Friday, February 27, 2009

ரஹ்மான் ஜாக்கிரதை!

இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி! - பட்டுக்கோட்டை

இந்தியராகிய நம் கனவுகளைத் தன் உழைப்பின் மூலமாகத் தாயகம் கொண்டு சேர்த்திருக்கிறார் சகோதரர் ரஹ்மான். அவருக்கு வாழ்த்துக்கள் கூறவும், பூமாலை போடவும் கூட்டம் சேர்ந்தது, சேரப்போகிறது. என் எதிர்பார்ப்பில், இனிமேலும் அவர் அதே உழைப்போடுதான் பாடல்களைக் கொடுக்கப்போகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒருவேளை அவரின் வருங்காலப் பாடல்கள் மக்களுக்குப் பிடிக்காமல் போயிற்று என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்போது இதே மக்களும், பத்திரிகைகளும் என்னமாகக் கிழிப்பார்கள் என்பது நமக்குத் தெரியாதா என்ன! நம்முடைய இந்திய கிரிக்கெட் வீரர்கள் இவர்கள் கையில் படும் பாடு நாம் அறியாததா! எனவேதான் இந்த எச்சரிக்கை!

Thursday, February 26, 2009

ஒரு நியாயமான கோபம்!

ஊமைக் கோபத்தைப் பற்றிச் சொன்னேன். நியாயமான கோபம் ஒன்று எனக்குண்டு. எவ்வளவோ இடத்தில் பார்த்துவிட்டேன்-வயதான, முடியாத, முதியவர்களை எனக்குத்தெரிந்த பலபேர் நன்றாகத்தான் வைத்துக் காப்பாற்றி வருகிறார்கள். ஆனாலும் இந்த 'பெரிசுகள்' வசதிகளை அனுபவித்துக்கொண்டு சும்மா இருப்பதில்லை. எதையாவது அல்லது யாரையாவது குறை சொல்லாவிட்டால் இவர்களுக்கு நிம்மதியாகவே இருக்காது. ஓரளவுக்குப் பொறுத்துப் பார்க்கும் 'சிறுசுகள்', "யார் எப்படிப் போனால் உனக்கென்ன, பேசாமல் இரேன்" என்று சொன்னவுடன் பார்க்கவேண்டும். அந்த (திட்டிய) சிறுசின் வாழ்க்கை வரலாறை முழுக்க முழுக்க (முணுமுணுப்பு மூலமாகவே) தெரிந்து கொண்டு விடலாம். இலவச இணைப்பாக திருமணங்களின் மூலம் குடும்பத்தில் ஒருவராகியிருக்கும் பெண்டிரின் பிரதாபங்களையும் அறிய வாய்ப்புண்டு!

ஊமைக் கோபம்!

வயசானாலே ஏகப்பட்ட வியாதிகள் (உடம்பில்) வருவது ஸஹஜம். அதில் மனதுக்குள்ளே பரவும் வியாதிகளில் முக்கியமான ஒன்று ஊமைக் கோபம்! இது எந்த வயதிலும் வரும் என்றாலும் ரிடயர் ஆன பின்னர் இது எல்லாரையும் முழுமையாக ஆக்ரமித்துவிடும். எதைப் பார்த்தாலும் கோபம் வரும் - ஆனா வராது! ஏன்னா உங்கள் கோபத்தை உங்கள் குசுகூட மதிக்காது என்று என் பாட்டி சொல்லிக் கேட்டிருக்கிறேன். இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்!

Wednesday, February 25, 2009

The Slumdog oscars and aftermath!

இந்தியர்களாகிய நம் அனைவருக்குமே பொதுவானதாக காணப்படும் ஒரே குணம் ஹிப்போக்ரசி (இதற்குச்சரியான தமிழ் வார்த்தை என்ன என்பதைச்சொன்னால் நன்றியுடன் அறிந்துகொள்வேன்!). மும்பை மட்டுமல்லாமல் நம் இந்தியத்திருநாட்டில் எங்கெங்கும் பரவிக்கிடக்கும் சேரிகளையும் குப்பங்களையும் முன்னேற்ற ஒருவரும் (நான் உட்பட!) ஒரு துரும்பையும் தூக்கிப் போட மாட்டோம்! ஆனால், யாரோ ஒருவர் அதை மையமாக வைத்துப் புகைப்படமோ அல்லது திரைப்படமோ எடுத்துவிட்டால் போச்சு! உடனே என்னைப்போன்ற ஒரு தேசபக்தனை நீங்கள் உங்கள் கனவிலும் பார்த்த்திருக்கமாட்டீர்கள்! அப்படி ஒரு ஆவேசம் வந்து சாமியாடி விடுவேன். ஜெய் ஹிந்த்!