Saturday, September 3, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (ஐந்து)

கர்நாடக இசையில், மனிதனின் ஆதார உணர்ச்சிகளைகப் பிரதிபலிக்கும் ராகங்கள் ஏராளம் உண்டு. நீங்கள், உங்கள் ‘மூடு’க்கேற்ற ராகத்தையும் பாடலாம் – அல்லது ஒரு ராகத்தைப் பாடியும் ‘மூடை’ வரவழைக்கலாம்! நமது திரைப்படங்களின் இசையை, (பாடல்களாகட்டும், பின்ன்ணி இசையாகட்டும்) அந்தந்தப் படத்தின் கதையே முடிவு செய்கிறது என்பதையும், நமது படங்களில் எல்லா ’மூடு’களும் பரவியிருக்கும் என்பதையும் சொல்லித் தெரியவேண்டியதில்லை! இதில், சோகத்தை வெளிப்படுத்தக்கூடிய ராகமாக ‘முகாரி’ என்ற ராகத்தை, சாதாரணமாகக் குறிப்பிடுவார்கள். (இங்கே ஒரு செய்தி: இசையமைப்பாளர் ஜி.ராமநாதன், காதலை வெளிப்படுத்தும் விதமாக ’கானடா’என்கிற ராகத்தில் பல நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கிறார். ‘முல்லை மலர் மேலே’ என்கிற உத்தமபுத்திரன் படப் பாடல் நினைவிருக்கிறதா? ‘அம்பிகாபதி’க்காக இசையமைக்க உட்கார்ந்த போது, பாடலாசிரியரின் சவாலை ஏற்றுப் போட்ட மெட்டுத்தான், முகாரி ராகத்தில் அமைந்திருக்கும், ‘வாடா மலரே, தமிழ்த் தேனே’ என்கிற அற்புதமான பாடல்!) முகாரி ராகத்தை விடவும் சோக உணர்வு அதிகம் தென்படும் ராகத்தின் பெயர், சுபபந்துவராளி. இந்த ராகத்தை ஒட்டிய மெட்டுக்களில், மெல்லிசை மன்னர்களிடம் மூன்று அருமையான பாடல்களைப் பாடியிருக்கிறார், சுசீலா. அவை, ’பாலும் பழமும்’ படத்தில் வரும் ‘இந்த நாடகம், அந்த மேடையில் எத்தனை நாளம்மா’ என்ற பாடலும், ’ஆனந்த ஜோதி’ படத்தில் வரும் ‘காலமகள் கண் திறப்பாள், சின்னையா’ என்ற பாடலுமாகும். மூன்றாவது (வரிசையில், முதலாவது?!) பாடல், ’புதையல்’ படத்தில் பத்மினிக்காக சுசீலா பாடியிருக்கும், ‘ஆசைக் காதலை மறந்து போ’ என்பது. காதலனை மறக்க வேண்டிய கட்டாயத்தில் கதாநாயகி பாடுகிறாள். பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல். இதே படத்தில் வரும் ‘விண்ணோடும் முகிலோடும்’ உனக்காக, எல்லாம் உனக்காக, சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும்’ என்ற பாடல்கள் போல பிரபலமாகாத பாடல், ‘ஆசைக் காதலை...’. ஆனால் இசையமைப்பில் இந்தப் பாடல்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத நல்ல பாடல் என்பதால் இங்கே இடம் பெறுகிறது! பாடலும் இசையும் உங்கள் நினைவலைகளைத் தூண்டுமென்ற நம்பிக்கையோடு இணைத்திருக்கிறேன். கேளுங்கள்:



மீண்டும் சந்திப்போம், நண்பர்களே!

No comments:

Post a Comment