல்கள்: மன்னர்களின் ‘தங்கப் பதுமையில் ‘முகத்தில் முகம் பார்க்கலாம்’, எம்.எஸ்.வியின் தவப்புதல்வனில் இசை கேட்டால் புவி அசைந்தாடும்மற்றும் பலப்பல! இளையராஜா இந்த ராகத்தில் ஏகப்பட்ட பாடல்களைப் போட்டு, கல்யாணியை, உண்டு, இல்லை என்று பண்ணிக் கொண்டிருக்கிறார்! அவற்றில் ஒன்று, ‘சிந்துபைரவியில் யேசுதாஸ் பாடும் ‘கலைவாணியே). இன்றைய பாடலுக்கு வருவோம்.

காதலாகி, கண்ணீரும் மல்கி என்ற தொகையறாவோடு,

‘ஆடிப் பாடி தினம்

தேடினாலும் அவன் பாதம் காணமுடியாது என்று

ஆரம்பிக்கும் பாடல், கடைசியில், ஜிக்கியின் குரல் உச்சத்திற்குப் போய்,

‘கற்புள்ள மாதர்கள், காக்கும் உழவர்கள்,

கருத்தினில் வாழ்கிறான் கடவுள் என்றறியாமல் (ஆடிப் பாடி) என்று

பாடலை முடிக்கும்போது, மெய் சிலிர்க்கிறது! ஜிக்கியின் குரலையும், பாடலின் கோர்விசையையும் ஊன்றிக் கேட்கும்போது, உங்களுக்கும் நிச்சயம் சிலிர்க்கும்! பாடல் இதோ:

Aadip paadi dhinam by Krishnamurthy80

அடுத்த இரு பாடல்களும், ஜெமினி கணேசன், சாவித்ரி, சந்திரபாபு நடித்த ‘மாமன் மகள்என்ற படத்திலிருந்து வருகிறது. (இந்தப் படத்தில் சந்திரபாபுவும் டி.எஸ்.துரைராஜ் என்கிற காமெடியனும் பாடிய ‘கோவா மாம்பழமேஎன்னும் பாடல் இன்று கூட ஒலித்துக் கொண்டிருக்கிறது!)

இதில் வரும் முதல் பாடலில், காதலைக் கொண்டாடிக் காதலி பாடுகிறாள், ‘ஏனென்று நீ சொல்லு தென்றலேஎன்று. மற்றது, தன்னுடைய அதே காதல் முறிந்துவிடுமோ என்கிற ஆதங்கத்தில் பாடும், ‘ஆசை நிலா சென்றதே என்ற சோக கீதம்!

இரண்டு பாடல்களிலும் குரலும், மெட்டும், உணர்ச்சிகளும் எப்படித் கொப்பளிக்கின்றன, பாருங்கள்! அதற்கு, வாத்தியங்கள் தான் எவ்வளவு அனுசரணை! இரண்டு பாடல்களிலும் வயலின்களும், சோகப்பாட்டில் ஷெனாயும் (நாதஸ்வரத்தின் தம்பி போல அதன் அரை அளவில் இருக்கும் காற்று வாத்தியம் இது! நாம் திரையில் சோகத்துக்கும், வடநாட்டில் நிஜத் திருமணத்திற்கும் உபயோகிக்கப்படுத்துவது!) அருமை, அருமை! முக்கியமாக, இரண்டு பாடல்களிலும், தபலா, டோலக் கின் அழுத்தமான வாசிப்புதான் பாடல்களின் ஜீவன் என்பது மறுக்க முடியாத உண்மை யல்லவா?!

மூன்று பாடல்களும் தனித்தனியே அனுபவிக்கப் பட வேண்டியவை. சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக இங்கே இணை சேர்க்கப் பட்டுள்ளன. பொறுத்தருளுங்கள்!

பாடல்கள் இதோ:

Yean endru Nee sollu by Krishnamurthy80


Aasai Nila sendradhe by Krishnamurthy80

மீண்டும் சந்திப்போம், நண்பர்களே!

Sunday, October 2, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (பனிரெண்டு)


ஒரு சுகமான, மிகப்பழைய டூயட், உங்கள் ரசனைக்காக இன்று வருகிறது. இதுவரை நாம் கேட்காத இருவர் சேர்ந்து பாடியிருக்கிறார்கள்.

இந்தத் தலைமுறையினர் பலருக்கு, கே.ஆர்.ராமசாமியைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கணீரென்ற குரலுடைய நாடக, திரைப்படக் கதாநாயகன். நேஸல் வாய்ஸ்எனப்படும், (கொஞ்சம் மூக்கால் பாடுவதுபோல் இருக்கும்) சுகமான குரல் கொண்டவர். அறிஞர் அண்ணாவின் இனிய நண்பர். அவரிடமிருந்து ‘நடிப்பிசைப் புலவர்என்ற பட்டம் பெற்றவர். தீவிர முற்போக்காளர். (ஒரு சமயம் கே.ஆர்.ஆருக் காகவே அண்ணா ஒரே இரவில் எழுதிய நாடகந்தான் ‘ஓர் இரவு’! இது பின்னாளில் ஏவிஎம் நிறுவனத்தின் திரைப்படமாகவும் வந்தது. நமது ‘குழந்தைஎம்.எஸ். ராஜேஸ்வரியின் குரலில், துன்பம் நேர்கையில்என்கிற பாரதிதாசனின் அருமையான பாடல் இப்படம் மூலம்தான் பிரபலமடைந்தது.)

நாடகக் கலைமீது தீராப் பற்று கொண்டவர் கே.ஆர்.ஆர். தமிழகம் முழுவதிலும் தன்னுடைய சொந்த நாடகக் கம்பெனியின் மேடை நாடகங்களை நடத்தி (அப்போதுதான் தோன்றியிருந்த) தி.மு.கழகத்தின் கொள்கைகளை விளக்குவதில் தன் வாழ்நாளையும் பொருளையும் செலவிட்டவர். எம்.ஜி.ஆர், சிவாஜி இவர்களுக் கெல்லாம் திரைத்துறையிலும், அரசியலிலும் முன்னோடி.

இவருடன் ஜிக்கி என்றழைக்கப் பட்ட பி.ஜி.கிருஷ்ணவேணியும் சேர்ந்து பாடியுள்ள பாடலிது . (இவரைப் பற்றி அடுத்த பதிவில்!). பாடல், மாடர்ன் தியேட்டர்ஸாரின் சுகம் எங்கே? என்ற திரைப் படத்தில் இடம் பெற்றது. இப் படத்தின் நாயகர்கள்: கே.ஆர்.ராமசாமியும், சாவித்ரியும்! கதை, வசனம்: கண்ணதாசன் மற்றும் ஏ.கே.வேலன். பாடல்கள்: கண்ணதாசனும், மருதகாசியும். (இன்றைய பாடலை, இந்த இருவரில் யார் எழுதியது என்பது குறிப்பாகத் தெரியவில்லை). இசை: அப்போது இன்னமும் ‘மெல்லிசை மன்னர்கள்ஆகாத, விஸ்வநாதன்-ராமமூர்த்தி!

அவர்களின் திரைஇசை வாழ்வின் ஆரம்பகாலத்தில் வந்த படம், ‘சுகம் எங்கே?ஆயினும் பாடல் முழுவதிலும் அவர்களின் பிரத்தியேகக் கற்பனைகள் நிறைய விரவி இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். வழக்கம் போல மெட்டுக்குத் தான் முதல் இடம். என்றாலும், மாண்டலின், வயலின்கள், கிடாரின் கார்ட்ஸ்,தபலா இவற்றின் பங்களிப்பு, கோர்விசையில் அப்போதே அவர்களின் பாணியை உறுதிப் படுத்தியிருக்கிறது. முதலிலிருந்து முடிவு வரை எந்த வித நெருடலும் இல்லாத மெட்டின் சீரான போக்கு என்கிற (மன்னர்களின்) வெற்றி ரகசியமும் அப்போதே ஆரம்பித்திருக்கிறது! முரண் குரல்களான ராமசாமியின் கம்பீரக் குரலும், ஜிக்கியின் மென்குரலும் பரவசப்படுத்துகின்றன.

இங்கே கொடுத்திருக்கும் பாடலின், ஒலிப்பதிவு துல்லியமாக இல்லை யெனினும் பாடலை ரசிக்க முடிகிறது. கேளுங்கள்:

Senthamizh nattu solayile by Krishnamurthy80

மீண்டும் அடுத்த பாடலில் சந்திப்போம், நண்பர்களே!