Sunday, May 6, 2012

கனிந்த மரம்!


நடிகை, இயக்குனர்,பாடகி என்று தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் 1950-60களில் வலம் வந்தவர், பி.பானுமதி. அவரின் நடை, உடை, பாவனைகளைப் போலவே அவருடைய பாடல்களிலும் கம்பீரமும் அலட்சியமும் கலந்திருப்பதைக் காணலாம். காதல் டூயட் பாடும்போதுகூட இந்த ’டாமிநேஷன்’ தெரிந்துவிடும்! அவருடைய கணீரென்ற குரல் அப்படிப்பட்ட தனித்தன்மையுடையது! அவருக்கு முன்னும் பின்னும் யாரிடமும் நாம் கேளாதது! நாம் இன்று ரசிக்கப் போகும் பானுமதியின் பாடல், தாலாட்டில் கதை சொல்லுகிற வகை. ‘அன்னை’ எனும் ஏவிஎம் திரைப்படம் 1962ல் வெளிவந்தது. இரு சகோதரிகளின் கதையில், ஒருத்தி, ஏழைக்காதலனோடு ஓடிப்போகிறாள். அவளுக்குக் குழந்தையும் பிறக்கிறது. மற்றவளோ, செல்வந்தர் குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டாலும் குழந்தை பாக்கியம் இல்லை. ஒரு கட்டத்தில் சகோதரிகள் சேருகிறார்கள்....என்று போகிறது. சகோதரியின் குழந்தையைத் வண்டியில் தள்ளிக் கொண்டே பானுமதி பாடும் பாடல் இது. இந்தத் திரைப்படத்திலேயே அவர் இன்னுமொரு அருமையான பாடலைப் பாடியிருக்கிறார். அதை அவசியம் இன்னொரு பதிவில் கேட்போம். இன்றைய பாடலின் இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனத்தின் இசையில் முன்பே பல பாடல்கள் கேட்டிருக்கிறோம். இன்றைய பாடலின் ஆரம்ப இசை, நமது மேதை கே.வி.மகாதேவனின் பாணியிலிருப்பதைக் கவனித்திருப்பீர்கள்! இந்தப் பாடலின் இன்னொரு விசேஷம், பானுமதியின் கம்பீரக் குரலுக்கு ஈடு கொடுக்கும் தபலாவின் அழுத்தமான வாசிப்பு. ஸிதாருடன் வீணையும், இவை இரண்டுடன் குழலும் சேர்ந்து பல இடங்களில் ஒரு புது ஒலியாக மயக்குகின்றன. இதோ,கண்ணதாசனும், சுதர்சனமும் பானுமதியும், நீங்களும்!:

No comments:

Post a Comment