Saturday, April 21, 2012

இரவும் நிலவும்....


தமிழ்த் திரைப்படத் துறை இன்றிருக்கும் கால கட்டத்தில், கணினியின் உதவியால் புதுப்பிக்கப் பட்ட பழைய படமான சிவாஜியின் ‘கர்ணன்’ ஓஹோ என்று ஓடி கோடிகளைக் குவித்துக் கொண்டிருக்கிற நேரமிது! இதற்குப் பல வருடங்களுக்கு முன்னர், இதேபோல, நீண்ட இடைவெளிக்குப் பின்னர், சிவாஜியின் முதல் படமான ‘பராசக்தி’யும் வெளியிடப்பட்டு இப்படித்தான் (மீண்டும்) மகத்தான வெற்றியடைந்தது நினைவுக்கு வருகிறது. (அப்போது ஒருநாள், வேறொரு படப்பிடிப்பில் சிவாஜி இருந்தபோது, அவ்வழியே வந்த நாகேஷ், சிவாஜியின் பக்கத்தில் வந்து, ‘யப்பா, நேத்து நீ நடிச்ச பராசக்தி பார்த்தேன், பரவாயில்லை, நல்லாவே பண்ணிருக்கே, முன்னுக்கு வருவே’ என்று சொல்லிவிட்டு அவசரமாக இடத்தைவிட்டு நகர்ந்தாராம்!) நல்ல கதைகள், இனிமையான பாடல்கள், அருமையான கலைஞர்களின் நடிப்பு என்று எல்லாத் துறைகளும் கொடிகட்டிப் பறந்த காலமது! இன்றுபோல் அல்லாமல், (வாருங்கள், வாருங்கள் என்று அழைக்காமலே) படம் பார்க்கத் திரையரங்கிற்கு மக்கள் வருகிறார்கள் என்றால் அதற்கு மேற்கூறியவைதான் முக்கிய காரணம் அல்லவா? ’கர்ணன்’ படம், இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு ஒரு உச்சமான பீரியட் என்றே சொல்லலாம். எல்லாப் பாடல்களும் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் மிகச் சில படங்களில் கர்ணனும் ஒன்று. நாமும் அதிலிருந்து ஒரு டூயட்டை ரீ-ரிலீஸ் செய்யலாம் என்று ‘இரவும் நிலவும்’ என்ற பாடலைத் தேர்ந்தெடுத்தேன். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில், ஒரே மெட்டில் அமைந்த பாடல்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமான காரியம்! ஏதேதோ ஜாலங்கள் செய்து எந்த மெட்டையும் புதிதாகத் தோன்றும்படி செய்துவிடுவார்கள்! ஆனாலும், இந்தப் பாட்டுக்கும், நாம் ஏற்கனவே கேட்டிருந்த (‘கவலை இல்லாத மனிதன்’ படத்திலிருந்து) ஜமுனாராணி பாடியிருந்த ‘பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்’ என்ற பாடலுக்கும் இசைக் கோர்வையில் சில ஒற்றுமைகள் தென்பட்டன. ஜமுனாராணியின் பாடலில் மெட்டும் ஷெனாய் வாத்தியமும் சோகமாக ஒலித்தாலும், தாளம் (தபலாவும் டோலக்கும் சேர்ந்து) மிக உற்சாகமாக ஓடும். கர்ணன் பாடலில் மெட்டு சுகமான டூயட்டாக இருந்தாலும் ஷெனாய்கள் சோகமாகவும் தாளம் பழைய பாடலைப்போல் குதூகலமாகவும் அமைக்கப் பட்டிருக்கும். (இன்றைய பாட்டில் ஷெனாய்’கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறேன், கவனித்தீர்களா?) ஆமாம், சாதாரணமாக ஒரு ஷெனாய் உபயோகித்தாலே பாடலுக்கு அழுத்தம் அதிகம் என்பார்கள். இங்கோ, மன்னர்கள் இரண்டு வாத்தியங்களை உபயோகித்து மெலடியை மேம்படுத்தியிருக்கிறார்கள்! பாடலின் ஆரம்பத்திலும், ‘இரவும் பகலும்’ என்று வரும் ஒவ்வொரு இடத்திலும் டோலக், ‘கும்க்’ என்று தாளத்தை ஆரம்பிப்பது எவ்வளவு இனிமையாக இருக்கிறது என்பதையும் கேளுங்கள். இன்னொரு பதிவில், ‘கர்ணன்’ படத்தில் வராமல்.....வந்த பாடலைப்பற்றிச் சொல்கிறேன். இப்போது கண்ணதாசன் எழுத, மன்னர்கள் இசையமைக்க, டி.எம்.எஸ்-சுசீலா இதோ:

3 comments:

  1. தங்கள் விவரிப்பைப் படித்துவிட்டு பாடலைக் கேட்பது
    புதிய அனுபவமாக இருக்கிறது
    பாடலை புதிதாகக் கேட்பது போலவும் இருக்கிறது
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. ”இரவும் நிலவும்” இனிமையான பாடலை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. திரு.ரமணி அவர்களுக்கும், திரு.வெங்கட் நாகராஜ் அவர்களுக்கும் நன்றி!

    ReplyDelete