Monday, September 19, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (ஒன்பது)

நண்பர்களே! இன்று நாம் கேட்கப்போகும் இந்தப் பாடலை, (நான் ஏற்கனவே என்னுடைய முதல் பதிவில் எழுதியிருந்தபடி) குறிப்பிட்ட சூழ்நிலையில் கேட்டால், உங்கள் மனது கரைந்து லேசாகிவிடும் என்பதற்கு நான் உத்திரவாதம்! இதை, சோகத்தைக் குரலில் கொண்டுவந்து கொட்டி எஸ்.வரலக்ஷ்மியும், சோகத்தையே குரலாகக் கொண்ட டி.எஸ். பகவதியும் பாடியிருக்கிறார்கள்.

ஆமாம். பகவதியினுடையது, மிக சோகமான குரல். ஆனால் அருமையானது, வித்தியாசமானது! நல்ல பாடகியான இவரின் மெலிதான குரல், கேட்பதற்கு வெகு சுகமானது என்றாலும், அக்காலத்திய பல கதாநாயகிகளுக்கு ஒத்து வராமல் போனது. ஆனாலும் கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்த குரலானது! இதை அவரே பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.

பாடலுக்கு வருவோம்.

தமிழர்களின் தனிச் சிறப்பான தாலாட்டையும், ஒப்பாரியின் சோகத்தையும் கலந்த ஒரு அபூர்வமான விருந்து, இந்தக் கண்ணதாசனின் பாடல். சிவகங்கைச் சீமை திரைப்படத்திற்கான இந்தப் பாடலை ஒரு காவியமாக்கியிருக்கிறார்கள் மெல்லிசை மன்னர்கள்.

ஆங்கிலேயர்களுடன் போருக்குச் செல்லப் போகும் மருது சகோதரர்கள், திரும்பி வரப் போவதில்லை என்கிற தெளிந்த உள்ளுணர்வோடு, அவர்தம் மனைவியர் பாடுவதுபோல அமைந்துள்ளது இப்பாடல். சாதாரணமாக மகுடி ராகம் என்றறியப்படும் புன்னாகவராளி எனும் கர்நாடக சங்கீத ராகத்தைத் தழுவிப் போடப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க மெட்டையே பிரதானமாகக் கொண்ட இந்தப் பாடலில், பெண்டிர் இருவரின் குரல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம். பின்னணியில் அடக்கி வாசிக்கப் பட்ட தபலாவும், குழலும், சிதாரும், (கதையின் இறுக்கமான சூழ்நிலையில்), பாடலில் சோகத்தை அதிகமாக்குவதற்கு மட்டுமே உறுதுணையாக இருக்கிறது.

ஒரு அதிசயமாக, மன்னர்கள் இசையில் வயலின் சத்தமே கேட்காத ஒரு அரிய பாடல், இதோ:

Thendral vandhu veesadho by Krishnamurthy80

அழகான மெட்டும், அருமையான பாடலும், அவற்றைக் கச்சிதமாகக் கோர்த்துக் கொடுக்கப் பட்டுள்ள விதமும், எத்தனை திறமைசாலிகளுக்குப் புகழ் சேர்த்திருக்கின்றது! டீம் வொர்க் என்பதின் அர்த்தம் புரிகிறதா?!

மனதை உருக வைப்பதில் இசைக்கு மட்டுமல்ல, பாடல் வரிகளுக்கும் பெரும் பங்கு உண்டு. முழுப் பாடலையுமே சொல்லலாம் என்றாலும்,

‘போர் மீறிப் புறப்படுவார் -

பொன்னாட்டின் புகழ் வளர்ப்பார்

என்ற வரிகளை வீரமாகவும், அடுத்து வரும்

யார் வருவார், யார் மடிவார்,

யாரரிவார் கண்மணியே!

என்ற வரிகளைச் சோகமாகவும் வரலக்ஷ்மி பாடும் போது, ஒன்றிக் கேட்கும் ரசிகனாகிய உங்கள் கண்களில் நீர் அரும்பாமலும் போகுமோ?

அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம், நண்பர்களே!

2 comments:

  1. கேட்டிராத பாடல். வரிகள் அற்புதம். யார் பாடியது?
    வயலின் சத்தமே கேட்காத...? :)

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி,திரு.அப்பாதுரை! பாடலை, எஸ்.வரலக்ஷ்மியும் டி.எஸ்.பகவதியும் பாடியிருப்பதை முதலிலேயே குறிப்பிட்டிருக்கிறேனே!

    ReplyDelete