Tuesday, March 6, 2012

சிற்பி செதுக்காத பொற்சிலையே!

சற்று இடைவெளிக்குப் பிறகு, ஒரு நல்ல தமிழ்த் திரையிசைப் பாட்டில் மனதை லயிக்க விடலாம் என்று தோன்றியது.

இன்று நாம் ரசிக்கப் போகும் பாட்டினை, அது வெளிவந்த காலத்தில் ஊரே பாடிக் கொண்டிருந்தது என்றால் நம்ப மாட்டீர்கள்! ஆணாகப் பிறந்தவர்கள் எல்லாம் தங்களை ஏ.எம்.ராஜாவாகவும், பெண்களெல்லாம் ஜிக்கியாகவும் நினைத்துக்கொண்டு பாடிக் கொண்டிருந்தார்கள்!

ஆமாம், எதிர்பாராதது என்ற திரைப்படத்தில் சிவாஜியும், பத்மினியும் இந்தப் பாடலைத் தனித்தனியே பாடுவது போல காண்பித்திருப்பார்கள். இந்தப் படத்தின் கதை வசனத்தை எழுதியிருந்தவர், அப்போது முன்னுக்கு வந்து கொண்டிருந்த செங்கல்பட்டு ஸ்ரீதர். (அதாங்க, நம்ம ஸ்ரீதர்!.) படத்துக்கு இசையமைத்தது C.N.பாண்டுரங்கன் என்கிற (வெளிச்சத்துக்கு வரத்தவறிய) மேதை.

இது (அந்தக் காலகட்டத்தில்) ஒரு புரட்சிகரமான கதை. காதலி வேறொருவனை மணந்து விதவையான பின்னர் காதலனை மறுமணம் செய்துகொள்வார்.

இந்தப் பாடலைத்தவிர இன்னும் சில பாடல்களும் பிரபலமடைந்தன.

ஒரு கூடுதல் தகவல்: எதிர்பாராதது படத்தில், சிவாஜியை, பத்மினி உணர்ச்சிவசப்பட்டுக் கன்னத்தில் அறைவார். பின்னாளில் சிவாஜி சொல்லும்போது, ‘சரியான சமயத்தில் முகத்தைத் திருப்பிக் கொள்ளத் தவறியதால், பலமான அறை பட்டு இரண்டு மூன்று நாட்களுக்கு கன்னம் வீங்கி, படப்பிடிப்பே ரத்தானது’ என்று கூறியிருந்தார்!
(இவர் மட்டும் என்ன? நடிகர் சிவகுமார், உயர்ந்த மனிதன் படத்தில் சிவாஜியிடம் வாக்கிங் ஸ்டிக்கால் அடிவாங்குவார். அந்தக் காட்சி படமான அன்று, படப்பிடிப்புத் தளத்திற்கு வந்த சிவகுமார், ஒரே மாதிரியான வாக்கிங் ஸ்டிக்குகள் பல அடுக்கி வைத்திருந்ததைப் பார்த்தாராம். ’எதுக்கு ஸார், இத்தனை?’ என்று கேட்ட போது இயக்குனர் கிருஷ்ணன் (பஞ்சு), ‘அது வேறொண்ணுமில்லே தம்பி, சிவாஜி யாரையாவது அடிக்கற ஸீன்ல மட்டும் உணர்ச்சிவசப்பட்டு நிஜமாகவே அடித்துவிடுவார், கம்பு உடைந்துவிடும். அதனால், அடுத்த டேக்குக்கு வேணுமில்லே, அதுக்காகத் தான் வெச்சிருக்கோம்’ என்று கூலாக பதிலளித்தாராம்.) சிரித்து முடித்து விட்டு, கீழே இருக்கும் லிங்க்கைச் சொடுக்கி, இந்த நல்ல பாட்டை ரசிக்கலாமே!


Sirpi sedhukkatha Porchilaye

6 comments:

  1. sivaaji yidam ippadi oru palakkamaa viyappaaka irukkirathu.. thanks for sharing..

    ReplyDelete
  2. சிவாஜி பற்றி அறியாத தகவல்களை கொடுத்து நல்ல பாடலையும் தந்தமைக்கு நன்றீ…வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி, திரு மதுரை சரவணன்! சிவாஜி மட்டுமல்ல, பத்மினி, சாவித்ரி போன்ற உன்னதக் கலைஞர்கள் எல்லாருமே (பாத்திரத்தோடு ஒன்றிவிடுவதால்) எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களே!

    ReplyDelete
  4. அறிந்திராத தகவல்கள்..

    சிற்பி செதுக்காத பொற்சிலையே... மிக அருமையான பாடல்.... பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. அருமையான பாடல் பகிர்வுக்கும், சிவாஜி அவர்கள் பற்றிய அறிந்திராத தகவல்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  6. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி, திரு.வெங்கட் நாகராஜ்! சிவாஜியைப் பற்றிய தகவல் திரு.சிவகுமார் அவர்கள் கொடுத்தது!

    ReplyDelete