Sunday, September 11, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (ஏழு)

மெல்லிசை மன்னர்கள் இசையில் உருவான ஆறு அற்புதமான பாடல்களைக் கேட்டோம். அவர்களுக்கு சமகாலத்தில் கோலோச்சிய இன்னொரு மேதை, கே.வி.மகாதேவன் இசையில் உருவான ஒரு அரிய பாடலை இன்று கேட்கலாமா?

’அரிய’ என்று ஏன் கூறினேன் என்றால், இன்று நாம் கேட்கப் போகும் பாடல் இடம் பெற்ற ‘மகாலக்ஷ்மி’ என்ற திரைப்படத்தில், இன்று எஞ்சியிருப்பதெல்லாம் இந்தப் பாடலின் ஒலி மட்டுமே!

யோசித்துப் பார்த்தால்,அந்தக் காலகட்டத்திலும் அதற்கு முன்னரும் இசையமைத்த எல்லாருடைய பலமும் மெட்டில் மட்டுமே இருந்து வந்திருக்கிறது. விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இசை அமைக்க ஆரம்பித்த பிறகு தான், மெட்டுக்களுக்கு மட்டுமின்றி, வாத்தியங்களின் இசைக் கோர்வைக்கும், பாடல் வரிகளுக்கும் முக்கியத்துவம் வந்தது எனலாம்.

தமிழ்த் திரை இசைத் துறையில் மன்னர்களுக்கும் ஸீனியரான மகாதேவனின் பாடல்களின் வெற்றிக்கு, இசைக்கோர்வையை விடவும் மெட்டுக்களும், தாள வாத்தியங்களுமே பிரதான காரணமானது. (‘வண்ணக்கிளி’ படத்தில் வரும் ‘மாட்டுக்கார வேலா’ மற்றும் ’வண்டி உருண்டோட’ என்கிற நல்ல பாடல்களை நினைவுக்கு கொண்டு வாருங்கள்! தாள வாத்தியமான தபலாவின் பங்கு விளங்கும்). இந்த வகையில் மகாதேவனிடமிருந்து பல அருமையான பாடல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

இப்போது மகாதேவன் மெட்டமைத்து, இரண்டு ஈஸ்வரிகள், (எம்.எஸ்.ராஜேஸ்வரியும், எல்.ஆர்.ஈஸ்வரியும்) பாடிய ‘சின்னஞ்சிறு கண்ணன்’ என்கிற இந்தப் பாடலைக் கேளுங்கள்:


Chinnanjiru Kannan by Krishnamurthy80


முதலில், இந்தப் பாடலில் இந்த இரண்டு வித்தியாசமான குரல்களை உபயோகித்த யோசனையே ஒரு அருமையான விஷயம்! அடுத்ததாக, இவ்வளவு காலம் (ஏறத்தாழ 50 வருடங்கள்!) கடந்தும் ஒரு பாடல் நிலைத்து நிற்கிறது (அதாவது, மொத்தத் திரைப்படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும்!) என்பது இன்னும் எவ்வளவு பெரிய விஷயம்! என்ன ஒரு மெட்டு! ‘இனிக்கவே ஒன்று தா’ என்று ராஜேஸ்வரி கேட்கும் போது, அவருடைய குரலின் குழைவில், உலகையே மறந்து, சின்னஞ்சிறு கண்ணனிடம் நாமும் கெஞ்சி நிற்கிறோமல்லவா, அதுதான் இந்தப் பாடலின் தனிச் சிறப்பு! அவரின் குரலுக்கு (மிகவும்) இளமையான எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் எவ்வளவு அழகாகத் துணை போகிறது! தபலாவும் இந்தப் பாடலின் இன்னொரு ஹீரோ என்பதை மறுக்க முடியுமா? இந்த ஒரு பாடலைத் தவிர, ஈஸ்வரிகள் இருவரும் இணைந்து வேறு பாடல்கள் பாடியிருப்பதாக நினைவில்லை – ஆனால், இது ஒன்றே போதுமே!


மீண்டும் சந்திப்போம், நண்பர்களே!

No comments:

Post a Comment