Sunday, March 1, 2009

என்ன கொடுமை சார் இது!

இப்போது அடிக்கடி காதில், கண்ணில் விழுந்துகொண்டிருக்கும் சொல் மனித நேயம். சமீபத்தில் எங்கள் குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன், கேளுங்கள். என் சிற்றப்பனின் மகன், தன்னுடைய மகனுக்குப் பெண் தேடி, ஜாதகம் முதலியவை பார்த்து நிச்சயமும் செய்து விட்டான். பெண் தன் பெற்றோருடன் ஹைதராபாதில் இருந்தாள். இவர்கள் இருப்பதோ திருச்சியில். நான்கு மாதங்களுக்குப்பின்னர், ஹைதராபாதில் கல்யாணம் என்று நாளும் குறித்தாயிற்று. ஏற்பாடுகள் எல்லாம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. எங்களுக்கெல்லாம் தகவல் சொல்லி, யாரெல்லாம் வருகிறார்கள் என்று கேட்டு ரயிலில் பதிவு செய்ய லிஸ்ட் தயாராகிக்கொண்டிருந்தது. திருமண அழைப்பிதழ் ரெடி ஆகும் சமயம் ஹைதராபாதில் இருந்து போன் வந்தது: பெண்ணின் உடல் நிலை சரியாக இல்லை என்றும், டாக்டர்களிடம் சோதித்ததில் மோசமான நோய் தாக்கியிருப்பதாகவும், என்ன செய்வது என்று புரியவில்லை என்றும் பெண்ணின் தந்தை கூறினார். என்னுடைய தம்பியும் கொஞ்சம் யோசித்துவிட்டு , பெண்ணின் தந்தையை, அந்தப் பெண்ணின் மெடிக்கல் ரிகார்டுகளை எடுத்துக்கொண்டு திருச்சி வந்தால் இங்கே இருக்கும் இவனுக்குத் தெரிந்த பிரபல மருத்துவரிடம் இரண்டாவது யோசனை கேட்கலாம் என்றான். அடுத்த இரண்டு நாட்களில் பெண்ணின் தந்தையும், தாய் மாமாவும் திருச்சி வந்தடைந்தனர். இந்த டாக்டரும் மீண்டும் நன்றாக ரிக்கார்டுகளை எல்லாம் பார்த்து, அங்கே சொன்ன அதே நோய்தான் என்று முடிவு கூறினாராம். பின்னர், அந்த டாக்டர் என் தம்பியைத் தனியே அழைத்து, உனக்கும் வந்திருப்பவர்களுக்கும் என்ன தொடர்பு என்ற விவரம் விசாரித்திருக்கிறார். இவன் சொன்னவுடன், இந்தத் திருமணம் நடக்கக் கூடாது, பெண்ணின் வாழ்நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றது என்று அபிப்பிராயம் தெரிவித்திருக்கிறார். இதை எப்படி பெண்ணின் தந்தையிடம் சொல்வது என்று என் தம்பி தயங்கிக்கொண்டிருக்கும் போதே, அவர் வருத்தத்தோடு சொன்னாராம்: இவ்வளவு நல்லவர்களாக நீங்கள் இருக்கும் உங்களுடன் சம்பந்தம் வைத்துக்கொள்ள எங்களுக்கு கொடுப்பினை இல்லையே என்று! என்ன கொடுமை சார் இது!

2 comments:

  1. உண்மையில் மனதைத்தொட்ட செய்தி. அந்த பெண்ணுக்காக பிரார்த்தனை செய்வோம்.
    வே.நடனசபாபதி

    ReplyDelete
  2. நன்றி, ஸார்! பாரதி சொன்னது போல, நம்புவதே வழி என்ற மறை தனை நாம் ‘என்றும்’ நம்பிடுவோம்!

    ReplyDelete