Tuesday, August 30, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (நான்கு)


உங்களுக்கும் எனக்கும் இன்றைய தினம் ஆனந்தமான நாளாக மலரப் போகிறது! இன்று நாம் ரசிக்கவிருக்கும் பாடல் அத்தகையது!

தலைவியின் மனதிற்கேற்ப அவளின் காதல் கைகூடினால், பெரும் மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் தவிர வேறென்ன உணருவாள்? அந்த உணர்ச்சிகளை அப்படியே கொணர்ந்து மெல்லிசை மன்னர்கள் இந்தப் பாடலுக்கு எக்ஸ்பிரஸ் வேகத்தில் இசை அமைத்திருக்கிறார்கள். அதன் முழுப் பரிமாணமாக, பாடல் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை வயலின்களும், பியானோவும், டோலக்கும், தபலாவும், எல்லாவற்றிற்கும் சிகரமாக சுசீலாவின் தேன் குரலும் நம் உயிரைச் சுண்டி இழுக்கிறது பாருங்கள், அதுதான் இந்தப் பாடலின் வெற்றி.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய இப் பாடல் ‘தங்கப் பதுமை’ திரைப்படத்தில் வருகிறது. (இதே படத்தில் பிரபலமான இன்னும் இரு பாடல்கள்: டி.எம்.எஸ்-ஜிக்கி பாடியிருக்கும் ’இன்று நமதுள்ளமே’ மற்றும் சிதம்பரம் ஜெயராமன் பாடி, பத்மினி இடையே பேசியிருக்கும் ‘ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே”).

’என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன்’ என்கிற இந்தப்பாடல், படத்தில் இன்னொரு முறை நெஞ்சைப் பிழியும் சோகத்தோடும் ஒலிக்கும்! அதையும் சுசீலாதான் பாடியிருக்கிறார். நான் தெரிவு செய்திருப்பது (இசைக் கோர்வைக்காக) மகிழ்ச்சியான பாடல். அதன் ஆரம்பத்திலும், சரணங்களின் இடையிலும் வரும் வயலின்களின் விளையாட்டையும், அதற்குப் பியானோவின் ‘கார்டுகள்’ (Chords) தரும் அரவணைப்பையும், இரண்டாவது சரணத்தின் முன்னிசையில், வயலின்கள் மற்றும் பியானோவோடு பின்னால் புல்லாங்குழல் இசை பின்னிப் பிணைந்து கொண்டு வருவதையும் தவற விட்டு விடாதீர்கள்! இப்போது பாடல் இதோ:

En vaazhvil pudhup paadhai by Krishnamurthy80


மீண்டும் சந்திப்போமா, நண்பர்களே?




No comments:

Post a Comment