Saturday, March 31, 2012

நிலவோடு வான்முகில்...!

நண்பர்களே,

இன்று நமக்காக சீர்காழியுடன் பாடவந்திருப்பவர், ஒரு ஸ்பெஷல் பாடகி. இவர் குரலை நீங்கள் ஏற்கனவே முன்னொரு பதிவில் (டி.ஆர்.மகாலிங்கத்துடன் இவர் பாடியிருந்த ஒரு அற்புதமான பாடலில்) கேட்டிருக்கிறீர்கள். ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் இவர்கள் பாடியிருந்த ‘நானன்றி யார் வருவார்’ என்ற பாடலைக் குறிப்பிடுகிறேன். ஏ.பி.கோமளா, சீர்காழியுடன் இணைந்து பாடியிருக்கும் ’நிலவோடு வான்முகில்’ என்ற பாடலை உங்களுக்கு அளிக்கிறேன். இப்பாடல், எம்ஜிஆர் நடித்த ராஜராஜன் என்ற திரைப் படத்திற்காக, மாமா கே.வி.மஹாதேவன் இசையில் இடம் பெற்றது.

பாடலில், இணைப்பிசையில் ‘ஒரு மாதிரி’யான மேற்கத்திய இசையும், அதன் பின்னால் டபிள்பேஸ் (மிகப் பெரிய வயலின் - தாளம்/கார்ட்ஸ்ஸுக்காக தொம் தொம் என்ற ஒலியுடன்) ஒலிப்பதையும், மாமாவின் ட்ரேட் மார்க் தபலாவையும், அருமையான மெட்டையும், குளுமையான குரல்களையும் கவனியுங்கள். இதோ பாடல்:

Friday, March 30, 2012

சீர்காழி வாஆஆஆஆரம்!



நண்பர்களே,

இப்போதிலிருந்து ’சீர்காழி ‘வாஆஆரம்’ தொடங்க உத்தேசம். அவருடன் நமது பழைய பாடகிகள் இணைந்து பாடியிருக்கும் பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமா? இதென்ன கேள்வி, என்கிறீர்களா, எல்லாம் சும்மா ஒரு இதுக்குத்தான்!

இன்றைய கச்சேரியை ஆரம்பித்து வைக்க, ஜிக்கி அவர்களை அழைக்கிறேன். (வேறொன்றுமில்லை, இதற்கு முன்னால் இவரும் சீர்காழியும் அளித்த ‘அன்பே என் ஆரமுதே’ இன்னும் மனதை விட்டு அகல மறுக்கிறது!)

இந்தப் பாட்டும் ’கோமதியின் காதலன்’ படத்திலிருந்து, ஜி.ராமனாதன் இசையில் வருகிறது. இருவரின் கணீரென்ற துல்லியமான குரலில், வாத்தியங்களின் இசையை மீறிக்கொண்டு ஒலிக்கிற சோகப்பாடல்,இது. இருவரும் பாடும்போது, பின்னால் எலக்ட்ரிக் கிடாரின் இசை ஒலிப்பதைக் கவனியுங்கள்.

அடுத்து, சீர்காழியுடன் யார் பாடுகிறார்கள்? பார்க்கலாம். இப்போது, ‘மின்னுவதெல்லாம்’, சீர்காழி-ஜிக்கியுடன், இதோ:

Wednesday, March 28, 2012

மாமாவிடமிருந்து இன்னொரு வைரம்!

அண்மையில் இந்த அருமையான மெலடியைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. தானாகவே உடனே உங்கள் நினைவும் வந்தது. மாமா என்று (திரையுலகில்) எல்லாராலும் அழைக்கப் பட்ட கே.வி. மகாதேவன் 1965ல் இதயகமலம் படத்திற்காகப் போட்ட மெட்டு இது. சுசீலா அருமையாக, அனுபவித்துப் பாடியிருக்க, கண்ணதாசன் எழுதியிருக்கிறார். ரவிசந்திரன், கே.ஆர்.விஜயா, (செம்மீன்) ஷீலா நடித்திருந்தனர். படத்தில் கணிகைமனையில் ஷீலா, ரவிசந்திரனை நோக்கிப் பாட, அவரோ, விஜயாவை நினைத்துக் கொண்டிருப்பது போலப் படமாக்கி யிருப்பார்கள். இந்தப் படத்திலிருந்து ’மலர்கள் நனைந்தன பனியாலே’ மற்றும் ’உன்னைக் காணாத’ என்ற சுசீலாவின் பாடல்கள் இன்றும் உலவி வருகின்றன. அதே அளவு மென்மையான ’என்னதான் ரகசியமோ இதயத்திலே’ என்ற இன்றைய நமது செலக்‌ஷன் ஏனோ அத்தனை பிரபலமாகவில்லை!

வெறும் புல்லாங்குழல், சிதார் இவைகளுடன் மாமாவின் ட்ரேட்மார்க் தபலா கூட மிகவும் அடக்கி வாசிக்கப் பட்டிருக்கும் இப்பாடலை சுசீலாவே முழுக்க சொந்தம் கொண்டாடிவிட்டார்! நீங்களே கேட்டுவிட்டுச் சொல்லுங்களேன்!

Tuesday, March 27, 2012

ஒரு வித்தியாசமான கலை!

இந்தியாவில், நாடகங்களிலும் பெரிய மற்றும் சிறிய திரைகளிலும் காமெடி என்பதை, சம்பாஷனைகள் மூலமாகவும் ஆக்‌ஷன் மூலமாகவும் மட்டுமே செய்துவந்திருப்பதைப் பார்த்து வருகிறோம்.

மேலை நாடுகளில் மைம் (Mime) என்றவகைக் காமெடி ஷோக்கள் மிகவும் பிரபலம். இத்தகைய ஷோக்களில், ஒரு நடிகர்தான் இருப்பார், அவரும் ஒரு வார்த்தைகூடப் பேச மாட்டார்! தனது நடத்தையிலும் செய்கையிலும் பெரும் சிரிப்பை வரவழைத்து விடுவார். இன்றைய விடியோவைப் பார்த்தால் உங்களுக்கு மைம் என்பது எத்தனை கஷ்டமான, பெரும் உழைப்பை உறிஞ்சிடும் கலை என்பது விளங்கிவிடும். தமிழ்நாட்டில், அண்மையில் கோகுல்நாத் எனும் இளைஞர் தொலைக்காட்சியில் (கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியில்) நன்றாகவே மைம் காட்சிகள் செய்திருந்தார். இதோ உங்களுக்காக ஒரு மைம் ஷோ!


Sunday, March 25, 2012

ரசிகர்களை ஏமாற்றும் கணினி வித்தைகள்!

வெள்ளித்திரையில் இரு சிவாஜிகளோ அல்லது இரு எம்ஜிஆர்களோ தோன்றினாலே போதும், ரசிகர்களின் விசிலிலும் கூச்சலிலும் திரையரங்கே இடிந்து விழுந்துவிடுமோ என்ற பயம் தோன்றிவிடும். இது, கணினியின் காலத்துக்கு முன்பு!

இந்தக் கணினி யுகத்தில், ஒரு திரைப்படத்தில் அதன் ஆக்ரமிப்பு எவ்வளவு என்பதை விளக்குவதே இன்றைய நமது விடியோ. (அது சரி, கணினி கலைச் சொல்லான ‘மோஷன் காப்ச்சர்’ என்ற வார்த்தை இன்றைய கடைக்கோடி ரஜினி ரசிகனுக்கும் தெரிந்திருக்கிறது என்பது தமிழனுக்குப் பெருமையா அல்லது!!!!!!!)

இந்த விடியோவைப் பொறுத்தமட்டில், இந்த மாதிரித் திரைப் படங்களை உருவாக்க எவ்வளவு அசுரத்தனமான கற்பனையும் உழைப்பும் பொதிந்திருக்கிறது என்பதையும் யோசியுங்கள்!


Boardwalk Empire VFX Breakdowns of Season 2 from Brainstorm Digital on Vimeo.

Saturday, March 24, 2012

மனிதனும் மிருகமும்!





நண்பர்களே,

மேலே உள்ள படங்களைப் பார்த்தீர்களா? இவை ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் உள்ள வெர்ரிபீ ஓபன் ஜூவில் எடுக்கப் பட்டவை. சிங்கத்துடன் இவ்வளவு அருகில் அமர்ந்தும் சற்றும் பயமின்றிச் சிரிக்கிறார்களே என்று வியக்கிறீர்களா? இப்போது கீழே உள்ள படத்தையும் பாருங்கள்!



அந்த மனிதர்கள் அமர்ந்திருக்கும் ஜீப்பின் முன்புறம் மட்டும் கெட்டியான கண்ணாடியின் உள்ளே (சிங்கம் உணவை உண்ணும் வகையில்) அமைந்திருக்கிறது! எப்பூடி?!

காய்கறி ஸ்பெஷல்-2

இதோ இன்னும் ஐந்து படங்கள்:






காய்கறி ஸ்பெஷல்-1

நண்பர்களே,

இன்னொரு காய்கறி ஸ்பெஷலோடு உங்களைச் சந்திக்கிறேன் என்று சொல்லியிருந்தேன் அல்லவா? இதோ வாருங்கள்.

உங்களில் அனேகம் பேர், சில ஆடம்பரமான திருமண மண்டபங்களின் முகப்பில் சமையலுக்கான் காய்களைச் சீவி பலவித சிற்பங்களை உருவாக்கி வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இங்கே தர்பூசணியை மட்டுமே செதுக்கி வைத்திருக்கும் அற்புதமான கற்பனையை ரசிக்கவிருக்கிறீர்கள். ஏற்கனவே முன்னர் ஒருமுறை குறிப்பிட்டிருந்தபடி, ஐந்து படங்களை மட்டுமே ஒரு பதிவில் இணைக்கமுடியும் என்பதால் இந்தப் பதிவின் தொடர்ச்சியாக இன்னும் ஐந்து படங்களை இணைத்திருக்கிறேன். கருத்து ஒன்று, பதிவுகள் இரண்டு! பார்த்து ரசியுங்கள்!






Thursday, March 22, 2012

ஒலி(வி)சித்திரங்கள்!

பல இசைக்கருவிகள் மூலமாக எழுப்பப்படும் குழுவிசை(Orchestra)களை நிறையப் பார்த்திருக்கிறோம். மனிதனின் கற்பனைக்கு அளவேயில்லை என்பதை நிரூபிக்க இங்கே சிலர் குழுவிசை நடத்துகிறார்கள், பாருங்கள்! என்ன, இவர்கள் நிகழ்ச்சி முடிந்ததும் தத்தம் இசைக்கருவிகளை வீட்டுக்குக் கொண்டுபோய் சமைத்துச் சாப்பிடலாம்! நாளை மற்றொரு நிகழ்ச்சிக்கு வேறு புதிய இசைக்கருவிகளை உருவாக்கி உபயோகிக்க வேண்டியிருக்கும். ஆமாம் நண்பர்களே, இக்குழுவினர் இசைப்பது காய்கறிகளை உபயோகித்து. பார்த்து, கேட்டு ரசியுங்கள். நாளை இன்னொரு காய்கறி அதிசயத்துடன் உங்களைச் சந்திக்கிறேன்.




Saturday, March 17, 2012

மலைக்க வைக்கும் உறவு!

இன்று நீங்கள் காணவிருக்கும் படங்கள் உங்களை மலைக்கவைக்கும் என்பது உறுதி!

கம்போடிய நாட்டைச் சேர்ந்த இந்தச் சிறுவனும், ஆறடி நீளமும் 100 கேஜி எடையும் கொண்ட ஒரு மலைப்பாம்பும் சகோதர சகோதரி போலப் பழகி வருகிறார்களாம்!

இந்தச் சிறுவன் மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது, அவனுக்கு அருகில் சுமார் இரண்டு அடி நீளத்தில் இந்த மலைப்பாம்பு படுத்திருந்ததைப் பார்த்திருக்கிறார், அவன் தந்தை. அவர், பாம்பைக் கொல்லாமல் அருகிலிருந்த காட்டில் கொண்டு போய் விட்டிருக்கிறார். மறுநாள் மீண்டும் அந்தச் சிறுவன் அருகே பாம்பு காணப்பட்டதாம். இப்படி மூன்று முறைகள் அதே இடத்திற்கு வந்த பாம்பை வளர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஒரு பையனையோ அல்லது ஒரு குதிரையையோ விழுங்கும் அளவுக்கு வளர்ந்திருக்கும் இந்தப் பாம்பின் ஆகாரம், கோழிகளும் வாத்துகளும் தானாம். வாரத்திற்கு 10 கேஜி உணவு உட்கொள்ளும் இது மிகவும் சாதுவானதாம்! நீங்களே படங்களைப் பாருங்களேன்.




Friday, March 16, 2012

குமிழில் கலை!

இன்றைய விடியோவில், பாரிஸ் நகர வாசியான ஸில்வெய்ன் நிகழ்த்திக் காட்டும் அற்புதப் படைப்பைக் காணும் போது,கண்ணதாசன் சொன்னதுபோல, ‘படைப்பதனால் என் பேர் இறைவன்’ என்பது மிகவும் உண்மை என்று நினைக்கத் தோன்றுகிறது!

சிறு வயதில் அனேகமாக நாமெல்லோருமே சோப்புக் குமிழ்கள் ஊதிக் களித்திருக்கிறோம். ஆனால் ஸில்வெய்ன் உண்டாக்குவது, ராட்சதக் குமிழ்கள்! இரு நீண்ட குச்சிகளிடையே ஒரு நூலைக் கட்டி, இதை நிகழ்த்திக் காட்ட எத்தனை பயிற்சி செய்திருக்க வேண்டும் அவர் என்பதை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது, அல்லவா? வாருங்கள் நண்பர்களே, ராட்சதக் குமிழ்களைக் கண்டு வியக்க!


Giant soap bubbles - Bulles de savon géantes from Ebullitions on Vimeo.

Tuesday, March 6, 2012

சிற்பி செதுக்காத பொற்சிலையே!

சற்று இடைவெளிக்குப் பிறகு, ஒரு நல்ல தமிழ்த் திரையிசைப் பாட்டில் மனதை லயிக்க விடலாம் என்று தோன்றியது.

இன்று நாம் ரசிக்கப் போகும் பாட்டினை, அது வெளிவந்த காலத்தில் ஊரே பாடிக் கொண்டிருந்தது என்றால் நம்ப மாட்டீர்கள்! ஆணாகப் பிறந்தவர்கள் எல்லாம் தங்களை ஏ.எம்.ராஜாவாகவும், பெண்களெல்லாம் ஜிக்கியாகவும் நினைத்துக்கொண்டு பாடிக் கொண்டிருந்தார்கள்!

ஆமாம், எதிர்பாராதது என்ற திரைப்படத்தில் சிவாஜியும், பத்மினியும் இந்தப் பாடலைத் தனித்தனியே பாடுவது போல காண்பித்திருப்பார்கள். இந்தப் படத்தின் கதை வசனத்தை எழுதியிருந்தவர், அப்போது முன்னுக்கு வந்து கொண்டிருந்த செங்கல்பட்டு ஸ்ரீதர். (அதாங்க, நம்ம ஸ்ரீதர்!.) படத்துக்கு இசையமைத்தது C.N.பாண்டுரங்கன் என்கிற (வெளிச்சத்துக்கு வரத்தவறிய) மேதை.

இது (அந்தக் காலகட்டத்தில்) ஒரு புரட்சிகரமான கதை. காதலி வேறொருவனை மணந்து விதவையான பின்னர் காதலனை மறுமணம் செய்துகொள்வார்.

இந்தப் பாடலைத்தவிர இன்னும் சில பாடல்களும் பிரபலமடைந்தன.

ஒரு கூடுதல் தகவல்: எதிர்பாராதது படத்தில், சிவாஜியை, பத்மினி உணர்ச்சிவசப்பட்டுக் கன்னத்தில் அறைவார். பின்னாளில் சிவாஜி சொல்லும்போது, ‘சரியான சமயத்தில் முகத்தைத் திருப்பிக் கொள்ளத் தவறியதால், பலமான அறை பட்டு இரண்டு மூன்று நாட்களுக்கு கன்னம் வீங்கி, படப்பிடிப்பே ரத்தானது’ என்று கூறியிருந்தார்!
(இவர் மட்டும் என்ன? நடிகர் சிவகுமார், உயர்ந்த மனிதன் படத்தில் சிவாஜியிடம் வாக்கிங் ஸ்டிக்கால் அடிவாங்குவார். அந்தக் காட்சி படமான அன்று, படப்பிடிப்புத் தளத்திற்கு வந்த சிவகுமார், ஒரே மாதிரியான வாக்கிங் ஸ்டிக்குகள் பல அடுக்கி வைத்திருந்ததைப் பார்த்தாராம். ’எதுக்கு ஸார், இத்தனை?’ என்று கேட்ட போது இயக்குனர் கிருஷ்ணன் (பஞ்சு), ‘அது வேறொண்ணுமில்லே தம்பி, சிவாஜி யாரையாவது அடிக்கற ஸீன்ல மட்டும் உணர்ச்சிவசப்பட்டு நிஜமாகவே அடித்துவிடுவார், கம்பு உடைந்துவிடும். அதனால், அடுத்த டேக்குக்கு வேணுமில்லே, அதுக்காகத் தான் வெச்சிருக்கோம்’ என்று கூலாக பதிலளித்தாராம்.) சிரித்து முடித்து விட்டு, கீழே இருக்கும் லிங்க்கைச் சொடுக்கி, இந்த நல்ல பாட்டை ரசிக்கலாமே!


Sirpi sedhukkatha Porchilaye

Friday, March 2, 2012

தெருச் சித்திரங்கள்!

நமது சாலைகளில் சுண்ணாம்புக்குச்சியால் (சாக்பீஸ்) திருப்பதி பெருமாளோ அல்லது யேசுபிரானோ சித்திரமாகி, வரைந்தவருக்கு (மறைமுகமாக) வருமானம் பெற்றுத் தருவதை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்த மாதிரிப் படங்களை, 2-D (அதாவது இருபரிமாணப்) படங்கள் என்று கூறுவார்கள். அயல் நாடுகளில் தெருக்களில் 3-D, அதாவது முப்பரிமாணப் படங்களை வரையும் விற்பன்னர்கள் பலருண்டு.

இன்று நீங்கள் காணப் போகும் படமும் அத்தகையதே. சாலையின் நடுவில் ஒரு பெரும் பள்ளம் உருவாவதை (time lapse) முறையில் கண்டு களிக்கப் போகிறீர்கள். ஒரு ஓவியனின் கற்பனையை நிஜமாக்க எத்தனை பேரின் உழைப்பு! வாருங்கள் நண்பர்களே, மனிதனின் இன்னுமொரு விந்தையான படைப்பு, இதோ:




street art 'The crevasse-making in time lapse

குடிக்கவும் தோன்றுமோ!

உலகில் நமக்குத் தெரியாத விஷயங்கள் கடலளவு உண்டல்லவா? என்னுடைய தேடுதலில் தென்படும் அத்தகைய சமாசாரங்களில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் தான் எத்தனை மகிழ்ச்சி!

இன்றைய விடியோக்களில் நீங்கள் பார்க்கப் போவது ஒரு தனித்தன்மை வாய்ந்த சித்திர வடிவம். நீங்கள் இதைப் பார்த்து ரசித்த பின்னர் மனதில்லாமல் குடிக்க வேண்டி வரும்! நான் குறிப்பிடுவது நாம் அன்றாடம் குடிக்கும் காபியில் பாலைக் கொண்டு வரையப் படும் ஓவியம். இதை Latte art என்று சொல்வார்கள். இந்த (லாட்டெ) என்பது சிறிது கெட்டியான பால்.(இந்த வார்த்தைக்குச் சரியான தமிழ்ப் பதம் அகராதியில் எனக்குக் கிடைக்கவில்லை!)

இன்னொன்று: இந்த ஓவிய வடிவம் எஸ்ப்ரெஸ்ஸோ காபியில் (இது சிறிது குழம்பாக இருக்கும்) மட்டுமே சாத்தியம். மேல் நாடுகளில் தத்தம் காபி ஷாப்புகளைப் பிரபலப் படுத்த இதில் தேர்ந்த விற்பன்னர்களை வைத்து விளம்பரம் செய்கிறார்கள். உங்களுக்கு ஒரு நல்ல கருத்துருவம் (ஐடியா!) கிடைக்கவேண்டி, இரண்டு விடியோக்களைக் கொடுத்திருக்கிறேன். இவையல்லாமல் இன்னும் ஏதேதோ ஓவியங்களை உருவாக்குகிறார்கள்!