Monday, March 30, 2009

கைரளியும் அஸ்தமான் பிள்ளையும்!

மதிய நேரங்களில் டிவியில் மேய்வது வழக்கம். கொஞ்ச நாட்களுக்கு முன் கைரளி டிவியில் 'எல்லாரும் பாடணம்' என்ற மலையாள நிகழ்ச்சி சிக்கியது. அதில் நிறைய தமிழ்ப் பாடல்களை மலையாள இளைய தலைமுறையினர் நன்றாகவே பாடிக்கொண்டிருந்ததால் நிகழ்ச்சியில் ஒரு ஈர்ப்பு வந்தது. மூன்றே பேர் கொண்ட இசைக்குழு, இரண்டு நல்ல மலையாள இசையமைப்பாளர்கள் மற்றும் நமது கர்நாடக சங்கீத விற்பன்னர் எஸ்.சௌம்யா ஆகியோர் ஜட்ஜாக அமர்ந்திருக்க, நிகழ்ச்சியின் தரம் நன்றாகவே இருந்தது. முதல் நாளின் ரீ-ப்ளே என்பதால் விளம்பரங்களும் இல்லை. தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன். ஒரு நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் மெல்லிசைப் பாடல்களைப் பாடினர். அன்றுதான் அஸ்தமான் பிள்ளை என்றொருவர் பாட வந்தார். தொடர்ந்து நிமிஷங்கள் போனதே யாருக்கும் தெரியவில்லை! அவர் பாடிக்கொண்டே இருக்கிறார் - கேட்பவர்கள் எல்லாம் மெய் மறந்து விட்டார்கள். நான் உட்பட! பாடி முடித்ததும், எங்கும் ஒரு அமைதி. ஒரு நிமிடம் யாரும் பேசவில்லை, கை தட்டவும் இல்லை. நெஞ்சை உருக்கிய கனத்த மௌனத்தில் காமிரா, செட்டையும் பாடகரையும் மெதுவாக சுற்றி வருகிறது. ஜட்ஜுகள் உள்பட எல்லார் கண்களிலும்நீர்! தொகுப்பாளினி அழுதேவிட்டார். இந்த உணர்ச்சியிலிருந்து விடுபட சற்று நேரமாயிற்று. அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் தான் எத்தகைய கலைஞன்! பாடல் முடிந்தவுடன் அந்த உணர்ச்சிகரமான மௌனத்தைப் பதிவு செய்த அழகை மறக்கமுடியவில்லை. ஒரு மிக நல்ல கவிதையைப்போல மனதினுள்ளே ஆழமாகப் பதிந்துவிட்டது. சொல்ல மறந்துவிட்டேனே! அஸ்தமான் பிள்ளை கண் பார்வையற்றவர்!

No comments:

Post a Comment