Tuesday, June 2, 2009

உபதேசம்!

ரொம்ப நாளாகிறது, எழுதி! உடன்பிறந்த சோம்பேறித்தனம் ஒரு முக்கியமான காரணம் என்பதுடன், தவிர்க்க முடியாத அலைச்சல்களும், (வயதானதினால் மட்டுமே வரும்) நிஷ்டூரமும் கூடுதலான, உண்மையான காரணங்கள் தான்.

ஒரு நல்ல பாடம் கிடைத்ததைப்பற்றி உங்களுக்குச் சொல்லவேண்டும்: சமீபத்தில், திருவள்ளுரிலிருந்து சென்னைக்குப் பேருந்தில் வந்து கிண்டியில் இறங்கினேன். அங்கிருந்து ஈக்காட்டுத்தாங்கல் செல்லவேண்டும். அதற்காக ஒரு ஆட்டோ பிடித்து, ரூ.70 கொடுத்து வந்தேன். இது போல ஒவ்வொருமுறை வரும்போதும், ஆட்டோ ஓட்டிகளிடம், ‘என்னப்பா, திருவள்ளுரிலிருந்து சென்னைக்கே பஸ்ஸில் ரூ.15 கட்டணம் செலுத்தி வந்திருக்கிறேன், நீ ரூ.70 கேட்கிறாயே?’ என்று புலம்புவேன். அவர்கள் எல்லோருமே ஒருவரைப் போல, ‘என்ன ஸார் செய்வது, பெட்ரோல் விலை ஏறிப்போச்சு, சவாரி கிடைப்பது கஷ்டம்’ என்று பதிலுக்குப் புலம்புவார்கள்!

ஆனால், இந்த முறை ஆட்டோ ஓட்டி வந்தவர், எனக்காகவே அனுப்பப்பட்டவர்! என் வழக்கமான புலம்பலைக்கேட்டதுமே போட்டார் ஒரு போடு! ‘ஏன் ஸார், திருவள்ளுரிலிருந்து பஸ்ஸில் உங்கள் ஒருவரை மட்டுமா ரூ.15க்குக் கூட்டிவந்தார்கள்? எத்தனை பேரோடு உங்களை அடைத்து வைத்துக் கொண்டுவந்து இறக்கியிருக்கிறார்கள்?’ என்று!

அப்போது மூடிய என் வாய், இப்போதெல்லாம் ஆட்டோக்களில் திறப்பதேயில்லை!

No comments:

Post a Comment