Sunday, November 8, 2009

நானும், மழையும் மற்றும் என் பாஸ்போர்ட்டும்...

மழைக்கும் எனக்கும் ஒரு போட்டி! அது வரும்போதிலெல்லாம் நான் மரியாதையாக வீட்டில் அடங்கி, ஒடுங்கி இருந்தால் போச்சு. மீறி வெளியே போனால் அது எனக்குச் ‘சொந்தக் காசில் சூனியம்’ வைத்துக் கொண்ட கதையாகத்தான் முடிகிறது! பல வருடங்களுக்கு முன்னர், மழையில் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்றபோது விழுந்தேன். இடதுகால் எலும்பை முறித்துக் கொண்டு காலின் உள்ளே காயலான் கடைச் சாமான்களுடன் இப்போதும் வலம் வந்து கொண்டிருக்கிறேன். அதன் பிறகும் பல அனுபவங்கள். அதனாலேயே மிகவும் ஜாக்கிரதையாகப் பயணிக்கும் எனக்கு வந்தது ஒரு சோதனை. என்னுடைய பாஸ்போர்ட் விரைவில் காலவதியாக இருப்பதனால் அதைப் புதுப்பிக்க வேண்டியிருந்தது. அதைத் தபாலில் அனுப்ப வேண்டுமானால் அதில் சில ‘கெஜட்டட்’ அதிகாரிகளின் கையொப்பம் பெற வேண்டும். அப்படி ஒருவரும் பக்கத்தில் இல்லாததால், கணிணியின் பேச்சை நம்பவேண்டியதாயிற்று. அதில் (அவர்களின் வலைத்தளத்தில்) கூறியிருந்தபடி பதிவு செய்து கொண்டால் அவர்கள் குறிப்பிடும் தேதி, நேரத்தில் சென்று, எந்த வரிசையிலும் நிற்காமலும் பதினைந்து நிமிடங்களில் வேலையை முடித்துக் கொண்டு திரும்பிவிடலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. நம்பினேன். பதிவும் செய்தேன்.

அந்த நாளில் மழை வரலாமோ? வந்தேவிட்டது. ஆட்டோவைப்பிடிக்கச் செல்லுகையில் சேற்றில் காலை வைத்து வழுக்கி விழுந்து, பட்டகாலிலேயே பட்டது. மீண்டும் மனந்தளராத விக்கிரமாதித்யனாக வீடு திரும்பி, உடை மாற்றி ஒரு வழியாக பாஸ்போர்ட் அலுவலகம் அடைந்தால் அப்படி ஒரு கூட்டம் அங்கே! நான் செல்ல வேண்டிய தளம் எது என்பதைத் தெரிந்துகொள்ளவே இருபது நிமிடங்களானது. எப்படியோ நொண்டிக் கொண்டு போனால் அங்கும் பெரும் கூட்டம்,அமளி. எனக்கு எத்தனை மணிக்கு நேர்காணலுக்கு வரச் சொல்லியிருந்தார்களோ, அதே சமயத்தில் இன்னும் ஐந்து பேருக்கு மேல் வரச்சொல்லியிருந்தார்கள்! வரிசையில் நின்று அவதிப்பட்டுக் கடைசியில் அவர்கள் கொடுத்திருந்த சமயத்திற்கு மேல் இரண்டரை மணி நேரம் கழித்து வெளியே வந்தேன்! இதில் வேடிக்கை என்னவென்றால், நான் போனது மூத்த குடிமக்களுக்கான சிறப்பு வரிசை, நான் சென்றிருந்த வேலைக்கு அவர்கள் எடுத்துக்கொண்ட மொத்த நேரம் 5 நிமிடங்கள்!

இது நடந்து சிலநாட்களாகின்றன. இன்னும் மழை நின்றபாடில்லை, நானும் நொண்டிக்கொண்டு அலைந்து கொண்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment