Thursday, December 31, 2009

வயதும் வருடங்களும்!

எங்கள் கண் முன்னே வளர்ந்த பெண் பிள்ளைகள், அவர்கள் தம் பிள்ளைகளுடன் எங்கள் வீட்டிற்கு வருகைதரும் போதிலெல்லாம் என் சகோதரர் சொல்லுவார்: “இவர்களையெல்லாம் பார்க்கும்போதுதான் எனக்கு வயதாகிவிட்டது என்கிற நினைவே தோன்றுகிறது” என்று! உண்மையான பேச்சு! மனதளவில் எவ்வளவு இளமையாக உணர்ந்தாலும், சமூக நாகரீகம் கருதி அடக்கி வாசிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். திருமணம் செய்து கொள்ளாத காரணத்தினாலோ என்னவோ, அநேகமாக எல்லா சூழ்நிலைகளிலும் நான் போகுமிடங்களில் எல்லாம் என் ஸ்வபாவப்படியே ஜாலியாகத்தான் பழகிக்கொண்டு இருக்கிறேன். பார்க்கிறவர்கள் நேரில் சொல்வது ‘கொடுத்து வைத்தவர் ஐயா, நீர் - உமது வயதே தெரிவ்தில்லை’ என்று. பின்னால் என்ன பேசிக்கொள்ளுகிறார்கள் என்பதைப் பற்றி, நமக்கேன் கவலை! ஒவ்வொரு வருடமும் பிறந்தநாளன்று ”இதுவரை வாழ்க்கையில் குறிப்பிடும்படி என்ன சாதித்தோம்? வெறும் ’வேடிக்கை மனிதனாகவே’ வாழ்ந்து விட்டோமே” என்று ஆதங்கப்பட்டே வாழ்வின் விளிம்புக்கு வந்தாயிற்று!

வயது என்றதும் சமீபத்தில் நண்பர் ரவிகுமார் கூறிய ஒரு ஜோக் நினைவிற்கு வருகிறது. அவருடைய தந்தையார் வீட்டிலே விழுந்த காரணத்தினால் இடுப்பில் மூட்டுக்கிண்ணப்பந்து உடைந்து மருத்துவமனையிலே படுத்திருந்தார். வைத்தியர்கள் பந்தை மாற்றவேண்டுமென்று முடிவு செய்துவிட்டார்கள். இந்த நிலையிலே, ரவிகுமாரின் இளைய மகன் கல்லூரியிலிருந்து நேரே தாத்தாவைப்பார்க்க வந்தான். தன் தந்தையிடம், ’தாத்தாவிற்கு என்னப்பா ஆச்சு?’ என்று விசாரித்தான். ரவி கேட்டார்: ‘தாத்தாவின் வயது என்ன?’ என்று. அவருக்கு 80க்கு மேலே என்ற பதில் வந்தது. அதற்கு இவர், ’80 ஓவராகிவிட்டதல்லவா, அதனால், இப்போது பால் மாற்றச் சொல்லிவிட்டார்கள்’ என்று சொன்னார்! இது எப்படி இருக்கு?

No comments:

Post a Comment