Wednesday, July 15, 2009

உணர்ச்சிகள்!

நம்மில் எல்லாருக்குமே சொந்தங்களோ அல்லது நெருங்கியவர்களோ இருப்பார்கள் அல்லவா? அதிலும், (என்னைப்போலப்)பணியிலிருந்து சில வருடங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு அனேகமாக தினமும் (ஏதாவது ஒரு) கவலைப்படாவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டது போலிருக்கும். ‘வெளியே சென்றவர்கள் நல்லபடியாக வீடு திரும்ப வேண்டுமே’ என்பதில் ஆரம்பித்து, போய்க்கொண்டே இருக்கும். ஆனால், இந்தக் கவலைகளை விடுங்கள், சில சமயம் சற்றே பெரிய (அதாவது அசல்) கவலைகள் கூட எங்களைப் போன்றவர்களுக்கு மட்டுந்தானா என்ற சந்தேகம் சமீபத்தில் ஏற்பட்டது எனக்கு. ஒன்றுமில்லை ஸ்வாமி, எனக்கு பேத்தி முறையில் ஒரு பெண், +2 வில் படித்துக்கொண்டிருப்பவளுக்குத் திடீரென அடிக்கடி மயக்கம் வந்து விழுந்துவிடுவதாகவும், பள்ளிக்குச் செல்வதை நிறுத்தியிருப்பதாகவும் செய்தி வந்தது. அவளின் பெற்றோருக்கு ஒரே மகளாகையால் (சற்று அதிகமாகவே) செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டவள். போதாதற்கு, அவள் தாத்தா, பாட்டியும் பக்கத்திலேயே வசித்ததால்,இன்னும் அதிகமாகச் சலுகைகள் கிடைத்தன. அவளின் பெற்றோர்கள் இருவருமே வேலைக்குச் செல்பவர்களாகையால் வீட்டில் சண்டை, சச்சரவுக்கும் குறைவேயில்லை!

இந்தப்பெண்ணை, ஏதேதோ டாக்டர்களிடம் காண்பித்ததில், பரிசோதனைகளில் உடம்பில் ஏதொரு குறையும் இல்லை என்றும், பெற்றோரின் அளவுக்கதிகமான செல்லமே அவளின் மன அழுத்ததிற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் சொல்லிவிட்டனர்.

என் அவதியைக் கேளுங்கள்! இந்த ‘அளவுக்கதிகமான செல்லம்’ பற்றி பல வருடங்களாகவே
நானும், குடும்பத்தில் இன்னும் சிலரும் கவலைப்பட்டதுண்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் சொன்னதும் உண்டு. எனினும், இப்போது குழந்தை எப்படி இருக்கிறாள் என்று ஒரு தகவலும் இல்லையே என்று நானே தொலைபேசினால், வீட்டில் டிவி ஓடிக்கொண்டிருக்கிற சத்தத்தின் நடுவில், ’இப்போது பரவாயில்லை’ என்று ஒரே வார்த்தை பதில் கிடைக்கிறது! அவதி என்னவென்றால், கவலைப்படாமலும் இருக்க முடியவில்லை, நம் கவலைகளைப்பற்றிக் கவலைப்பட அடுத்த தலைமுறையினருக்கு நேரமுமில்லை என்பதுதான்.......