Saturday, July 21, 2012

அந்தக்கால ஜீனியஸ்கள்!

        முன்னர் இந்தப் பதிவுகள் ஒன்றில் கே.வி.மகாதேவனை ஜீனியஸ் என்று குறிப்பிட்டிருந்தேன். அது எவ்வளவு உண்மையானது என்பதைச் சமீபத்தில், கலைஞர் தொலைக்காட்சியில் வந்துகொண்டிருக்கும் ‘இன்னிசை மழை’ எனும் நிகழ்ச்சியில் அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. திரு.அப்துல் ஹமீதுடன்  உரையாடும்போது சில விஷயங்களைச் சொன்னார், திரு பஞ்சு அருணாசலம்:

        தமிழ்த் திரையிசையில் மெல்லிசை மன்னர்கள் சக்ரவர்த்திகளாக இருந்தபோது, மகாதேவன் மன்னராகக் கோலோச்சினார் என்றாலும் அப்போது தெலுங்குத் திரையில் மகாதேவன் மட்டுமே சக்ரவர்த்தியாக இருந்தாரென்று சொன்னவர், இன்னொரு முக்கியமான வித்தியாசத்தையும் குறிப்பிட்டார். மன்னர்களால் பெரும்பாலும் மெட்டுக்களே முதலில் உருவாக்கப்பட்டுப் பின்னரே பாடல்கள் எழுதப்பட்டன என்றும், ஆனால் மகாதேவனோ, முழுக்க முழுக்க (எழுதப்பட்ட) பாடல்களுக்கே இசையமைத்தார் என்றும் தெரிவித்தார். அதாவது, கவிஞர்களை, படத்தின் கதையை இயக்குனர்களிடம் கேட்கும்போது மட்டும்தான் அவர் சந்திப்பாராம்!

       சரி, இன்றைய பாடலுக்கு வருவோம்!

       ’தை பிறந்தால் வழி பிறக்கும்’ திரைப்படத்திலிருந்து ஏற்கனவே ஒரு பாடல் கேட்டிருக்கிறோம். இன்று நாம் ரசிக்கப்போகும் பாடலை, கம்பீரமான குரலில் சீர்காழியும், அதற்கு நேரெதிரான மென்மையான குரலில் ஜமுனாராணியும் பாடியிருக்கிறார்கள். கிராமத்து அண்ணன் - தங்கை பாசத்தை அழகாகச் சொல்லி வெற்றி பெற்ற படங்களில் ஒன்று, ’தை பிறந்தால் வழி பிறக்கும்’.  பாடலின் ’மூடு’க்கேற்ப பாடகர்கள் இருவரும் தங்கள் குரலில் எத்தனை கிண்டலையும் கேலியையும் காண்பிக்கிறார்கள், கவனியுங்கள்! வழக்கமான தபலா, டோலக்கின் உருட்டல்கள் மகாதேவனை இனம் காட்டுகின்றன. பாடல் உண்மையில் துல்லியமாக இருந்தபோதிலும், என்னுடைய ஒலிப்பதிவு சுகமாக இல்லை. இருப்பினும் பாடல் இவற்றையெல்லாம் மீறி ரசிக்கத் தூண்டுகிறது - வாருங்கள்!


No comments:

Post a Comment