Thursday, April 28, 2011

காலம் ஒரு நாள் மாறும்.....

சமீபத்தில் வாலி அவர்கள் எழுதியிருந்த ஒரு விஷயம் கண்ணில் பட்டது. திரு.டி.எம்.எஸ் அவருடைய வீட்டிற்கு வந்திருந்த போது வாலியின் அன்னை, தன் விருப்பப் பாடலான ‘ஏன் பிறந்தாய் மகனே’ என்ற பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்தாராம். என்னுடைய டாப் 3 டி.எம்.எஸ் பாடல்களில் முதலாவது இடத்தைப் பிடித்திருக்கும் பாடலது. அதன் இசையிலும் பாடியதிலும் ஒரு உண்மையான உணர்ச்சி கொப்பளித்திருக்கும். பல ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் உண்மையான காரணம் தெரிந்தது. தன் சொந்த மகனைக் காலனுக்குப் பறி கொடுத்த வேதனையில் டி.எம்.எஸ் இருந்த போதில், சோகத்தை மறக்கடிக்க வேண்டி, எம்.எஸ். விசுவநாதன் அவரை இழுத்துக் கொண்டு போய்ப் பாட வைத்த பாடலாம் அது! சொந்த வாழ்க்கையின் சோகங்கள் எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறது, பாருங்கள். எதனாலோ, பாடகி சித்ராவின் சமீபத்திய இழப்பு என்னை அப்படித்தான் உணர வைத்தது. ஆதரவளிக்க நாம் வேண்டும் ஆண்டவனே அந்த சோகத்துக்குக் காரணமானால் யாரால், எப்படித் தன் ஒரே மகளை இழந்து நிற்கும் அந்தத் தாய்க்கு ஆறுதல் சொல்லமுடியும்?
‘காலம் ஒரு நாள் மாறும், நம் கவலைகள் யாவும் தீரும்’ என்று நம்புவோம்.

2 comments:

  1. வாலியின் தாயைப்போலவும் உங்களைப்போலவும் நிறையப்பேருக்குப் பிடித்த பாடல் அது.அந்தப் பாடலை மிகவும் வியந்துபாராட்டிய இன்னொருவர் இசையமைப்பாளர் எம்.பி.எஸ்."கண்ணதாசன் பாடல்களிலேயே எனக்குப்பிடித்த பாடல் அதுதான்.அதுவும் 'இல்லையொரு பிள்ளையென்று ஏங்குவோர் பலரிருக்க இங்குவந்து ஏன்பிறந்தாய் செல்வமகனே'என்ற வரி இருக்கு பாருங்க...அதெல்லாம்... அதெல்லாம்..... யாராலேயும் அப்படியெல்லாம் சட்டுன்னு வார்த்தைகள்ள கொண்டுவந்துற முடியாது'-என்று நான், சுஜாதா, கண்ணன் மூவரும் சந்திக்கச்சென்றிருந்தபோது சொன்னவர் அன்று மாலை தேவநேயப்பாவாணர் அரங்கில் நடந்த கூட்டத்திலும் அதையே சொன்னார்.அந்த வரிகளை டிஎம்எஸஸும் உணர்ச்சி கொப்புளிக்கப் பாட நினைவில் நின்ற பாடலாக அமைந்ததில் வியப்பில்லை.

    ReplyDelete