Monday, April 30, 2012

மதுரை சோமுவும் சிவாஜியும்!


உலகிலேயே மனிதக் குரலை ஒத்த ஒலி உடைய ஒரே இசைக் கருவி, வீணை என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு உண்மை. வீணையை வாசித்து, சிவபெருமானையே கவர்ந்தவன் ராவணன்! இன்று நாம் ரசிக்கப் போகும் பாட்டில் (தாள இசைக்கருவிகள் தவிர) வீணை மட்டுமே உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. அதனுடன் சேர்ந்து பாடுபவர், ஸி.எஸ்.ஜெயராமன். நான் முதலில் கூறிய தகவல் எவ்வளவு உண்மையானது என்பதை இன்றைய பாட்டில் நீங்கள் (கேட்டுத்) தெரிந்துகொள்ளலாம். பாடலைப் பாடிய ஸி.எஸ்.ஜெயராமனும் ஒரு இசையமைப்பாளரே! ’ரத்தக் கண்ணீர்’ திரைப்படத்தில் வரும் பிரபல பாடலான ‘குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது’ என்ற பாடலின் மெட்டு, இவருடையதுதான்! ’இன்று போய் நாளை வாராய்’ என்ற நமது இன்றையப் பாடலின் மெட்டிலே, மகாகவி பாரதியின் ‘நல்லதோர் வீணை செய்தே’ என்ற பாடலை ஸி.எஸ்.ஜெயராமன் தனது மேடைக் கச்சேரிகளில் பாடிக் கொண்டிருந்தார். சம்பூர்ண ராமாயணம் திரைப்படத்தில் அந்தக் குறிப்பிட்ட காட்சிக்குப் பொருத்தமாக இருக்கும் என்று மாமா கே.வி.மகாதேவன் உபயோகப்படுத்திக்கொண்டார்! (இதே போலப் பின்னாளில், ‘கந்தன் கருணை’ திரைப்படத்திலும் குன்னக்குடி வைத்தியநாதன் ஏற்கனவே அமைத்திருந்த மெட்டில் வெளிவந்திருந்த ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’ என்ற பாட்டையும் மாமா உபயோகப்படுத்திக்கொண்டார்.) இன்னொன்று தெரியுமா உங்களுக்கு? ‘சம்பூர்ண ராமாயணம்’ திரைப்படத்தில் ஸி.எஸ்.ஜெ., நமது இன்றைய பாடல் உட்பட இரண்டு பாடல்கள் பாடியிருப்பார். அவை இரண்டையும் முதலில் மதுரை சோமுவைப் பாடவைத்துப் பதிவும் செய்திருந்தார்கள். (அந்தப் பாடல் பதிவின் போது அங்கிருந்த சிவாஜி, சோமுவின் பாடலில் மனதைப் பறிகொடுத்து, தன் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைக் கழற்றி சோமுவுக்கு அணிவித்தார்! அப்போதைய ’பேசும் படம்’ திரைப்பட மாத இதழில் புகைப்படம் கூட வந்தது.) ஆனால், திரைப்படத்தில் ராவணனாக நடித்திருந்த டி.எஸ்.பகவதியின் குரலுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால் மீண்டும் ஸி.எஸ்.ஜே குரலில் பதிவு செய்யப் பட்டது. (இந்தத் தகவலை, பின்னாளில் ஒரு கச்சேரியின்போது மதுரை சோமுவிடமிருந்தே அறிந்துகொண்டேன்.) இனி, இன்றைய பாடலைப் பற்றியும் கொஞ்சம் பார்க்கலாம்! இந்த அற்புதமான பாடல், ’திலங்’ எனும் கர்நாடக ராகத்தில் அமைந்துள்ளது. (மெல்லிசை மன்னர்களின் இசையமைப்பில் சுசீலா பாடியிருக்கும் ‘அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்’ எனும் ‘பஞ்சவர்ணக்கிளி’ திரைப்படப் பாடலும் இதே ராகந்தான்) பாடல் சோகமாக இருந்தாலும், பாடலில், (ராவண மாமன்னனின்) கம்பீரத்தை இசையமைப்பாளர் எப்படி வெளிக் கொணர்ந்திருக்கிறார், பாருங்கள்! வீணை, தபலா, கடம் இவை மூன்றை மட்டும் வைத்துக் கொண்டு நம்மை எப்படி சோகத்தில் ஆழ்த்துகிறார், மாமா! (அதீத ரசனையில் சில சமயம் கெட்ட வார்த்தைகளில் கூடத் திட்டத் தோன்றுகிறதல்லவா! அதுதான் ஒரிஜினல் இசை, ஒரிஜினல் ரசிப்பு!) இனி, நம் பதிவுக்கு முதன் முறையாக வந்திருக்கும் ஸி.எஸ்.ஜெயராமனின் காலங்கடந்த பாடல், உங்கள் ரசனைக்கு:

Saturday, April 28, 2012

போறவளே, போறவளே!


ஏர் உழவனுக்கும் அவனுடைய முறைப்பெண்ணுக்குமான உறவு, பழைய தமிழ்த்திரைப்படங்களுக்கு ஒரு வரப்ரசாதம் என்றே சொல்லலாம்! இந்த உறவில், கேலியுண்டு, கெஞ்சலுண்டு, மோகமுண்டு இன்னும் என்னென்னவோ உண்டு! நமது இன்றைய பாடலில், நாயகன், நாயகியைக் கெஞ்சலோடு கொஞ்சுகிறான். அதற்கு முன், இன்றைக்கு ஊடகங்களிலே, கோவைத்தமிழ் சிறப்புப் பெற்றிருக்கிறதே, அது, 1957லேயே ‘மக்களைப்பெற்ற மகராசி’ எனும் திரைப்படத்தில் ஏ.பி.நாகராஜன் எழுத்தில் படம் முழுவதிலும் கையாளப்பட்டிருக்கிறது! சிவாஜி, பானுமதி,நம்பியார், எம்.என்.ராஜம், கண்ணாம்பா ஆகியோர் நடித்துப் பெரும் வெற்றி பெற்ற இந்தப் படத்தை, சோமு இயக்கியிருந்தார். இன்றைய நமது பாடலுடன், ‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா’‘மணப்பாறை மாடுகட்டி’ என்ற பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தன-ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்த ‘மணப்பாறை மாடுகட்டி’ எனும் பாடல் உருவான கதை தெரியுமா உங்களுக்கு? இயக்குனர், கதை-வசனகர்த்தா, பாடலாசிரியர் (மருதகாசி) மற்றும் இசையமைப்பாளர் (கே.வி.மகாதேவன்) இவர்கள் அமர்ந்திருக்க, பாடல் இடம் பெறும் காட்சி விளக்கப் பட்டதாம். சற்று யோசித்த மருதகாசி, பத்து நிமிடங்களில் பாடலை எழுதி முடித்துவிட்டாராம்! பின்னர் மகாதேவனிடம், ’நான் எழுதிய இந்தப் பாடலுக்கு எவ்வளவு விரைவில் உங்களால் இசையமைக்க முடியும்?’ என்று சவால் விட்டாராம்! மாமா என்ன லேசுப்பட்டவரா? இன்னுமொரு கால்மணி நேரத்தில் அவரும் இசையமைத்துக் கொடுத்து விட்டாராம்! இவ்வாறு அரை மணி நேரத்தில் உருவான பாடல், இன்றும் ஒலித்துக் கொண்டிருப்பது விந்தையல்லவா! ஆனால் இன்றோ, ஒரு படத்தில், ’அவ என்(னை) என்ன தேடி வந்த அஞ்சலை’ என்று ஒரு பாடல் போட்டு, கொஞ்ச நாள் கழித்து வேறொரு படத்திற்காக அதே பாட்டையே ‘வேணாம், மச்சான் வேணாம், இந்த பொண்ணுங்க காதலு’ என்று மெட்டுப் போட வெளிநாடு பறக்கிறார்கள்! என்ன கொடுமை சரவணன் இது! சரி, சரி நமக்கெதற்கு அதெல்லாம்! (இது எப்படி இருக்கு!) வாருங்கள், மருதகாசி எழுத, மகாதேவன் இசையில் டி.எம்.எஸ்-பானுமதியின் அற்புதமான நாட்டுப் புறப் பாட்டில் நம்மைக் கரைப்போம்!

Sunday, April 22, 2012

வராமல், வந்து, வராமலே போன பாடல்!


இன்றைக்கு 47 வருடங்களுக்கு முன்னர் (1964ல்) வெளிவந்த ‘கர்ணன்’ தமிழ்த் திரைப்படம், இப்போது மறு வெளியீடாக வந்து மற்ற புதிய படங்களையும் ஓரம் கட்டிக்கொண்டிருப்பதைப் பற்றி நேற்றுப் பார்த்தோம். அந்தப் பதிவில் இன்னொரு ’வராமல் வந்த பாடல்’ ஒன்றை உங்களுக்கு அளிப்பதாய்க் கூறியிருந்தேன். அதாவது, நீங்கள் இன்று ரசிக்கப் போகும் பாடல், ‘கர்ணன்’ முதலில் வெளியானபோது படத்தில் இடம் பெறவில்லை! சில வாரங்கள் படம் ஓடியபின்னர் சேர்க்கப் பட்டது. (இதே போல ஒரு மிக நல்ல மெலடியான ‘தென்றல் வரும்’ என்ற சுசீலாவின் பாடல், படத்தின் நீளம் காரணமாக, ‘பாலும் பழமும்’ படத்திலிருந்து நீக்கப் பட்டது!) இப்போது, நேற்றுப் பார்த்த ‘கர்ணன்’ படத்திலும் நமது இன்றைய பாடலான ‘மகாராஜன் உலகை ஆளுவான்’ என்ற அருமையான டூயட் நீக்கப் பட்டிருக்கிறது! (அப்பாடா, தலைப்பு, புரிந்ததா?!) கர்நாடக சங்கீதத்தில் ஒரு முக்கியமான ராகமான கரகரப்ரியா எனும் ராகத்தில் புனையப் பட்ட மெட்டு இது. இந்தப் பாடலைக் கேட்டதும், உங்களுக்குத் தானாகவே இன்னொரு பாட்டு நினைவுக்கு வரும், வரவேண்டும்! ‘இருமலர்கள்’ படத்திற்காக எம்.எஸ்.வி இசையமைக்க, டி.எம்.எஸ். பாடியிருக்கும் ‘மாதவிப் பொன்மயிலாள்’ என்ற பாட்டும் இதே ராகத்தைத் தழுவியதுதான். இதற்குப் பல ஆண்டுகள் முன்னரே மன்னர்களின் ஆரம்பகாலத்தில் ‘பாசவலை’ படத்திலும் ‘அன்பினாலே உண்டாகும் இன்பநிலை’ என்று ஸி.எஸ்.ஜெயராமன் இதே ராகத்தில் பாடியிருக்கிறார்! கண்ணதாசன் எழுத, டி.எம்.எஸ்-சுசீலா பாட, நீங்கள் ரசியுங்கள்!

Saturday, April 21, 2012

இரவும் நிலவும்....


தமிழ்த் திரைப்படத் துறை இன்றிருக்கும் கால கட்டத்தில், கணினியின் உதவியால் புதுப்பிக்கப் பட்ட பழைய படமான சிவாஜியின் ‘கர்ணன்’ ஓஹோ என்று ஓடி கோடிகளைக் குவித்துக் கொண்டிருக்கிற நேரமிது! இதற்குப் பல வருடங்களுக்கு முன்னர், இதேபோல, நீண்ட இடைவெளிக்குப் பின்னர், சிவாஜியின் முதல் படமான ‘பராசக்தி’யும் வெளியிடப்பட்டு இப்படித்தான் (மீண்டும்) மகத்தான வெற்றியடைந்தது நினைவுக்கு வருகிறது. (அப்போது ஒருநாள், வேறொரு படப்பிடிப்பில் சிவாஜி இருந்தபோது, அவ்வழியே வந்த நாகேஷ், சிவாஜியின் பக்கத்தில் வந்து, ‘யப்பா, நேத்து நீ நடிச்ச பராசக்தி பார்த்தேன், பரவாயில்லை, நல்லாவே பண்ணிருக்கே, முன்னுக்கு வருவே’ என்று சொல்லிவிட்டு அவசரமாக இடத்தைவிட்டு நகர்ந்தாராம்!) நல்ல கதைகள், இனிமையான பாடல்கள், அருமையான கலைஞர்களின் நடிப்பு என்று எல்லாத் துறைகளும் கொடிகட்டிப் பறந்த காலமது! இன்றுபோல் அல்லாமல், (வாருங்கள், வாருங்கள் என்று அழைக்காமலே) படம் பார்க்கத் திரையரங்கிற்கு மக்கள் வருகிறார்கள் என்றால் அதற்கு மேற்கூறியவைதான் முக்கிய காரணம் அல்லவா? ’கர்ணன்’ படம், இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு ஒரு உச்சமான பீரியட் என்றே சொல்லலாம். எல்லாப் பாடல்களும் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் மிகச் சில படங்களில் கர்ணனும் ஒன்று. நாமும் அதிலிருந்து ஒரு டூயட்டை ரீ-ரிலீஸ் செய்யலாம் என்று ‘இரவும் நிலவும்’ என்ற பாடலைத் தேர்ந்தெடுத்தேன். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில், ஒரே மெட்டில் அமைந்த பாடல்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமான காரியம்! ஏதேதோ ஜாலங்கள் செய்து எந்த மெட்டையும் புதிதாகத் தோன்றும்படி செய்துவிடுவார்கள்! ஆனாலும், இந்தப் பாட்டுக்கும், நாம் ஏற்கனவே கேட்டிருந்த (‘கவலை இல்லாத மனிதன்’ படத்திலிருந்து) ஜமுனாராணி பாடியிருந்த ‘பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்’ என்ற பாடலுக்கும் இசைக் கோர்வையில் சில ஒற்றுமைகள் தென்பட்டன. ஜமுனாராணியின் பாடலில் மெட்டும் ஷெனாய் வாத்தியமும் சோகமாக ஒலித்தாலும், தாளம் (தபலாவும் டோலக்கும் சேர்ந்து) மிக உற்சாகமாக ஓடும். கர்ணன் பாடலில் மெட்டு சுகமான டூயட்டாக இருந்தாலும் ஷெனாய்கள் சோகமாகவும் தாளம் பழைய பாடலைப்போல் குதூகலமாகவும் அமைக்கப் பட்டிருக்கும். (இன்றைய பாட்டில் ஷெனாய்’கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறேன், கவனித்தீர்களா?) ஆமாம், சாதாரணமாக ஒரு ஷெனாய் உபயோகித்தாலே பாடலுக்கு அழுத்தம் அதிகம் என்பார்கள். இங்கோ, மன்னர்கள் இரண்டு வாத்தியங்களை உபயோகித்து மெலடியை மேம்படுத்தியிருக்கிறார்கள்! பாடலின் ஆரம்பத்திலும், ‘இரவும் பகலும்’ என்று வரும் ஒவ்வொரு இடத்திலும் டோலக், ‘கும்க்’ என்று தாளத்தை ஆரம்பிப்பது எவ்வளவு இனிமையாக இருக்கிறது என்பதையும் கேளுங்கள். இன்னொரு பதிவில், ‘கர்ணன்’ படத்தில் வராமல்.....வந்த பாடலைப்பற்றிச் சொல்கிறேன். இப்போது கண்ணதாசன் எழுத, மன்னர்கள் இசையமைக்க, டி.எம்.எஸ்-சுசீலா இதோ:

Sunday, April 8, 2012

நண்பர்களே,

கொஞ்ச நாளாயிட்டுதே, ஒரு நல்ல மாஜிக் ஷோ பாக்கலாமா இன்னிக்கி?

ஜீ ஹூன் லிம் என்று ஒரு தென் கொரிய இளைஞர். இவர் பிரான்ஸ் நாட்டில் நிகழ்த்திக் காட்டிய மாஜிக் ஷோ, இது. அநாயாசமாக ஏராளமான புறாக்களை மேடையில் வரவழைத்துக் காண்பிக்கிறார் இவர். எங்கே எப்படி என்பதுதான் வியப்பே! நீங்களும் வியக்க வருகிறீர்களா?


Saturday, April 7, 2012

இன்னொரு காலங்கடந்த பாடல்!

சென்றமுறை ஒரு மகிழ்ச்சியான பாடலை நமக்காகக் கொடுத்த சீர்காழியும் சுசீலாவும் உங்களைச் சோகத்திலும் ஆழ்த்தமுடியும் என்று நிரூபிக்கவிருக்கிறார்கள், இன்றைய பாடலில்!

எம்ஜிஆரின் கருப்பு-வெள்ளைப் படங்களில் ஒன்று, ’சபாஷ், மாப்ளே’. இதில் அவருடன், மாலினியும் எம்.ஆர்.ராதாவும் நடித்திருந்தனர். இதே காலகட்டத்தில் சிவாஜி, மாலினியுடன் ‘சபாஷ் மீனா’ எனும் காமெடிப் படத்திலும் நடித்திருந்தார்!(இதில் இடம் பெற்ற ’சித்திரம் பேசுதடி’ என்ற அருமையான பாடலை நீங்கள் மறக்க வாய்ப்பே இல்லை!)

’சபாஷ் மாப்ளே’யும் காமெடிப் படந்தான். இதில் பாடல்களை மருதகாசி எழுதியிருந்தார்.

இன்றைய பாடலைக் கேளுங்கள். துல்லியமான குரல்கள், துல்லியமான ஒலிப்பதிவு, அமைதியான இசை (ஹார்மோனியத்தையும் புல்லாங்குழலையும் இணைத்து ஒரு சின்ன பீஸ் உள்ளத்தை அள்ளுகிறது, கவனியுங்கள்!) பாட்டில் ஒரே சரணந்தான். அதில் தபலாவைத்தவிர வேறு துணையில்லை. அதிலும் சுசீலா பாடும் போது, ‘ஏக்கப் பெருமூச்சை’ என்ற இடத்திலிருந்து சுசீலாவின் குரல் கூடவே தபலா கொஞ்சுவதைக் கேட்டவுடனேயே, உங்களுக்கு இந்தப் படத்தின் இசையமைப்பாளர், நமது கே.வி.மகாதேவன் என்பது தெரிந்துவிடுமே!

’சபாஷ் மாப்ளே’ படத்தில் இதே பல்லவியில் ஒரு பாட்டைச் சீர்காழி, எம்.ஜி.ஆருக்காகத் தனியாகக் கதாநாயகியைப் பார்த்துப் பாடுவார். அந்தப் பாட்டில் முழு இசைக்குழுவும் பங்கு கொண்டிருக்கும். சரணங்களில் மெட்டே மாறியிருக்கும்.

இப்போது வாருங்கள், எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத, காலத்தைக் கடந்த இந்த சோகமான சுகத்தை அனுபவிக்க!


Tuesday, April 3, 2012

சோலைக்குள்ளே குயிலுக்குஞ்சு!











இன்று சீர்காழியும் சுசீலாவும் ஒரு அருமையான டூயட்டை நமக்காகப் பாடுகிறார்கள்.

’பானைபிடித்தவள் பாக்கியசாலி’ என்றொரு திரைப்படம். அதை, டி.எஸ்.துரைராஜ் என்ற காமெடி நடிகர் தயாரித்து, இயக்கி, நடித்திருந்தார். (சந்திரபாபுவின் ‘கோவா மாம்பழமே’ பாடல் நினைவிருக்கிறதா? அதில் அவருடன் நடித்துப் பாடலையும் கூடப் பாடுவார், இவர்.) என்.எஸ் கிருஷ்ணனின் சம காலக் கலைஞரானதினால் மிகுந்த திறமையிருந்தும் அதிகம் சோபிக்காமல் போனவர், டி.எஸ்.துரைராஜ்.

இந்தப் படத்தில் பாலாஜி, சாவித்திரி நடித்திருந்தனர். மாமேதையான எஸ்.வி.வெங்கடராமன் இசையமைத்திருந்தார். இதில் இடம் பெற்ற இன்னொரு அருமையான பாடல், ‘புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே’. அந்தக் காலத்தில், திருமண வீட்டு ஒலிபெருக்கிகளில் நிச்சயமாக இடம் பெற்ற பாடலிது. திருமணமாகவிருக்கும் தங்கைக்குப் புகுந்த வீட்டில் எப்படி வாழவேண்டுமென்று அண்ணன் அறிவுரைகள் சொல்வது போல் இருக்கும், இன்னமும் எங்கோ ஒலித்துக் கொண்டிருக்கிற பாடல்!

‘நவராத்திரி’ படம் பார்த்திருப்பீர்கள். அதில், சாவித்திரி வீட்டைவிட்டுப் போய்ப் பல சிவாஜிகளைச் சந்திப்பார். அந்தப் படம் வருவதற்குப் பல ஆண்டுகள் முன்னரே, ’பானை பிடித்தவள் பாக்கியசாலி’ படத்தில் அண்ணனைப் பிரிந்த பட்டிக்காட்டுப் பெண், வழி தெரியாமல், பலதரப் பட்ட மனிதர்களைச் சந்தித்துக் முடிவில் தனக்கு நிச்சயிக்கப் பட்டிருந்த காதலனுடன் சேருவார்!

பாடலைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை! அருமையான இசையமைப்பாளர், பாடகர்கள் எல்லாரும் சேர்ந்து படைத்த விருந்திது! கேட்டு ரசிக்கத் தயாரா? இதோ, பாடல்: