Wednesday, October 19, 2011

வளரும் பிறையே, நீ போதும்!












ஒரு குளுமையான தாலாட்டைச் சென்ற பதிவில் ரசித்தீர்கள் அல்லவா? இன்று, 1960களில் வெளியான ‘பதிபக்திபடத்திலிருந்து மற்றொரு பிரபலமான சோகத் தாலாட்டை ரசிக்கவிருக்கிறோம். இதே படத்திலிருந்து சுசீலா பாடிய ‘இரை போடும் மனிதருக்கேஎன்ற துள்ளல் பாடலை வேறொரு பதிவில் ரசித்ததை மறந்திருக்க மாட்டீர்கள்.

பதிபக்திபடத்தின் அனைத்துப் பாடல்களையும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதியிருந்தார். பீம்சிங்கின் இயக்கத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்திருந்தார்கள். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் ஜி.என்.வேலுமணி. இவர் சரவணா பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் பல வெற்றிப் படங்களை நமக்குக் கொடுத்தவர்.

இவரைப் பற்றி மேஜர் சுந்தரராஜன் ஒரு முறை குறிப்பிட்டார். மேஜர் சென்னையில் காரில் சென்று கொண்டிருக்கும் போது சாலையில் வேலுமணி வறுமையான தோற்றத்துடன் நடந்து வந்து கொண்டிருந்ததைப் பார்த்தாராம். உடனே காரை நிறுத்தி, ‘என்னண்ணே, எப்படிப் பட்டவர் நீங்கள், நடந்து செல்கிறீர்களே, வாருங்கள், எனது காரிலேயே செல்லலாம்என்று அழைத்தாராம். அதற்கு வேலுமணி அளித்த பதில்: ‘வேண்டாம், தம்பி! இப்போது எனக்கு நடந்து செல்லவேண்டும் என்பதுதான் விதி!காலம் என்பது எப்பேர்ப்பட்டவனையும் சுழற்றி அடிக்கும் என்கிற வாழ்க்கைத் தத்துவத்தை எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறார் பாருங்கள்!

இன்றைய பாடலின் கதையிலும் அத்தகைய சூழ்நிலைதான்! மகன் காதலித்துத் திருமணம் புரிந்த பெண்ணை, அவள் கணவன் வெளியூரில் இருக்கும் போது, குழந்தையுடன் ஊரை விட்டே துரத்துகிறார்,அவன் பணக்காரத் தந்தை. அவள் ஒரு குடிசையில் தன் குழந்தையைத் தாலாட்டிப் பாடுகிறாள்:

‘பாப்பா உன் அப்பாவைப் பார்க்காத ஏக்கமோ,

பாய்ந்தே மடிதனில் சாய்ந்தால் தான் தூக்கமோ,

தப்பாமல் வந்துன்னை அள்ளியே அணைப்பார்,

தாமரைக் கன்னத்தில் முத்தங்கள் விதைப்பார்,

குப்பை தன்னில் வாழும் குந்துமணிச் சரமே,

குங்குமச் சிமிழே, ஆராரோ!

அப்பா, முத்தங்களை ‘விதைப்பாராம்’! அடடா, என்ன ஒரு அழகான கற்பனை! தற்போது அருகில் இல்லாத அப்பாவைப் பற்றிக் கூறிய பின்னர், பட்டுக்கோட்டையார் தன் வழக்கம் போல, குழந்தைக்கு (நமக்கும்!), தன்னம்பிக்கை யையும் ஊட்டத் தவறவில்லை!

‘ஏழை நம் நிலையை எண்ணி நொந்தாயோ,

எதிர்கால வாழ்வில் கவனம் கொண்டாயோ,

நாளை உலகம் நல்லோர்கள் கையில்,

நாமும் அதிலே உயர்வோம் உண்மையில்

என்று கூறும் அவர், எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு தாய்க்கு வேண்டியது தம் மக்களைத் தவிர வேறில்லை என்பதையும் விடவில்லை!

‘மாடி, மனை வேண்டாம், கோடிச் செல்வம் வேண்டாம்,

வளரும் பிறையே, நீ போதும்.....

என்று முடிக்கிறார்! சில சாதாரண வரிகள், ஒரு சாதாரணத் தாலாட்டு, இவை ஒரிரு வித்தகர்கள் கையில் கிடைத்ததும் அது எப்படி எட்டமுடியா உயரத்துக்குச் சென்றுவிடுகிறது என்பதற்கு இந்தப் பாடலே சான்று!

இப்படி ஒரு அழகான பாடலை எழுதிக் கொடுத்துவிட்டார் கவிஞர். இதற்கு இசையமைத்திருக்கிறார்கள் பாருங்கள் மன்னர்கள்! இவர்களை ஏன் மன்னர்கள் என்று அழைத்தார்கள், அதற்கும் மேலே எங்கேயோ உலாவுபவர்கள் அல்லவா இவர்கள் என்று ஆச்சரியப்பட வைக்கும் மெட்டையும், கோர்விசையையும், (பாட்டின் பாவத்தை உள்வாங்கி, கதையின் போக்குக் கேற்ப சோகத்தையும்) வாத்தியங்களின் வாசிப்பில் கலந்து கொடுத்தால்.......உங்கள் திறமைகளுக்கு என்னுடையதும் சளைத்ததில்லைஎன்று மிக மிக உணர்ந்து, அருமையாகப் பாடியிருக்கிறார், சுசீலா!

இந்தப் பாடலும், சிட்டுக்குருவி, முத்தம் கொடுத்துஎன்கிற ‘புதியபறவைப் பாடலும் சுசீலாவின் சாகாவரம் பெற்ற பல பாடல்களில் இரு பாடல்கள் என்பதில் சந்தேகமில்லை!

இந்த இடத்தில் இன்னொரு சமாசாரத்தையும் உங்களுக்குச் சொல்லியே தீரவேண்டும்! ஒரு முறை, நானும் நண்பர் அமுதவனும், இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரனிடம் மெல்லிசைமன்னர்களைப் பற்றிக் குறிப்பிட்ட போது அவர் சொன்னார்:ஸார், அவங்களோட எல்லாம் எங்களை கம்பேர் பண்ணாதீங்க! அவங்க போட்டிருக்கிற ஒவ்வொரு ‘பாக் ரவுண்ட் ம்யூஸிக், ரீ ரெகார்டிங் ம்யூசிக்கை வச்சு நாங்கள்ளாம் பல பாடல்களே போட்டுடுவோம்என்று. இப்படி ஒரு பெயர் வாங்க எத்தனை இசை ஞானம், எத்தனை உழைப்பு வேண்டியிருந்திருக்கும்!

சுசீலாவின் குரலும், வயலின்களின் ஆட்சியும் இந்தப் பாட்டில் பரிபூரணம்! சிதாரும் கிடார் கார்ட்ஸும், தபலாவும், டபிள் பேஸும், (பாட்டின் கட்டக் கடைசியில் மிகச்சிறு இணைப்பு பிட் டாக ஒலிக்கும்) (muted) ட்ரெம்பட்டும்......இப் பாடல், மன்னர்களின் மற்றும் பல பாடல்களைப் போலவே ஒரு முழுமையான மெலடியாக மலர்ந்திருக்கிறது!

(ட்ரம்பெட் என்பது கட்டையான தொனி உடைய ஒரு மேற்கத்திய காற்று வாத்தியம். புதையல் படத்தில் சந்திரபாபு ‘உனக்காகஎன்ற பாட்டில் பின்னிசையில் இதை வாசிப்பார். இந்த வாத்தியத்தின் முன்னால் ஒரு அடைப்பானைப் பொருத்தி, அதன் சப்தத்தைக் கணிசமாகக் குறைப்பார்கள். அப்போது எங்கோ தூரத்திலிருந்து கேட்பது போலிருக்கும். இதை muted trumpet என்பார்கள். இதே பதி பக்தி படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘கொக்கர கொக்கரக்கோ சேவலே என்ற பாட்டிலும், ஜெமினியின் லோகோவின் signature tune னிலும் இந்த ம்யூடட் ட்ரம்பெட் வாத்தியத்தின் தொனியைக் கேட்கலாம்).

இப்போது இந்த இனிமையான தாலாட்டைக் கேட்கலாமா?

Chinnanjiru kan malar by Krishnamurthy80

தொடர்ந்து சில தாலாட்டுகளைக் கேட்டு ரசித்தோம். அடுத்த பதிவில் வேறு வகையான ஒரு பாடலில் சந்திப்போம், நண்பர்களே!

1 comment:

  1. வருகைக்கு நன்றி, திரு.அருள்!

    ReplyDelete