Monday, May 28, 2012

மகாதேவன் எனும் ஜீனியஸ்!

     கர்நாடக சங்கீதத்திலே திரை இசையைப் போலவே எளிதாக மனதைக் கவரும் ராகங்கள் பல உண்டு. சிந்து பைரவி என்ற ராகத்தை எடுத்துக் கொண்டால் நினைவுக்கு வரும் திரைப்பாடல்கள்:  ’என்னை யாரென்று’ (பாலும் பழமும்); ’செண்பகமே’ (எங்க ஊர்ப் பாட்டுக்காரன்) போன்ற ஏராளமான பாடல்கள்! ஆபேரி என்று இன்னொரு ராகம்: ’நகுமோ’ (படையப்பா); ‘ஏரிக்கரையின் மேலே’ (முதலாளி) இன்னபிற பாடல்கள்! நாம் இன்று ரசிக்கப் போகும் பாடலோ, அத்தகைய சாருகேசி என்ற அற்புதமான ராகத்தில் அமைந்துள்ள மெட்டு.

     அநேகமாக எல்லா கர்நாடக சங்கீத ராகங்களிலும் கடவுளரைப் பற்றிய பலவித உணர்ச்சிகளே மிஞ்சியிருக்கும். நாட்டியத்தில் இடம்பெறும், சிருங்காரம் போன்ற உணர்ச்சிகளைப் பெரும்பாலும் இந்த சாருகேசி ராகத்தில் பாட்டு, மெட்டாக அமைத்திருப்பார்கள்.  இந்த அடிப்படை உணர்ச்சிகளை எடுத்துக் காட்டும் லக்ஷணங்களை உள்ளடக்கியது சாருகேசி ராகம். (சீர்காழி கோவிந்தராஜன் திரையில் பாடிய முதல் பாடலான ‘சிரிப்புத் தான் வருகுதையா’ (கல்கி எழுதிய பொய் மான் கரடு நாவலின் திரைவடிவமான ‘பொன்வயல்’ திரைப்படத்தில் வந்தது.) இதே ராகந்தான். இந்தப் பாடலை சீர்காழி ஒரு கச்சேரியில் பாடுவதுபோலத் திரையில் வரும்!) இன்னும் ‘தூது, செல்வதாரடி’ (சிங்காரவேலன்), வசந்தமுல்லை போலே வந்து (சாரங்கதரா), ’தூங்காத கண்ணென்று ஒன்று’ (குங்குமம்) என்ற மிகச் சிறந்த பாடல்கள் எல்லாம் சும்மா ஒரு சாம்பிள் தான்!

     இன்றைய நமது பாடலின் மெட்டு, கே.வி.மகாதேவனால் உருவாக்கப் பட்ட  அருமையான, இனிமையான, சுகமான ஒன்று. 1962ல் வெளிவந்த ‘நீங்காத நினைவு’ படத்திற்காக சுசீலா பாடி மயக்குகிறார். காதலைச் சொல்லுகின்ற ஒரு ராகத்தை, காதலின் சோகத்தைக் குறிக்க மெட்டாக்கிய மகாதேவனின் ஜீனியஸுக்கு இந்தப் பாடல் இன்னுமொரு சான்று.  வயலின்களும், குழல், கிடார், ஸிதார், ட்ரெம்பெட் (Muted - ஒரு அடைப்பானை ட்ரெம்பெட்டின் முகப்பில் பொருத்தி, அதன் ஒலியைப் பெருமளவு குறைத்து விடுவது) இவைகளுடன், பாட்டின் பல்லவிக்கு டேப் எனும் தாளவாத்தியத்தையும், சரணங்களுக்கு தபலாவின் கொஞ்சலையும் உபயோகித்து அசத்துகிறார், கே.வி.எம்.! இதோ, சுசீலாவும் நீங்களும்:




2 comments:

  1. கர்னாடக இசையறிவு எனக்கு சுத்தமாக ஜீரோ
    தங்கள் விளக்கங்க்களைப் படிக்க படிக்க
    இசை அறிவோடு கேட்டல் எத்தனை சுகமானது என
    புரிந்து கொள்ள முடிகிறது
    அருமையான பாடலை பதிவாக்கித்
    தந்தமைக்குபகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. கர்நாடக சங்கீதத்தைச் சரியான முறையில் பாடுவதற்குத்தான் மிகுந்த ஞானமும், பயிற்சியும் அவசியம், திரு.ரமணி! ரசிப்பதற்கும் நுணுக்கங்களை அறிவதற்கும் ஆழ்ந்த ரசனையும், ஆர்வமும் மட்டுமே போதும்! ஏ.ஆர். ரஹ்மானும், இளையராஜாவும் பிரபலமான பின்னரும் முறையான கர்நாடக சங்கீதம் பயின்றார்கள் என்பது வரலாறு! நானும் வெறும் கர்நாடக சங்கீத ஆர்வலன் தான்! இத்தகைய பாடல்களை மனம் ஒன்றி ரசிக்கும் உங்களைப்போன்ற ரசிகர்களுக்கு, கர்நாடக சங்கீத ரசனை பிரும்ம வித்தையல்ல, வசப்படக்கூடிய ஒன்றே! தொடர்ந்த தங்கள் வருகையும் கருத்துக்களும் எனக்கு டானிக் போன்றது. (அல்லது கச்சேரியில் கிடைக்கும் ஒரு ’சபாஷ்’ போன்றது என்று வைத்துக்கொள்ளலாமா?!)

    ReplyDelete