Saturday, October 29, 2011

எம்ஜிஆரும் சீர்காழியும் இரு பாடல்களும்!


எம்ஜிஆரின் படங்கள், வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் அவற்றில் இடம் பெற்றிருக்கும் பாடல்கள் வெற்றிபெறத் தவறியதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். இதற்கு முக்கிய காரணம், அவருக்கிருந்த இசை ஞானம்! (கலைஞர் கருணாநிதியைப் போலவே) ஆழ்ந்த கர்நாடக இசை ரசிகரான அவர் தன் படங்களுக்கான பாடலின் மெட்டை எப்போதும் அவரே தேர்ந்தெடுத்தனால் இது சாத்தியமானது.

டி.எம்.சௌந்திரராஜனின் குரல் தான் எம்ஜிஆருக்கும் (சிவாஜிக்கும்) பொருத்தமானது என்று எல்லாரும் கூறிக் கொண்டிருந்த காலத்தில், எம்ஜிஆருக்கான பாடல்களை அன்றைக்கிருந்த எல்லாப் பின்னணிப் பாடகர்களும் பாடியிருக்கிறார்கள். (அடிமைப் பெண்படம் வெளிவரும் போது எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடகராக இசைத்துறையில் அறிமுகமான சமயம். கே.வி.மகாதேவன் இசையில் ‘ஆயிரம் நிலவே வாபாடலை எஸ்.பி.பி பாடியிருந்ததைக் கேட்ட எம்ஜிஆரின் நெருக்கமான ஒருவர், “அதிகம் பிரபலமாகாத அறிமுகப் பாடகரின் இந்தப் பாடல் வெற்றி பெறுமா?என்ற சந்தேகத்தைக் கிளப்பினாராம். அதற்கு எம்ஜிஆர், “நமக்குப் பாடிவிட்டாரல்லவா, இனி தானாகவே அவர் (எஸ்.பி.பி) பிரபலமாகிவிடுவார், பாருங்கள்என்றாராம்!)

இன்று நாம் ரசிக்கப் போவது ஒரு வெண்கலக் குரலை என்று சொல்லி விட்டால், இந்தப் பாடலை, சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருக்கிறார் என்றும் சொல்லத் தேவையில்லை, அல்லவா?! 1959ல் வெளியான ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலிஎன்ற திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடலுக்கு இசை டி.ஆர்.பாப்பா. சீனியர் இசையமைப்பாளரான இவர் மல்லிகா (ஜெய்சங்கரின் அறிமுகப் படமான) ‘இரவும் பகலும்போன்ற பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

தாய் மகளுக்குக் கட்டிய தாலிதிரைப்படத்திற்கு அறிஞர் அண்ணா கதை, திரைக் கதை மற்றும் வசனமும் எழுதியிருந்தார். இருப்பினும், நீண்ட காலம் தயாரிப்பில் இருந்ததினால் ஏற்பட்ட குறைகளினால் படம் மோசமான தோல்வியைத் தழுவியது. அப்போது வெளி வந்த இந்தப் படத்தின் குமுதம் விமரிசனம் தமிழ்நாட்டில் கொந்தளிப்பையே உருவாக்கியது. ஒன்றுமில்லை, அந்த வார இதழில்இரண்டு பக்கம் விமரிசனம். ஒரு முழுப் பக்கத்தில், படத்தின் ஒரு ஸ்டில். இன்னொரு பக்கம், நடுவில், சின்னதாக, (வேறெதுவுமே எழுதாமல்) கண்ணறாவி என்று போட்டிருந்தார்கள்! குமுதத்தில் ஒரே வார்த்தை விமரிசனம் பெற்றுச் சாதனை படைத்தது தா.ம.க.தாலி மட்டுமே!

ஆனால், சீர்காழியும் (கீச்சுக் குரலில்) ஜானகியும் பாடியிருந்த ‘ஆடிவரும் ஆடகப் பொற் பாவையடி நீ மற்றும் டி.எம்.எஸ்-ஜிக்கி பாடியிருந்த சின்னஞ்சிறு வயது முதல் போன்ற பாடல்களோ, இன்று கூடப் பிரபலம்! பாடல்களை கே.டி.சந்தானம் (இவர் பாடலாசிரியர், நடிகர்) மற்றும் உடுமலை நாராயண கவியும் எழுதியிருந்தார்கள். சீர்காழி பாடியிருக்கும் இந்த ‘ஒன்றல்ல இரண்டல்ல தம்பிபாடல், பாடியவருக்கும், இசையமைத்தவருக்கும் பெரும் புகழ் சேர்த்தத்துடன், எம்ஜிஆரையும் முற்றாகக் கவர்ந்து விட்டது.

எந்த அளவிற்கு என்றால், பின்னாளில் அவர் தயாரித்து, இயக்கி இருவேடங்களில் நடித்து மாபெரும் வெற்றியடைந்த ‘நாடோடி மன்னன்‘ திரைப் படத்தில் இதே போல ஒரு பாடலை இடம் பெறச் செய்தார்! எஸ்.எம்.சுப்பையாநாயுடு இசையில் ‘உழைப்பதிலா, உழைப்பைப் பெறுவதிலா இன்பம்‘ என்ற அந்தப் பாடலையும் சீர்காழியே பாடினார்! அந்தப் பாடலும் சீர்காழியின் மகுடங்களில் ஒன்றானது!

ஒன்றல்ல இரண்டல்ல தம்பிபாடல், தமிழ்நாட்டின் சிறப்புகளை யெல்லாம் வரிசைப்படுத்துகிறது. எம்.கே.டி.பாகவதரின் பிரசித்தி பெற்ற மன்மத லீலையை வென்றார் உண்டோ, மற்றும் சிவாஜியின் ‘வசந்த முல்லை போலே வந்துபாட்டுக்களின் ராகமாகிய சாருகேசியில் ஆரம்பித்து, சிவாஜியின் மகாராஜன் உலகை ஆளுவான், மற்றும் மாதவிப் பொன் மொழியாள் பாட்டுக்களின் ராகமான கரகரப்ரியாவை இணைத்து, இரண்டு ராகங்களின் கோர்வையாக (‘ராக மாலிகையாக) அமைந்திருக்கிறது. இந்தப் பாட்டின் தாளம் தபலாவுடன் (குதிரையின்) குளம்புச் சத்தமும் சேர்த்து பாடல் முழுவதும் ஒரே கதியில் (அதாவது வேகத்தில்) பயணிக்கும்.

கோர்விசையிலும், சில சமயம் பாடகருடனும் சேர்ந்து ஒரு சீழ்க்கை (விஸில்) சத்தம் வருகிறதல்லவா அதற்கு Metal flute என்ற காற்று வாத்தியம் உபயோகிக்கப் பட்டிருக்கிறது. மரத்தாலான புல்லாங்குழலைப் பார்த்திருப்பீர்கள். இந்த மெட்டல் ப்ளூட் என்பது உலோகத்தால் ஆனது. மொத்தமே அரை அடி நீளத்தில் (நாதசுரம் போல) நேர் வாக்கில் வாசிப்பார்கள். குளம்புச் சத்தம் எப்படி வருகிறது தெரியுமா? ஒரு அரைக் கொட்டாங்கச்சியையும் ஒரு சிறு (தடியான) குச்சியையும் முறைப்படி உபயோகப் படுத்துவதனால் வரும் ஒலி அது!

காதிலும், கருத்திலும் நெஞ்சத்தை நிறைக்கும் இந்த அருமையான பாடலை இப்போது கேட்போமா?

Ondralla Irandalla Thambi by Krishnamurthy80

இன்னொரு பதிவில் சந்திக்கலாம், நண்பர்களே!

2 comments:

  1. ஒவ்வொரு கச்சேரியிலும் தேவன் கோவில் மணியோசை என்ற பாடலுடன் தொடங்கி அந்தக் கோவில் மணியோசை போன்றே தன்னுடைய வெண்கலக்குரலில் பாடல்களைப் பாடி அசத்துவார் சீர்காழி. அவரை அடையாளப்படுத்தும் வேறு நிறையப் பாடல்களும் இருக்கின்றன. தொடர்ந்து கவனம் செலுத்துவீர்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. நன்றி, அமுதவன். ஏராளமான பாடல்கள் காத்திருக்கின்றன.காலம் கனிந்தால்....!

    ReplyDelete