Thursday, April 30, 2009

எல்லாப்புகழும் எனக்கே!

நமது இந்தியத் திருநாட்டில் தனியர்களாக நின்று வரலாறு படைத்தவர்கள் ஏராளம். அதே போல,ஒரு துறையில் இரட்டையர்களாக சாதித்தவர்களும் நிறைய உண்டு. கலைத்துறை, அதாவது திரைப்படங்களை எடுத்துக்கொண்டால், வடக்கே ஹன்ஸ்லால்-பகத்ராம், சங்கர்-ஜெய்கிஷன், லக்ஷ்மிகாந்த்-ப்யாரிலால் போன்ற பலர் கொடிகட்டிப் பறந்ததுண்டு. தமிழிலும் அப்படி ஜொலித்தவர்கள்தான் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.கடந்த 60 வருடங்களுக்கும் மேலாகவே தமிழ்த் திரை இசையின் தீவிர ரசிகன் என்கிற முறையில் எனக்கொரு வருத்தம் உண்டு. வடக்கில் இருந்தவர்களும் பிரிந்தார்கள் - நம்மவர்களும் பிரிந்தார்கள். இதில் வித்தியாசம் என்னவென்றால், அங்கிருந்தவர்கள் யாரும் (பிரிவுக்குப்பின்னர்) இருவரில் எல்லாப்பாட்டும் என்னால் மட்டுமே போடப்பட்டது என்று சொந்தம் கொண்டாடவில்லை. கடைசிவரை பட டைட்டில்களில் இருவர் பெயர்களும் போடப்பட்டன. ஆனால் இங்கோ, அந்தப் பெருந்தன்மை ஒருவருக்கில்லை! நான் போட்டேன், நானே போட்டேன் என்று சத்தியம் செய்யாத குறைதான்! இன்றும் எல்லா தொலைக்காட்சிகளிலும் அழுது, அரற்றிக் கொண்டு...கண்றாவி! வயலின் வித்தகரான மற்றவர் எல்லாப்பாட்டையும் இருவரும்தான் போட்டோம் என்று சொல்லிவந்தார் என்பது எனக்குத் தெரியும்.இதில் வேடிக்கை என்னவென்றால், யாருமே முன்னவரிடம், தாங்கள் பிரிந்துவந்தபிறகு ஏன் ஸார் ஒரு பாட்டைக் கூட ஒரு ‘எங்கே நிம்மதி” போலவோ, ஒரு ‘கேள்வி பிறந்தது அன்று’ போலவோ போடவில்லை என்று கேட்கவுமில்லை!

குறிப்பு: திரு.ராமமூர்த்திக்கு அண்மையில், சென்னையில் ஒரு விழா எடுத்துச் சிறப்பித்தார்கள் என்ற செய்தியின் விளைவு இந்தப் புலம்பல்! அவர்கள் இருவரும் பிரிந்து ஏறத்தாழ 43 நீண்ட வருடங்களுக்குப் பின் அவரை மக்கள் இப்போதுதான் கண்டு கொண்டிருக்கிறார்கள்!

Sunday, April 26, 2009

இருக்கட்டுமே!

இன்று வந்துள்ள ஓர் செய்தி:

அகண்ட வலையில், சுமாராக 33 மில்லியன் (மூன்று கோடியே முப்பது லட்சம்!) வலைப் பூக்கள் பதிக்கப்படுகின்றனவாம். இவற்றில் பெரும்பான்மையானவற்றிற்கு ஒரே ஒரு வாசகர் மட்டுமே இருக்கிறாராம் - அதாவது அதை எழுதியவர் மட்டுமே படிக்கிறாராம்!
இருக்கட்டுமே. நான் எழுதுவது என் ஆத்ம திருப்திக்காக மட்டுமே. அவற்றை மற்றவர்கள் படிப்பதும் படிக்காததும் அவரவர் இஷ்டம் - அவரவர் அதிர்ஷ்டம்! நம் கடன் பணி செய்து கிடப்பதே என்று வலையைத் தீந்தமிழால் நிரப்புவோம் வாருங்கள், நண்பர்களே!

Saturday, April 25, 2009

என்ன வலையோ?

ஒரு ஆதங்கம்,(வசன)கவிதை(?)யில்:

அகண்டு பரந்த வலையில்
என்னதான் செய்ய முடியாது என்றார்
நம்ப்ப்ப்பி வாங்கி, என்னன்னெமோ செய்து
பார்த்தும், அயல் நாட்டிலிருந்து வலை வழியே
எனைப் பார்த்துச் சிரிக்கும் என் செல்லப் பேத்தியைத்
தூக்கி அவள் அழ, அழ கசக்க
முடியவில்லையே!

Thursday, April 23, 2009

ஏமாற்றாதே, ஏமாறாதே

ஊமைக் கோபங்கள் வெளியே வந்துவிடக்கூடிய அளவுக்கு நம்மைத் தள்ளிவிடுகிறார்கள், நம்முடைய அரசியல்வாதிகள். நினைத்தபோதெல்லாம் பந்த் அறிவிப்பதும், இவற்றை அறிவிக்கவைத்துப் பின்னர் அவற்றைக் கபட நாடகம் என்று வர்ணிப்பதும் இங்கே அடிக்கடி நடக்கின்ற கூத்தாகிவிட்டது. மக்களைப்பற்றி யாருக்கும் கவலையில்லை. அவர்களும் ஒரு நாள் கிடைத்ததே என்று நாள் முழுவதும் டிவி பார்த்து, அறிவிக்கப்பட்ட பந்த்திற்குத் தங்கள் ஆதரவினை அள்ளித்தருகிறார்கள்!
ஒரு தொழிற்சாலையில் பணிபுரிபவனாக, நான் ஒவ்வொரு பந்த்திலும் பார்ப்பது இது: பந்த்திற்கு முதல் நாள் இரண்டு ‘கட்சித்தொண்டர்கள்’ (எப்போதும்!) மோட்டார் பைக்கில் வந்து, ஏதோ திருமணத்திற்கு அழைப்பு வைப்பது போல, மறுநாளைய பந்த் பற்றியும், நாங்கள் தொழிற்சாலையை மூடவேண்டிய அவசியம் பற்றியும் விளக்கிவிட்டுப் போவார்கள், நாங்களும் நல்ல குடிமக்களாக, மறுநாள் அநேகமாக விடுமுறை எடுத்துக் கொள்ளுவோம் (அல்லது, தைரியம் இருந்தால், ஷட்டரை இழுத்து மூடிக்கொண்டு, உள்ளே வேலை செய்வோம்). ஒருவேளை அன்று விடுமுறை எடுத்துக் கொண்டால், அடுத்து வரும் ஞாயிறன்று தவறாமல் வேலை செய்து எங்கள் சம்பளம் வருமாறு பார்த்துக்கொள்வோம்!
தவிரவும், அன்று ஒரு தொலைக்காட்சியிலும் சீரியலோ, சினிமாவோ வராமலில்லை. எப் எம் ரேடியோக்களும் கதறிக்கொண்டுதான் இருக்கின்றன. யாருக்காக, அல்லது யாரை ஏமாற்ற இந்த பந்த் சமாசாரங்கள்? ஒரு வேளை, சாமானியர்களை, புதிய புரட்சிக்குத் தயார்ப்படுத்தும் முயற்சிகளோ இவை?!

Wednesday, April 1, 2009

அரசியல்வாதிகளும் அப்பாவித் தொண்டர்களும்!

நானும் ரொம்ப நாளாகப் பார்த்துக்கொண்டு வருகிறேன். ஒரு விஷயம் மட்டும் எனக்குப் பிடிபடவே மாட்டேன் என்கிறது! இதில், நமது தாய்த்திருநாட்டின் அரசியல்வாதிகள் எல்லாரும் ஒரே மாதிரியாகத்தான் மக்களை (அதாவது தம் தொண்டர்களை) ஏமாற்றிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் விஷயம் புரிந்தும்கூட அந்தத் தொண்டர்கள் மீண்டும், மீண்டும் ஏமாறுவது ஏன்? அதாவது, அரசியல்வாதி, பல்வேறு காரணங்களுக்காக போராட்டங்கள் நடத்தி சிறைக்குள் செல்கிறான்-சென்ற வேகத்திலேயே ஜாமீனில் வெளியேயும் வந்து விடுகிறான். ஆனால் இந்தத் தொண்டனோ, அரசியல்வாதி சிறைக்குச் செல்லும்போதெல்லாம் மறியல் நடத்தி, தடியடி, துப்பாக்கிச்சூடு முதலிய எல்லா கஷ்டங்களையும் பட்டுக்கொண்டு, அடுத்த அரசியல்வாதியின் போராட்டத்தில் கலந்துகொள்ளச் செல்கிறான்! ஒருவேளை, இதற்கும் நூறு ரூபாய், பிரியாணிப் பொட்டலம் எல்லாம் கிடைக்குமோ?!