Monday, April 30, 2012

மதுரை சோமுவும் சிவாஜியும்!


உலகிலேயே மனிதக் குரலை ஒத்த ஒலி உடைய ஒரே இசைக் கருவி, வீணை என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு உண்மை. வீணையை வாசித்து, சிவபெருமானையே கவர்ந்தவன் ராவணன்! இன்று நாம் ரசிக்கப் போகும் பாட்டில் (தாள இசைக்கருவிகள் தவிர) வீணை மட்டுமே உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. அதனுடன் சேர்ந்து பாடுபவர், ஸி.எஸ்.ஜெயராமன். நான் முதலில் கூறிய தகவல் எவ்வளவு உண்மையானது என்பதை இன்றைய பாட்டில் நீங்கள் (கேட்டுத்) தெரிந்துகொள்ளலாம். பாடலைப் பாடிய ஸி.எஸ்.ஜெயராமனும் ஒரு இசையமைப்பாளரே! ’ரத்தக் கண்ணீர்’ திரைப்படத்தில் வரும் பிரபல பாடலான ‘குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது’ என்ற பாடலின் மெட்டு, இவருடையதுதான்! ’இன்று போய் நாளை வாராய்’ என்ற நமது இன்றையப் பாடலின் மெட்டிலே, மகாகவி பாரதியின் ‘நல்லதோர் வீணை செய்தே’ என்ற பாடலை ஸி.எஸ்.ஜெயராமன் தனது மேடைக் கச்சேரிகளில் பாடிக் கொண்டிருந்தார். சம்பூர்ண ராமாயணம் திரைப்படத்தில் அந்தக் குறிப்பிட்ட காட்சிக்குப் பொருத்தமாக இருக்கும் என்று மாமா கே.வி.மகாதேவன் உபயோகப்படுத்திக்கொண்டார்! (இதே போலப் பின்னாளில், ‘கந்தன் கருணை’ திரைப்படத்திலும் குன்னக்குடி வைத்தியநாதன் ஏற்கனவே அமைத்திருந்த மெட்டில் வெளிவந்திருந்த ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’ என்ற பாட்டையும் மாமா உபயோகப்படுத்திக்கொண்டார்.) இன்னொன்று தெரியுமா உங்களுக்கு? ‘சம்பூர்ண ராமாயணம்’ திரைப்படத்தில் ஸி.எஸ்.ஜெ., நமது இன்றைய பாடல் உட்பட இரண்டு பாடல்கள் பாடியிருப்பார். அவை இரண்டையும் முதலில் மதுரை சோமுவைப் பாடவைத்துப் பதிவும் செய்திருந்தார்கள். (அந்தப் பாடல் பதிவின் போது அங்கிருந்த சிவாஜி, சோமுவின் பாடலில் மனதைப் பறிகொடுத்து, தன் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைக் கழற்றி சோமுவுக்கு அணிவித்தார்! அப்போதைய ’பேசும் படம்’ திரைப்பட மாத இதழில் புகைப்படம் கூட வந்தது.) ஆனால், திரைப்படத்தில் ராவணனாக நடித்திருந்த டி.எஸ்.பகவதியின் குரலுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால் மீண்டும் ஸி.எஸ்.ஜே குரலில் பதிவு செய்யப் பட்டது. (இந்தத் தகவலை, பின்னாளில் ஒரு கச்சேரியின்போது மதுரை சோமுவிடமிருந்தே அறிந்துகொண்டேன்.) இனி, இன்றைய பாடலைப் பற்றியும் கொஞ்சம் பார்க்கலாம்! இந்த அற்புதமான பாடல், ’திலங்’ எனும் கர்நாடக ராகத்தில் அமைந்துள்ளது. (மெல்லிசை மன்னர்களின் இசையமைப்பில் சுசீலா பாடியிருக்கும் ‘அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்’ எனும் ‘பஞ்சவர்ணக்கிளி’ திரைப்படப் பாடலும் இதே ராகந்தான்) பாடல் சோகமாக இருந்தாலும், பாடலில், (ராவண மாமன்னனின்) கம்பீரத்தை இசையமைப்பாளர் எப்படி வெளிக் கொணர்ந்திருக்கிறார், பாருங்கள்! வீணை, தபலா, கடம் இவை மூன்றை மட்டும் வைத்துக் கொண்டு நம்மை எப்படி சோகத்தில் ஆழ்த்துகிறார், மாமா! (அதீத ரசனையில் சில சமயம் கெட்ட வார்த்தைகளில் கூடத் திட்டத் தோன்றுகிறதல்லவா! அதுதான் ஒரிஜினல் இசை, ஒரிஜினல் ரசிப்பு!) இனி, நம் பதிவுக்கு முதன் முறையாக வந்திருக்கும் ஸி.எஸ்.ஜெயராமனின் காலங்கடந்த பாடல், உங்கள் ரசனைக்கு:

4 comments:

  1. தங்கள் பதிவின் மூலம் மிக அருமையான பாடலை
    கேட்டு ரசிக்க முடிந்தது
    மிக்க நனறி

    ReplyDelete
  2. பாடலின் ஆரம்பத்தில் வரும் வீணையின் ஒலியில் தான் எத்தனை சோகம்.... வரும் பாடலில் தன்மையை அழகாய் சொல்லி விட்டது. நல்லதோர் பாடலைப் பகிர்ந்து கொண்டதற்கு எனது மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி, திரு.வெங்கட் நாகராஜ்!

      Delete