Tuesday, June 2, 2009

வங்கியில் ஒரு அனுபவம்!

என்னுடைய புலம்பல்களை இரண்டு வகைப்படுத்தலாம். (இரண்டுமே படுத்தல்தான் என்கிறீர்களா?!) தற்காலிகம் மற்றும் சிலகாலம் தொடர்வது என்று. ஒரு ஓய்வு பெற்ற மனிதனுக்கு அன்றாடம் புலம்ப ஏகப்பட்ட விஷயங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. என்னுடைய அண்மைக்காலப் புலம்பலை உங்களிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வேன்?

ஐயா, என்னுடைய ஏடிஎம் அட்டைக்குப் படக்கூடாத இடத்தில் விரிசல் விழுந்ததால் அதனால் (என்னைப்போலவே) ஒரு பயனுமில்லை என்றாகிவிட்டது. உடனே ஒரு விண்ணப்பம் எழுதி, அதனுடன் பழுதான அட்டையையும் இணைத்து வங்கியில் கொடுத்துவிட்டேன். நல்லவேளையாக ஒரு நகலில் வங்கியில் அத்தாட்சியும் பெற்றுவிட்டேன். பதினைந்து நாட்களில் புதிய் அட்டை வந்துவிடும் என்று நம்பிக்கையூட்டினார்கள். இது நடந்து ஏறத்தாழ பத்து மாதங்களாகின்றன. நானும் விடாது கருப்பு என்பது போல வங்கிக்குப் படையெடுத்துக்கொண்டிருக்கிறேன். என்னை எப்போதும் ஒரு குறிப்பிட்ட அதிகாரியிடம் அனுப்புகிறார்கள்.அவரோ, எப்போதும் பிஸியோ பிஸி. காலை பத்து மணிக்குப் போனால் மதியம் வரச்சொல்லுவார். மதியம் போனால் சற்று இருங்கள் என்பார். ஓரு நாள் கேட்டேவிட்டார்: ”ஏன் ஸார், எப்போதும் பிஸி டைமிலேயே வருகிறீர்கள்?” என்று. எப்போது அவருக்கு சமயம் கிடைக்குமோ, எப்போது எனக்கு அட்டை கிடைக்குமோ, நானறியேன் பராபரமே!

குறிப்பு: நீங்கள் ஏன் வங்கி மேலாளரைப் பார்க்கவே இல்லை என்கிறீர்களா? எனக்கும் தோன்றாதா இந்த யோசனை? இவ்வளவு நாளில் ஒரு முறையாவது அவர் இருக்கையிலோ அல்லது வங்கியிலோ இருந்திருந்தால் விட்டிருப்பேனா அவரையும்?!

No comments:

Post a Comment